Search This Blog

Saturday, December 06, 2014

குழந்தைகளுக்கும் யோகாசனம்


இந்தியப் பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய இடம் உண்டு. நம் சித்தர்கள் கண்டுபிடித்த இது, காலங்களைக் கடந்து நிற்கும் ஓர் அறிவியல்முறை ஆகும்.
ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமற்ற சக மாணவர்கள், புரிந்தகொள்ளாத பெற்றோர், பாடத்திட்டப் பளு, தேர்வுகள் தரும் அழுத்தம் போன்றவற்றால் இந்தக் காலத்து மாணவர்கள் மன அழுத்த பாதிப்பால் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். தொடரும் மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படுகிற ரசாயன மாற்றங்கள் உடல் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராடு பிரச்னை, முதுகுவலி, கால்வலி என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் மாத்திரை மருந்துகள் மட்டும் போதாது; யோகாசனங்களும் தேவை.

குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டாலே யோகப் பயிற்சிகளைக் கற்றுத்தர ஆரம்பித்துவிடலாம். யோகாவைப் பொறுத்தவரை முறையாகப் பயிற்சிகளைச் செய்தால் மட்டுமே உரிய பலன் கிடைக்கும். எனவே, தரமான பயிற்சியாளர் உதவியுடன் யோகாவைக் கற்றுக் கொள்வது நல்லது.

தொடக்கத்தில் எளிய அசைவுகள் உள்ள பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். பயிற்சி ஒன்றுக்கு ஒரு நிமிடம் வீதம் சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்தால் போதும். யோகப் பயிற்சிகளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், தனுராசனம்,சுகாசனம், சவாசனம், சேது பந்தாசனம், புஜங்காசனம், அர்த்த சர்வாசனம், சிங்காசனம், பிரம்மாசனம் பத்மாசனம். போன்றவற்றைத் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்ய வேண்டும். முதன்மை ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு கழுத்தை அசைப்பது, கை, கால்களை நீட்டி மடக்குவது, முதுகை வளைத்து, நிமிர்த்துவது போன்ற ஆரம்பகட்ட தசைப்பயிற்சிகளைச் செய்து கொள்வது நல்லது.

குழந்தைப் பருவத்திலேயே யோகா கற்றுக்கொண்டால், உடல் தசைகளின் இயக்கம் எளிதாகும். முகத்தில் தெளிவு பிறக்கும். மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறும். சரியான முறையில் மூச்சுவிட முடியும். மூச்சு சுத்தமாகும். இதன் மூலம் ரத்தமும் சுத்தமாகும். செய்யும் பணியில் கவனம் கூடும். கவனச் சிதறல் மறையும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆரோக்கிய உணவுமுறையைப் பின்பற்றுவார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பலப்படும். தன்னம்பிக்கை பெருகும். மனதில் அமைதி குடிபுகும். மன அழுத்தம் மறையும். எரிச்சல், கோபம், வெறுப்பு போன்ற கெட்ட குணங்கள் விலகும். குழந்தைகளின் இன்றைய ஆரோக்கியம் மட்டுமல்ல எதிர்கால ஆரோக்கியமும் காக்கப்படும்.

No comments:

Post a Comment