Search This Blog

Tuesday, August 12, 2014

தூக்கத்தை தொலைக்கலாமா?

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை  நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
 
'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.


ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமென்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்னைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தப் பிரச்னையைச் சில வகை தெரப்பி, மெலட்டோனினைச் சுரக்கவைக்கும் மாத்திரைகளைக் கொடுத்துக் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்போனைத் தூர வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.'

நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு... 

இரவு 7 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள், கிளம்பும் முன் காலையில் 'பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிடுவது போல் சாப்பிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பகல் உணவை, நள்ளிரவு 1 மணியளவில் சாப்பிட வேண்டும்.

 வேலை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும்போது, முடிந்தவரை இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து வெளிச்சம் படாதவாறு வேன் போன்றவற்றில் பயணிக்க வேண்டும்.

 வீட்டில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் இரவு உணவை உண்ண வேண்டும். பிறகு கட்டாயம் செல்போனைத் தள்ளிவைத்துவிட்டு, ஜன்னல்களை அடைத்து, வெளிச்சம் புகாத அறையில் உறங்கி மாலை எழுந்திருக்க வேண்டும்.

  வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால், இரவு நேர ஷிஃப்ட் காரணமாக உடலில் ஏற்படும் வியாதிகளின் பிடியில் இருந்து விடுபடலாம்.

 
 

1 comment: