Search This Blog

Sunday, August 31, 2014

மோடியின் 100 நாட்கள்!

மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சரியானதொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதாது. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துகள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலேயே  அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோடி அரசின் செயல்பாட்டை கணிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

மோடி பதவியேற்றபின், கடந்த மூன்று மாத காலத்தில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில் துறை முக்கியஸ்தர்கள் பலரும் இனி வளர்ச்சி நிச்சயம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.  இதுநாள் வரை கிடப்பில் கிடந்த பல மசோதாக்களை சட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அதிகார வர்க்கத்துக்கு முன்னுரிமை தருவதன் விளைவாக, அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் மோடி.
 
கடந்த 100 நாட்களில் இப்படி பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், நலிந்துகிடக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த  இவை மட்டுமே போதாது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த தெளிவான திட்டம் எதையும் இந்த அரசு இதுவரை முன்வைக்கவில்லை. உள்கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சமாக செய்துமுடிக்கப்பட வேண்டிய வேலைகள்கூட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விவசாயத் துறை யில் உற்பத்தி பெருக்குவதாகட்டும், தொழில் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகட்டும், அடுத்த ஓராண்டு காலத்திலாவது பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. என்றாலும் இனிவரும் நாட்களிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இப்படியே இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தினால் சீர்குலைந்துபோன பொருளாதாரத்தை சீர்செய்துவிட்டுதான் மீண்டும் வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதை மறுக்க முடியாது.

நாட்டை நிச்சயம் முன்னேற்றுவார் என்கிற மக்களின் நம்பிக்கையை மோடி இன்னும் இழந்துவிடவில்லை. ஓர் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையிலேதான் நடக்கிறது என்று கூறும் மோடி, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற வெகுகாலமாகாது என்பதை உணரும் நேரமிது!  

No comments:

Post a Comment