Search This Blog

Saturday, August 15, 2015

செந்தூர் கடற்கரையில்... - தீர்த்தங்களின் மகிமை !

'வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை’ என்று புறநானூறு போற்றும் புண்ணியம் பதி திருச்செந்தூர். முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான இத்தலம் கடல் சார்ந்தது என்பதால், ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பார்கள் பெரியோர்கள்.
இதுமட்டுமல்ல, இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இந்தத் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படு கிறது. இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டு களும் காணாமல் போய்விட்டனவாம். சிறப்புமிகு 24 தீர்த்தங்களை நாம் அறிந்துகொள்வோமா?


முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத் துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.

சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன் னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்கை தீர்த்தம் சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.

ஞானதீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவு வதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம் களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம் தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம் காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம் சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம் இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம் இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

மேலும், கோயிலுக்குத் தெற்கே 200  மீட்டர் தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. சமுத்திரக்கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்துள்ளது கந்தப்பெருமானின் அருளாடலேயாகும். இதில் மூழ்குவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.

இத்தகு தீர்த்தச் சிறப்புகள் மிகுந்த திருச்செந்தூருக்கு, ஆடி அமாவாசை அன்று சென்று புனித நீராடி, முன்னோரை ஆராதித்து அருள்பெற்று வருவோம்.

வினோத் குருக்கள்

No comments:

Post a Comment