Search This Blog

Thursday, August 14, 2014

எபோலா... என்ன செய்ய வேண்டும்?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! 

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே... ஏன்? ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி... எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 'எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், 'நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை 'உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.


இந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.
நகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

எபோலா... அறிகுறிகள் என்ன?

எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.  

எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.  

சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
 

No comments:

Post a Comment