Search This Blog

Tuesday, May 19, 2015

கியாஸ் சிலிண்டர் விபத்து 50 லட்சம் வரை இழப்பீடு!

‘கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப் பட்டவர்/குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்’ என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷூரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரை, மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரை, உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரை உண்டு. எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம் வரை வழங்கப்படும். எப்படியாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு மொத்தத்தில் 50 லட்சம் வரையே இழப்பீடு.

இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ/மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.

இந்த இன்ஷூரன்ஸ் பலன்களை ஒருவர் அனுபவிக்க வேண்டுமானால், பின்பற்றவேண்டிய மிகமுக்கியமான விதிமுறைகள் சில உள்ளன.

பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும்.

விதிகளைப் பின்பற்றுவோம்... இன்ஷூரன்ஸ் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம்!

சா.வடிவரசு

1 comment:

  1. அன்பு நண்பரே!
    மிகவும் பயனுள்ள தகவல்!
    அனைவரும் அறிய வேண்டிய
    செய்தியை...
    அரிச் சுவடிபோல் அறியத் தந்தமைக்கு
    பாராட்டுக்கள்!
    இருப்பினும் இதுபோன்ற விபத்துக்கள்
    நிகழாது இருக்கவே வேண்டுவோம்.
    நன்றி!
    நட்புடன்,,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete