Search This Blog

Tuesday, November 03, 2015

அடங்காத டெங்கு! எச்சரிக்கை ரிப்போர்ட்!

“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று மதுரையில் தொடரப்பட்ட வழக்கில், “டெங்குவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது டெங்கு. சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உள்ள இந்தக் காய்ச்சலின் பாதிப்பு காரணமாகப் பலர் பலியாகி வருகின்றனர். இதன் தீவிரத்திலிருந்து தப்பிப்பது எப்படி?
 
டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன?

“டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் வைரஸ் நோயாகும். இது நான்கு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப் படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.”

நோய்க்கான அறிகுறிகள் என்ன?

“திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சருமத்தில் வேனிற்கட்டிகள், வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவத் தொடங்கும். இதனுடன் தசைவலி, மூட்டுவலி, தலைவலி ஏற்படும்.”

எப்படிக் கண்டறிவது?

“வெள்ளை அணுக்களின் மொத்த அளவைப் பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந் திருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவாகக் காணப்படும். டெங்கு வைரஸுக்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்புச் சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவை இந்த நோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும்.”

இதற்கான மருத்துவம் என்ன?

“டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை ஓய்வும், திரவ வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படு வதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டா மினோஃபென் மாத்திரைகளும் அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்துக்கும் குறைவாக இறங்கும் போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி.ஆர்.பி. ஏற்றப்படும்.”

டெங்கு காய்ச்சலின் போது சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன?

“ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதரச் சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்துக்கும், நன்றாகச் சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும். டெங்கு காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சிதான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது. இளநீரை நிறைய குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோ லைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. கேரட், வெள்ளரி மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

நிறைய பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ரா பெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றைச் சாப்பிடுவது நலம்.

பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்புக்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப்பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவுக்குச் சுவையையும் தருகின்றன. சிட்ரிக் அமிலம் நிறைந்திருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே எலுமிச்சையும் செரிமானத்துக்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.”

டெங்கு காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

“நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்களினால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் நீரை, அப்புறப்படுத்துதல் அவசியம். பயன்படுத்தப்படாத டயர், அம்மி, உரல் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளி தொட்டியில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு தூய்மைப்படுத்த வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை உடனே அணுகவேண்டும்.”

 
 வனராஜன்

 

No comments:

Post a Comment