Search This Blog

Thursday, December 31, 2015

வெள்ளரியின் பலன்கள் 5


கருவளையம்: கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்‌ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண் வீக்கம்: கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள்வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

சருமப் பொலிவு: வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.


புற ஊதா கதிர்வீச்சு: சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

முடி வளர்ச்சி: வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.


ஆரோக்கியம் காக்க வழிகள் 10

கம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்ற எர்கனாமிக்ஸைக் கவனிக்க வேண்டும்.
 கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்தால் ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம்.

எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் இடத்திலேயே (டெஸ்க்கில்) அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.

நடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்துகொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

மேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.

வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல் நினோ

இந்த ஆண்டின் இறுதி, மறக்க முடியாத சோகத்தை அளித்திருக்கிறது. சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல லட்சம் மக்களைத் தெருவில் வரவைத்தது பேய் மழை. ‘எல் நினோ’ எனும் உலக வானியல் நிகழ்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த ‘எல் நினோ’-வின் காரணத்தால், வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடும் என்ற பெரும் பீதி கிளம்பியது. 


‘எல் நினோ’ என்றால், ஸ்பானிஷ் மொழியில்  ‘குட்டிப் பையன்’ என்று பொருள். ‘குழந்தை ஏசு’ என்றும் பொருள்படும். தென் அமெரிக்க பசிபிக் கடலில், பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் வெப்பமாக இருப்பதை மீனவர்கள் கண்டனர். இந்த நிகழ்வுக்கு ‘எல் நினோ’ என்று பெயர் வைத்தனர். டிசம்பரில் ஏற்படும் எல் நினோ, அடுத்த ஒன்பது மாதங்கள் நீடித்து, உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எல் நினோவுக்கும் பசிபிக் கடலின் வானிலைக் காற்றழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பசிபிக் கடலின் மேற்கில், குறைவான காற்றழுத்தம் இருந்தால், எடை இல்லாத தராசுத் தட்டு மேலே செல்வது போல பசிபிக் கடலின் கிழக்கில், காற்றழுத்தம் கூடுதல் அடையும். அதேபோல, மேற்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால், கிழக்குப் பகுதியில் அதிகரிக்கும். ஊஞ்சல் போல அலையும் இந்த வானிலை மாற்றத்தை, தென் பகுதி அலைவு (Southern Oscillation) எனப்படும். எனவே, எல் நினோவையும் தென் பகுதி அலைவையும் சேர்த்து, ‘என்ஸோ’         (ENSO-El Nino Southern Oscillation) என்று வானிலையாளர்கள் அழைக்கின்றனர்.


எல் நினோ நிகழ்வின்போது, கிழக்கு பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பம் அதிகரிக்க, கடல் நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. எனவே, எல் நினோ ஏற்படும்போது, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் மழைப் பொழிவு கூடுதல் அடைகிறது. அதிக மழைப் பொழிவால், கிழக்கு பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டத்தில், அதிக வெள்ளம் ஏற்படும். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்படுவது முதல், ஆஸ்திரேலியாவில் புயல் மழை வரை இதன் விளைவுகள் அமையும்.

சரி, இந்த நிகழ்வு இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? எல் நினோ- என்ஸோ அலைவுக்கும், இந்திய வானிலைக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு. எல் நினோ ஆண்டுகளில், மேற்கில் இருந்து கடல் நீர் வெப்பம் அடையத் துவங்கி, மத்திய பசிபிக் வரை வெப்பம் அடையும். பசிபிக் கடலில் குவியும் வெப்ப நீர்த்திரளின் காரணமாக, புவியின் பல பகுதிகளிலும் வானிலை வெகுவாகத் தாக்கம் பெறும். இந்தோனேஷியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் காரணமாக, இந்திய நிலப்பரப்பின் மேலே இருந்து பசிபிக் கடல் நோக்கிக் காற்று பாயும். இதன் காரணமாக, தென் மேற்குப் பருவக் காற்று வலிமை குன்றி, இந்தியாவில் மழைப் பொழிவு குறையும்.


132 ஆண்டுகால இந்திய வானிலை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் வறட்சி ஏற்பட்ட ஆண்டுகள் எல்லாம் ‘எல் நினோ’ நிகழ்வு ஆண்டுகளே.  ஆயினும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எல் நினோ வில்லன் எனச் சொல்ல  முடியாது. தென்மேற்குப் பருவ மழையை, எல் நினோ கடுமையாகப் பாதித்தாலும், அதன்பின் ஏற்படும் வடகிழக்குப் பருவ மழை கிடைக்கும். எல் நினோவின் தங்கையாகிய ‘லா நினோ’ என்பது, ‘குட்டிப் பெண்’ என்று பொருள்படும். லா நினோ விளைவு, இந்திய தென் மேற்குப் பருவ மழைக்கு உதவும்.

- த.வி.வெங்கடேஸ்வரன்


2015 முக்கிய நிகழ்வுகள்!

திட்டக் குழுவை மாற்றி அமைத்தார்  மோடி! 
மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை   இந்த ஆண்டின் முதல் நாளன்றே, அதாவது ஜனவரி 1-ம் தேதி அன்றே செய்யத் தொடங்கியது. அதில் முக்கியமானது, இந்தத் திட்டக் குழு மாற்றம். இந்தத் திட்ட குழுவின் பெயரை ‘நிதி ஆயோக்’ என்று மாற்றினார்.

பத்து பேர் கொண்ட இந்த ‘நிதி ஆயோக்’ குழுவின் துணைத் தலைவராக, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த  இந்தத் திட்டக்  குழுவின் பெயரை மாற்றியது இந்த ஆண்டின் அதிரடி அரசியல் மாற்றங்களில் ஒன்றாகும்! 

பங்குச் சந்தையின் கருப்பு திங்கள்!

2015 ஆகஸ்ட் 24-ம் தேதி திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை பெரிய சரிவை சந்தித்தது.  அன்று சந்தை முடிவில்  சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகளும், நிஃப்டி 490.95 புள்ளிகளும் சரிந்தன. இதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப் பெரிய சரிவாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் 2008-ல் உலகச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால், ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 1408 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல்!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் நடவடிக்கைகளை செயல்படுத்த ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் மோடி. இதன் மூலம் பல நிறுவனங்களில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும், சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது. டிசிஎஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 60,000 பேருக்கு வேலை வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சொல்லி இருக்கிறார்.

ஏஜென்ட்டுகள் தவறு செய்தால் ரூ. 1 கோடி!

காப்பீட்டு நிறுவன முகவர்கள் தவறு செய்தால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என காப்பீட்டு கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ. புதிய விதிமுறையைப் பிறப்பித்துள்ளது. அதேபோல, முகவர்கள் விதிமுறையை மீறி செயல்பட்டால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு முகவர் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்காக மட்டும் பணியாற்ற முடியும் என்றும் சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.!

பழைய கார்களுக்குத் தடை!

வாகனங்களால் காற்று பெருமளவில் மாசுபடுவதால், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஹரியானா போன்ற மாநிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் இயங்கும் டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேல் இயங்கும் பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாணையம். மீறி பயன்படுத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சனிக்கிழமை தாக்கலான மத்திய பட்ஜெட்! 

மத்திய அரசின் பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படும். இதுவரை இது வாரநாளாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம், 15 ஆண்டுகளுக்குப்பின்  சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது.  கடந்த    1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி  அமைச்சராக இருந்த போது சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி!

2006-ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப் படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%்) அதிக ரித்து ஃபெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெ ரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், இந்தியச் சந்தையி லிருந்து வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் வெளியேறும் என்றும், சந்தை சரியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின.

 மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இருந்து வெளியேறியது ரெலிகேர்!

 ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ரெலிகேர் நிறுவனம் 51 சதவிகித பங்குகளையும் இன்வெஸ்கோ நிறுவனம் 49 சதவிகித பங்குகளையும் வைத்திருந்தது. ரெலிகேர் தனது 51 சதவிகித பங்கையும் இன்வெஸ்கோ நிறுவனத்திடமே விற்றுவிட்டு, மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸிலிருந்து   வெளியேறியது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறை சீராக வளர்ச்சி அடைந்த  நிலையிலும், ரெலிகேர் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையின் புதிய உச்சம்!

2008 சரிவின்போது சுமாராக 8500 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வந்த சென்செக்ஸ், 2015 மார்ச் மாதம்  30,024 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.

போலாரீஸ் நிறுவனத்தை கைப்பற்றிய வெர்சூசா!

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட போலாரீஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், கோர் பேங்கிங் கன்சல்டிங், கார்ப்பரேட் பேங்கிங், வெல்த் அண்ட் அஸெட் மேனெஜ்மென்ட், இன்ஷூரன்ஸ் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது.  இந்த போலாரீஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா  நிறுவனம் ரூ.1,173 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. 

கார்பன் சிக்கலில் மதர்சன் சுமி!

வோக்ஸ் வோகன் கார் நிறுவனத்தின் கார்பன் வெளியீடு ஊழலைத் தொடர்ந்து அதன் முக்கிய சப்ளையரான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத் தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. 05 ஆகஸ்ட் 2015-ல் 395 ரூபாய்க்கு வர்த்தகமான இந்தப் பங்கு இந்த செய்தி வெளியானபின் 01 அக்டோபர் 2015 அன்று 217 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.

69% இறங்கிய ஆம்டெக் ஆட்டோ!

ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியா ளரான இந்த நிறுவனம் கூடுதல் கடன் சுமை, மூலப்பொருட்களின் விலை அதிகரித்தது, நிகர விற்பனை குறைந் தது, இதை எல்லாம் விட இன்வென்ட்ரி லாஸ் 252 கோடி ரூபாயாக அதிக ரித்தது, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறைந்தது போன்ற செய்திகளால் இந்தப் பங்கின் விலை 69% சரிந்தது.

ஐந்து நிமிடங்களில் விற்ற 60,000 மேகி பாக்கெட்டுகள்! 

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காரீயம் உள்ளது என்று அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. பிற்பாடு அந்த  தடை விலக்கப்பட்டது. இந்த நிலையில் நெஸ்லே ஸ்னாப்டீலுடன் இணைந்து ஆன்லைனில் மேகி விற்பனையைத் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

ஜாக்பாட் அடித்த ஐபிஓகள்! 

2015-ல் ஐ.பி.ஓ.கள் மூலம் சுமார் ரூ.11,000 கோடி  திரட்டப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.3,025 கோடியை திரட்டியது. காபிடே ரூ.1,150 கோடியும் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ரூ.1,037 கோடியும் திரட்டின.

ரூ.765 ரூபாய்க்கு பட்டியலான இண்டிகோ பங்கு விலை தற்போது ரூ.1150-க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. எஸ்.ஹெச்.கேல்கர் பங்கின் விலை ரூ.180-க்கு பட்டியலானது, தற்போது ரூ.240-க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால், காபிடே பங்கு விலை ரூ.328-க்கு பட்டியலானது. ஆனால், இப்போது ரூ.275-க்கு வர்த்தகமாகி வருகிறது.

டீமேட் கணக்குகள் அதிகரிப்பு!

2015 ஜுன் 30 வரை  முடிந்த ஓராண்டில்  ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.4 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக என்எஸ்டிஎல் தெரிவித் துள்ளது. ஜூன் 30  வரை மொத்தம் 2.37 கோடி டீமேட் (இது அதற்கு முந்தைய ஆண் டில் 2.2 கோடியாக இருந்தது) கணக்குகள் உள்ளன. இந்த டீமேட் கணக்குகளில் உள்ள  மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.131.26 லட்சம் கோடி ஆகும்.  இது முந்தைய ஆண்டைவிட 29% அதிகம். திருப்பதி வெங்கடாசலபதியின் பெயரில் டீமேட்  கணக்கு தொடங்கப்பட்டுள்ளது!

வராமலே போன ஜி.எஸ்.டி.!

இந்த ஆண்டிலாவது நிச்சயம் நிறைவேறும் என்கிற மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது பொருள் மற்றும் சேவை வரி மசோதா.  ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேறாமல்  தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் கடைசியாக நடந்துமுடிந்த  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது பாரதிய ஜனதா அரசாங்கம். இதற்காக பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை கடைசி வரை தரவே இல்லை. 2016-லாவது இந்த மசோதா நிறைவேறுமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது!

கைமாறிய ஸ்பைஸ் ஜெட்!

2010 முதலே தொடர்ந்து விலை இறங்கிவந்த ஸபைஸ்ஜெட் நிறுவனத்தின்  பங்கு விலை 2014-ம்  ஆண்டு ஆகஸ்ட் 14-ல் 11 ரூபாய்க்கு வர்த்தகமானது. பல்வேறு பிரச்னைகளால் இந்த நிறுவனம் நஷ்டத்தையே கண்டுவந்த நிலையில், இந்த நிறுவனத்தை தொடங்கிய அஜய் சிங்கே மீண்டும் அதை வாங்கினார்.

அதிகரித்த விமான பயணிகளின் எண்ணிக்கை, விமான எரிபொருளின் விலை குறைவு போன்ற சாதகமான அம்சங்களால் இந்தப் பங்கின் விலை அதிகரித்து, தற்போது சுமாராக ரூ.69-க்கு வர்த்தகமாகி வருகிறது.

4ஜி சேலஞ்ச்: வரிந்துகட்டும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

இந்திய செல்போன் தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் இந்த 4ஜிதான். இந்தியாவில் 4ஜி சேவை தர முதலில் இறங்கியது ஏர்டெல். இதனை அடுத்து ஏர்செல், ரிலையன்ஸ், ஐடியா மற்றும் வோடாபோன் என அனைத்து மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் 4ஜி-யை அறிமுகப்படுத்த உள்ளன. 4ஜி சேவை  நம் மக்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது 2016-ல் தான் தெரியும்.

தங்கம் இறக்குமதி  அதிகரிப்பு !

தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க மத்திய அரசு எத்தனையோ நடவடிக் கைகளை எடுத்துப் பார்த்தது. ஆனால், நடப்பாண்டில் (2015) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத் தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 11%  அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.சா.கெளதமன், ஜெ.சரவணன்.

2015 பெஸ்ட் கேட்ஜெட்ஸ்!

மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ் (Microsoft HoloLens) 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முற்றிலும் ‘அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்’ கேட்ஜெட்டாக வலம் வருகிறது மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ். இதை மூக்குக் கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் கண் எதிரே காண்பது, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஒரு பைக்கினை டிசைன் செய்கிறீர்கள் எனில், இந்த லென்ஸை அணிந்துகொண்டு பார்த்தால், அந்த பைக்கின் முன்மாதிரி உங்கள் கண்முன் தெரியும். இந்த பிம்பங்களை உங்கள் கைகள் அல்லது குரலை பயன்படுத்தி, உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். விலை: ரூ.80,000 - ரூ.99,999.

பிரின்ட் கேஸ் (Print Case) 


இதன் மூலம் உங்கள் மொபைலை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்றிக்கொள்ளலாம். இது வெறும் மொபைல் கேஸ்தான். இதனை உங்கள் மொபைலுக்கு அணிவித்தால் போதும். உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இதற்கென்றே பிரத்யேக ‘ப்ரின்ட் ஆப்’-ல் நீங்கள் பதிவேற்றம் செய்து இந்த கேஸினுள் வைக்கப்பட்ட போட்டோ ஷீட்டில் உங்களுக்கான போட்டோவை பிரின்ட் செய்து, இந்த கேஸின் மறுமுனையில் அந்த பிரின்டட் போட்டோவை பெற்றுக் கொள்ளலாம். கேமராக்களோடு இருந்த பிரின்ட் ஆப்ஷன் தற்போது மொபைலுக்கு தாவியுள்ளது. விலை ரூ.6,500 - ரூ7,000.

லைவ்ஸ்க்ரைப் 3 ஸ்மார்ட்பென் (Livescribe 3 Smartpen)


ஸ்மார்ட் ஆக்ஸசரீஸ் வரிசையில் இப்போது பேனாவும் வந்துவிட்டது. லைவ்ஸ்க்ரைப் நோட்புக்கில் நீங்கள் எழுதுவதை இதன் இன்ப்ரா ரெட் கேமரா பதிவு செய்யத் தொடங்கும். அந்தக் கணத்திலேயே உங்களைச் சுற்றி கேட்கும் ஒலியை அந்த நோட்ஸுடன் ஸிங்க் செய்து இதன் பிளாஷ் மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ஸ்மார்ட் பென். கையில் பேனா பிடித்திருக்கும் உணர்வையே மறக்கச் செய்யும் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்பென்னில் 400 முதல் 800 மணி நேரங்கள் வரையிலான ஆடியோக்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி 14 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. விலை ரூ.86,000 – 1,00,000

அமேசான் எகோ (Amazon Echo)

இந்த வருடம் முழுவதும் கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை அனைத்து நிறுவனங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பில் மும்முரமாக இருக்க அமேசான் தன் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக பரிசளித்தது இந்த அமேசான் எகோ. வாய்ஸ் கண்ட்ரோல்டு ஸ்பீக்கர் என்பதைத் தாண்டி நிற்கும் இதன் ஸ்பெஸிஃபிகேஷன்கள் சந்தைக்கு புதிது. ‘அமேசான்’ அல்லது ‘அலெக்ஸா’ என்ற கட்டளைச் சொல்லின் மூலம் இயக்கப்படும் இதனிடம் நீங்கள் டைம், வெதர் ரிபோர்ட் கேட்கலாம்; டைமர் செட் செய்யலாம், மளிகை லிஸ்ட் தயார் செய்ய சொல்லலாம்.இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை கேட்கலாம். கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியின் ஸ்கோர் பற்றி விவாதிக்கலாம் இன்னும் எவ்வளவோ என நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். விலை ரூ.12,500 முதல்...

ஃபிட் பிட் சார்ஜ் ஹெச் ஆர் (Fit Bit Charge HR) 


2015-ம் ஆண்டின் சிறந்த ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இது. ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பன நம் இதயத்துடிப்பு, நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு, நாம் நடக்கும் தூரம் போன்ற உடலின் சில முக்கிய ஹெல்த் ஃபாக்டர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வாட்ச் போன்ற கருவியாகும். மற்ற எல்லா ஃபிட்னஸ் ட்ராக்கர்களும் தினந்தோறும் நாம் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதில் ஏதேனும் ஒரு பிழை இழைத்தாலும் இது தனக்கான வேலையை மிகத் துல்லியமாக செய்து முடிக்கிறது. தானாகவே செயல்படத் துவங்கும் ஸ்லீப் ட்ராக்கர், வைரேஷன் வசதி கொண்ட அலாரம், குறைந்த விலை ஆகியவை மற்ற ஃபிட்னஸ் ட்ராக்கர்களை விட இந்த ஃபிட் பிட்–ஐ சந்தையில் முதலிடம் பிடிக்க வைத்திருக்கி்றது.விலை ரூ.12,900 முதல்...

சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 (Sony Smartwatch 3)
ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., பெப்பிள் என ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பல ஜாம்பவான்களின் தலை தென்பட்டாலும் சோனியின் பங்களிப்பு மிகவும் நுட்பமானது. இதன் GPS-இல் ஆப்பிள் தோற்றுப் போனது. இதன் வசீகரமான ஸ்லீக்கி டிசைனில் சாம்சங் தோற்றுப் போனது.

இதன் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிங் வசதிகள் மற்றும் விலையே பெப்பிள், மோட்டோரோலா, எல்.ஜி. போன்ற பெரு நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளை சந்தையில் பின்னுக்கு தள்ளியதற்கான முக்கியக் காரணிகள். விலை ரூ. 17,000 முதல்...

ஸ்ரீ.தனஞ்ஜெயன்

Saturday, December 12, 2015

சேவையே மேலான பாக்கியம்!





மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும் பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட, அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.


நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

Friday, December 11, 2015

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

சந்தையில் கொட்டிக் கிடக்கும் கேட்ஜெட்டுகளை அலசி ஆராய்ந்து அக்கறையுடன் தருகிறோம் உங்களுக்காக...

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

மோட்டோரோலாவின்  புதிய வரவு  ‘Moto X Force’. மோட்டோ போன்களின் வரிசையில் புதிய தொழில் நுட்பத்துடன் அறிமுகம் ஆகியுள்ளது. ஸ்மார்ட் போன்களில் திரை பாதிப்புக்குள்ளாகாத கொரில்லா க்ளாஸ் தொழில் நுட்பமே பயன்படுத்தப் பட்டு வந்தது. ஆனால் அதனைவிட அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ஷட்டர் ஷீல்டு க்ளாஸ் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தடுக்கு க்ளாஸ் அமைப்புதான் இதனை பாதுகாக்கிறது என்பதே இதன் சிறப்பு. தவறுதலாக கீழே விழுந்தாலும் உடையாது என மோட்டோரோலா கூறியுள்ளது.
மோட்டோ எக்ஸ் வகை ஸ்மார்ட் போன்களில் சிறப்பான அம்சங்களைக்கொண்ட போனாக விளங்குகிறது. மோட்டோரோலா எக்ஸ் ஃபோர்ஸ்  மோட்டோ எக்ஸ் ஸ்டைல் போன்ற அம்சங்களுடன் காணப்பட்டாலும், ப்ராஸசர் Snapdragon 810 , 3ஜிபி ரேம், பேட்டரி செயல் திறனில் எக்ஸ் வகை போன்களில் அதிகபட்சமாக 3760mAh உடன் ஃபோர்ஸ் வேறுபடுகிறது.

மெமரியை பொறுத்தவரை, 32  ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் எக்ஸ்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. முன்பக்க கேமரா 5 மெகா பிக்ஸலாகவும், பின்புற கேமரா 21 மெகா பிக்ஸலாகவும் உள்ளது.

இதில் ஒரே ஒரு சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். மல்டி சிம்கார்டு பயன்படுத்துபவர்கள், இந்த போனை கவனிக்கத் தேவையில்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.25,000-லிருந்து துவங்குகிறது.

5.4-inch shatterproof display
3GB RAM
32 and 64GB variants with 2TB microSD card support
sports a 21MP rear camera and 5MP front camera
128 ஜிபி வரை நீட்டிக்கும் எக்ஸ்டர்னல் மெமரி வசதி

ஸ்மார்ட் கீ!


ஸ்மார்ட் கீ... இது ஜஸ்ட் நம்ம ஹெட் போன்ல உள்ள ஜாக் மாதிரியான டிவைஸ்தான். இந்த கருவியை  நம் போனில் இணைத்து விட்டு,  ஸ்மார்ட் கீ கேட் லாக்ல இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்து ‘க்ளிக்’  செய்தால், எந்த ஆப்ஸும் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். அதில் 3 ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்

சிங்கிள் க்ளிக்ல ஆரம்பித்து, 3 க்ளிக் வரைக்கும் இருக்கும் ஆப்ஷன்களில் ஒவ்வொரு க்ளிக்குக்கும் ஒரு செயலை  ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.

உதாரணமாக, முதல் க்ளிக்கில் ஆங்ரி பேர்டு கேம்ஸ் ஓப்பன் ஆகணும், இரண்டு க்ளிக் பண்ணா, வாட்ஸ் அப் ஓப்பன் ஆகிற மாதிரி செட் செய்துகொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட் கீ செல்போன் ஓப்பன்ல இருக்கும் போதும்,  லாக்-ல இருக்கும்போதும் இரண்டு மோட்லயுமே வேலை செய்யும். இதோட விலை 85 ரூபாய்தான். அமேசான் மாதிரியான இ-காமர்ஸ் தளங்களில் இது கிடைக்கிறது.

suitable for all android phone (above 4.0)
one key for call sos, taking photo, gps, voice record open apps
இதோட விலை 85 ரூபாய்தான்

ச. ஸ்ரீராம்