Search This Blog

Sunday, September 28, 2014

செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில்

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை  மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங்   தொடங்கியது.

சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போன்களை இன்றைய இளைஞர் கள் வாங்கத் துடிப்பதை  ஆன்லைன் நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. இனி எந்த போனையும் தொட்டுப் பார்த்து வாங்கத் தேவையில்லை. நல்ல பிராண்ட் நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் கள் நன்றாகவே இருக்கும் என எல்லோரும் நினைப்பதால், பலரும் ஆன்லைனிலேயே வாங்க விரும்பு கின்றனர்.

தவிர, கடைகளைவிட 10% விலையும் குறைவாகக் கிடைப்பது, வீடு தேடி பொருள் வந்துவிடுவது ஆகிய காரணங்களினாலும் பலரும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே விரும்புகின்றனர்.  இதனால் கடைகளில் செல்போன் விற்பனை 12 - 14% குறைந்துள்ளதாம்.
 
இத்தனை நாட்களாக ஆன்லைன் நிறுவனங்களின் நடவடிக்கைகளை  பொறுமையாகப் பார்த்துவந்த நேரடி விற்பனை நிறுவனங்கள், இப்போது அதற்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றன. முதல் முயற்சியாக, செல்போன்களை நேரடியாக விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
 
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற மாதிரி நேரடி விற்பனைக்  கடைகளுக்கும், ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நடக்கும் போட்டி யில், அதிக சலுகைகளை யார் அள்ளித் தருகிறார்களோ, அவர்களின் பக்கமே வாடிக்கையாளர்கள் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment