Search This Blog

Tuesday, March 18, 2014

கார் பராமரிப்பு

காசு கொடுத்து வாகனம் வாங்கிவிட்டோம். அதை முறையாகப் பராமரித்தால்தான் நம் கைக் காசு கரையாமல் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்தால், கூடுதலாகச் செலவு வைப்பதுடன், நடு ரோட்டில் நம்மைத் தவிக்க வைத்துவிடும். மேலும், சரிவரப் பராமரிக்கப்படாத வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உயிருக்கும் பணத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஆபத்து. வாகனப் பராமரிப்பு என்பது தினசரி அதற்கு நேரம் ஒதுக்கி, படாதபாடுபட்டுச் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. சில விஷயங்களை அன்றாடம் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும். செலவு மிச்சமாவதுடன், நமது வாகனம் மதிப்புமிக்கதாக இருக்கும்.

 

கார் பராமரிப்பு என்பது குழந்தையை வளர்ப்பதுபோல. பார்த்துப் பார்த்துச் செய்தால்தான் பரவசமாக இருக்கும். அதோடு, காரின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்தக் கையேட்டைப் முழுவதுமாகப் படிக்கும்போது, கார் பராமரிப்பின் அவசியத்தை நீங்களே உணர்வீர்கள்.
இன்ஜின் டயர் மைலேஜ் பிரேக்ஸ் சஸ்பென்ஷன் உள்ளே வெளியே
இதயம் சொல்வதைக் கேளுங்கள்! 

கார் பராமரிப்பின் முதல்படி, அது என்ன சொல்கிறது என்று பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பதுதான். கார் எப்படிப் பேசும் என்கிறீர்களா? பின்னால் வரக்கூடிய பல பிரச்னைகளை, கார் ஓடும்போது வரும் சத்தங்களை வைத்தே சொல்லிவிடலாம். காலையில், முதலில் காரை ஆன் செய்துவிட்டு, இன்ஜின் சத்தம் எப்படி இருக்கிறது என்று காது கொடுத்துக் கேளுங்கள். ஆரம்பத்தில் சில விநாடிகளுக்குக் குறிப்பிட்ட ஆர்பிஎம்களில் இருக்கும் இன்ஜின், தானாகவே இன்னும் கீழே இறங்கி ஐடிலிங் ஆர்பிஎம்மில் ஓடும். இப்படியே குறைந்தது 5 நிமிடங்களுக்கு ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். இப்போது இன்ஜின் சத்தம் தாறுமாறாக இருக்கிறதா எனக் கவனியுங்கள். ஏ.சி.யை இப்போது ஆன் செய்யக் கூடாது.


காலையில் முதன்முதலாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது இன்ஜினை 'ரெவ்’ செய்துகொண்டே இருக்க வேண்டும் என நிறைய பேர் நினைக்கிறார்கள். இது தேவை இல்லை. பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது, குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். முக்கியமாக, டர்போ சார்ஜர் இருக்கும் கார்களில் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இரவு முழுவதும் இன்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, இன்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். காரை ஸ்டார்ட் செய்தவுடன்தான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, இன்ஜினை ரெவ் செய்தால், டர்போ சார்ஜர் பேரிங், இன்ஜின் ஹெட் போன்ற இடங்களில் ஆயில் சரியாகப் பரவாமல் இருக்கும். இதனால் ஏற்படும் உராய்வுகளில் அனைத்துமே பாதிக்கப்படும். டர்போ சார்ஜர் நீண்ட நாட்கள் உழைக்காது.

இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், அதற்குச் சாதகமான வெப்ப நிலைக்கு (ஆப்டிமம் டெம்பரேச்சர்) வரும்வரை விரட்டாமல் காரை ஓட்டுங்கள். டர்போ சார்ஜர் இருக்கும் கார்களை ஆஃப் செய்யும்போது, சில நிமிடங்கள் ஐடிலிங்கில் ஓடவிட்டு பின்பு ஆஃப் செய்யுங்கள்.

இன்ஜின் ஆயில் என்பது, நம் உடலில் ஓடும் ரத்தம்போன்றது. இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இதன் வேலை. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோலத்தான் இன்ஜின் ஆயில் சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கும் 'அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும்.

ஆனால், கார் வைத்திருக்கும் பெரும்பான்மையினர், இந்த இன்ஜின் ஆயில் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் கார் ஓட்டுவதைத் தவிர, கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம், இன்ஜின் ஆயிலைச் சோதனை செய்வது. உங்கள் கார் மேனுவலில் 'டிப்-ஸ்டிக்’ வைத்து ஆயில் அளவை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஆயில் அளவைச் சோதிக்கும்போது, அதன் தரத்தின் மீது ஒரு கண்வைத்து வாருங்கள்.

ஆயிலை மாற்ற வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கு இப்போது இருக்கிறது. கார் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கி.மீ/சர்வீஸ் இடைவெளிகளில் இன்ஜின் ஆயில் மாற்றினாலே போதும்.

பெரும்பாலும் ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றுவது நல்லது. சர்வீஸ் செய்யும்போதே பெரும்பாலான  சர்வீஸ் சென்டர்களில் ஆயிலை டாப்-அப் செய்துவிடுகிறார்கள்.

ஆயில் மாற்றும்போது வரும் இன்னொரு குழப்பம், வழக்கமான மினரல் ஆயிலைப் பயன்படுத்துவதா அல்லது சிந்தெடிக் ஆயிலை மாற்றுவதா என்பது. முதல் 20,000 கிமீ வரை சிந்தெடிக் ஆயில் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பின்பு, உங்கள் காருக்கு ஏற்ற சிந்தெடிக் ஆயிலைத் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். சிந்தெடிக் ஆயில் விலை அதிகம் என்றாலும், அதன் பயன்களும் அதிகம்.

ஸ்பார்க் ப்ளக்குகளை சர்வீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளிகளில் மாற்றிவிடுங்கள். ஃப்யூல் இன்ஜெக்டர்களை 'அல்ட்ராசானிக் க்ளீனிங்’ மூலம் சுத்தப்படுத்துவது மைலேஜையும் அதிகரிக்கும்.

இன்ஜின் திடீரென்று ஓவர்ஹீட் ஆனால் என்ன செய்வது? இந்தக் குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. ஓவர்ஹீட் ஆவதை காரின் டெம்பரேச்சர் மீட்டரை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஓவர்ஹீட் ஆனால், முதல் வேலையாக காரை பத்திரமாக சாலையோரம் நிறுத்துங்கள். ஏ.சியை மட்டும் ஆஃப் செய்துவிட்டு, காரின் இக்னீஷனை ஆன் மோடில் வையுங்கள். இதனால், காரின் கூலிங் ஃபேன் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும். கூலிங் ஃபேன் ஓடும் சத்தம் கேட்கவில்லை என்றால், ஒன்று ஃபேனின் ஃப்யூஸ் போயிருக்கும் அல்லது ஃபேன் ரிப்பேர் ஆகியிருக்கும். கூலிங் ஃபேன் இயங்காமல், காரைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் மெதுவாக இயக்கலாம். ஆனால், டிராஃபிக்கில் இயக்கினால், இன்ஜின் மிக வேகமாகச் சூடாகும்.

ஏ.சி.யை ஹீட்டரில் செட் செய்தால், அதற்கான வெப்பத்தை இன்ஜினில் இருந்துதான் உங்கள் கார் எடுத்துக்கொள்ளும். காரின் ஏ.சி-யை ஃப்ரெஷ் ஏர் மோடில் வைத்துவிட்டு, ஏ.சி-யை அதிகபட்ச வெப்பநிலைக்கு செட் செய்யுங்கள். இப்போது ஏ.சி-யை ஆன் செய்யாமல், ப்ளோயரை மட்டும் ஆன் செய்யுங்கள். வென்ட்டுகளில் இருந்து சூடான காற்று வரும் என்பதால், எல்லா ஜன்னல்களையும் கீழிறக்கி விடுங்கள். இதன் மூலம் இன்ஜினின் வெப்பத்தை ஓரளவு குறைக்க முடியும்.

ரேடியேட்டரைச் சோதனை செய்ய வேண்டும் என்றால், காரை நிறுத்திய பின்பு, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ரேடியேட்டர் கேப்பைத் திறக்காதீர்கள். இந்த நேரத்தில் அருகில் யாராவது மெக்கானிக் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கலாம். கூலன்ட் டாப்-அப்தான் என்றால், மெக்கானிக் மற்றும் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல கவனமாக டாப்-அப் செய்யலாம். இதெல்லாம் சின்னப் பிரச்னைகள். ரேடியேட்டர் லீக் ஆனால், உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்கு டோ செய்ய வேண்டும். பெரிய அளவில் லீக் இல்லாமல் இருந்தால், எம்-சீலை லீக் ஆகும் இடத்தில் ஒட்டிவிட்டு, காரை நிதானமாக சர்வீஸ் சென்டருக்கு ஓட்டிச் செல்லுங்கள்.

இன்ஜின் ஓவர்ஹீட் ஆவதற்கு மேலே கூறப்பட்டுள்ளது போன்ற செல்ஃப் ரிப்பேர்களை செய்ய யோசனையாகவோ, பயமாகவோ இருந்தால், சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம்.

டயர்... உயிர்!

டயர் பராமரிப்பு பற்றிய விழிப்புஉணர்வு, இப்போது அதிகமாகவே இருக்கிறது. வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங், டயர் ரொட்டேஷன் போன்ற அம்சங்களை இப்போது பலரும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கின்றனர். திறமை வாய்ந்த ஒரு டயர் எக்ஸ்பெர்ட்டால், ஒரு காரின் டயரைப் பார்த்தே அந்த காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.


மோசமான வீல் அலைன்மென்ட்/பேலன்ஸிங், முதலில் காரின் சஸ்பென்ஷனையும் ஸ்டீயரிங்கையும் பதம் பார்க்கும். ஸ்டீயரிங்கை நேராக வைத்தாலும் கார் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல், இடது அல்லது வலது பக்கம் இழுத்துக்கொண்டு போனால், அலைன்மென்ட்டில் பிரச்னை என்று அர்த்தம்.

வ்வளவு வேகமாக இழுத்துக்கொண்டு போகிறதோ, அவ்வளவு மோசமாக அலைன்மென்ட் இருக்கிறது என்று பொருள். உங்கள் காரில் இப்படி இருந்தால், மேனுவலில் இருக்கும் டோ, கேம்பர், காஸ்டர் வால்யூக்களுக்கு ஏற்றபடி முதலில் வீல் அலைன்மென்ட் செய்துவிடுங்கள்.

இரண்டாவது, வீல் பேலன்ஸிங். எந்த ஒரு காரின் வீலுமே 100 சதவிகிதம் சரியான பேலன்ஸிங் இருக்காது. வீல் பேலன்ஸிங் செய்த பின்பு, சாலையில் ஓடத் துவங்கிய முதல் விநாடியில் இருந்தே, பேலன்ஸ் மாற ஆரம்பித்துவிடும். அதனால்தான், அடிக்கடி வீல் பேலன்ஸிங் செய்ய வேண்டும். காரின் வீல் பேலன்ஸ் செய்தே ஆக வேண்டும் என்பதற்கான அறிகுறி, சீரான டயர் உராய்தல் இல்லாததும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு டயரில் இருந்து அதிர்வுகள் எழுவதும்தான். இது தொடர்ந்தால், வீல் பேரிங்கை பாதிக்கும். அதனால், அலைன்மென்ட் செய்யும்போதே, வீல் பேலன்ஸிங் செய்து விடுங்கள்.

மூன்றாவது, டயர் ரொட்டேஷன். காரின் 5 டயர்களும் (ஸ்டெப்னி சேர்த்து) சமமான அளவில் தேய்மானம் அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது. ஃப்ரன்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் கார்களுக்கு ஏற்ப ரொட்«டஷன் முறை மாறுபடும்.


காரில் புது டயர்களைப் பொருத்தினால், குறைந்தது 500 கிமீ வரை, காரை மிக வேகமாக ஓட்டாதீர்கள். அப்போதுதான் புதிய டயர்கள் சாலையில் தேய்ந்து செட் ஆகி, நல்ல க்ரிப் கிடைக்கும்.

டயர் பாலீஷ் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை வைத்து பாலீஷ் செய்தால், பழைய டயர்கள்கூட பளபளவென்று புதிய டயர்கள்போலக் காட்சியளிக்கும். இதை டயரின் ட்ரெட்டுகளில் போடக் கூடாது. டயர் பாலீஷ் போட்டுவிட்டு வெயிலில் காரை நிறுத்தினால், பாலீஷ் உருகி டயரின் ட்ரெட்டுகளுக்குள் சென்றுவிடும்.

உங்கள் டிரைவிங்... உங்கள் மைலேஜ்!

மைலேஜ் அதிகம் கிடைக்கச் சிறந்த வழி, அதற்கு ஏற்றதுபோல நீங்கள் காரோட்டும் விதத்தை மாற்றிக்கொள்வதுதான். பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை மென்மையாகக் கையாளும் வகையில் உங்கள் ஓட்டுதல் இருந்தால், மைலேஜ் அதிகரிக்கும்.

மிதமான வேகத்தில் செல்லும்போதுதான், சாலையை முழுவதுமாக அனுமானித்து ஓட்ட முடியும். ஷார்ப்பான வளைவு ஒன்று சாலையில் இருக்கிறது என்றால், அதை நெருங்கும்வரை வேகமாக ஓட்டிவிட்டு, அதிக பிரேக் அழுத்தி காரின் வேகத்தை மொத்தமாகக் குறைத்து ஓட்டுவதற்குப் பதிலாக, சீரான வேகத்துடன் வளைவைக் கடப்பதுதான் சிறந்த முறை.

இதனால், தேவையில்லாமல் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும். தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக்கொண்டே ஓட்டுவதைக் குறைத்தாலும் நிறைய எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம். கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்தில் இருந்து தடுக்கப்படும். காரில் இருந்து தேவையற்ற எடையைக் குறைப்பதன் மூலம் மைலேஜ் மட்டுமல்லாமல், காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸும் கூடும்.

காரின் இன்ஜினை நாம் ஆக்ஸிலரேட்டர் மட்டுமில்லாமல், கியர்பாக்ஸ் மூலமும் கையாள்கிறோம். கியர்களை நாம் மாற்றும் விதத்திலும் கச்சிதமாக இருந்தால், நிறைய மைலேஜ் கிடைக்கும்.

வழக்கத்தைவிட கொஞ்சம் கியரை சீக்கிரமாக மாற்றிப் பாருங்கள். மிகவும் குறைந்த ஆர்பிஎம்-லேயே கியரை மாற்றினால், பின்னர் இன்ஜின் திணற ஆரம்பித்துவிடும். அதனால், இன்ஜினை அதிக ஆர்பிஎம்-ல் ரெவ் செய்து பின்னர் மாற்றுவதற்குப் பதிலாக, கொஞ்சம் குறைந்த ஆர்பிஎம்-ல் மாற்றுவதன் மூலம் நிறைய எரிபொருளை மிச்சம் செய்யலாம்.

ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழ் இருக்கும்போது, அப் ஷிஃப்ட் செய்யக் கூடாது. அதேபோல், அதிக ஆர்பிஎம்-ல் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, தெரியாமல்கூட டவுன் ஷிஃப்ட் செய்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக, சிலர் மூன்றாவது கியரில் இருந்து நான்காவது கியருக்கு மாற்றுவதற்குப் பதிலாக, தெரியாமல் இரண்டாவது கியருக்கு மாற்றுவது. இதை 'மணிஷிஃப்ட்’ என்று கிண்டலாக அழைப்பார்கள். இப்படிச் செய்வதால், ஏற்படும் கியர்பாக்ஸ் சேதாரச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதை அப்படிச் சொல்கிறார்கள்.  

டயர்கள் எப்போதும் சரியான காற்றழுத்தத்தில் இருந்தால், மைலேஜ் நிறைவாகக் கிடைக்கும் என்பது பொதுவான தகவல். ஆனால், இப்போதைய ட்ரெண்ட் நைட்ரஜன்தான். பலருக்கும் டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதா அல்லது சாதாரண காற்றையே நிரப்புவதா என்ற குழப்பம் இருக்கிறது.

நைட்ரஜன் நிரப்புவதால், டயர்களில் உள்ள அழுத்தம் விரைவில் குறையாது. மேலும், தொடர்ந்து ஓடும்போது டயரின் வெப்ப அளவு குறைவாகவே இருக்கும். நைட்ரஜனைப் பொறுத்தவரை, சாதாரண காற்றைவிட சற்றே அதிகமான நன்மைகளையே அளிக்கிறது.

நாம் நிரப்பும் சாதாரண காற்றிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜன்தான் இருக்கிறது. மீதம் இருப்பதில் 20 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன். டயர்களில் நைட்ரஜன் நிரப்புவதால் கிடைக்கும் நன்மைகளை முழுவதும் அனுபவிக்க, நாம் நிரப்பும் நைட்ரஜன் மிக சுத்தமானதாக இருக்க வேண்டும். செலவு செய்ய முடியும் என்பவர்கள் தாராளமாக நைட்ரஜன் நிரப்பலாம்.

சடர்ன் பிரேக்...
காரின் பிரேக்குகளை ஒவ்வொருமுறையும் சர்வீஸுக்கு விடும்போதும் செக்கப் செய்தாலே போதும்.
ஆனால், நீங்கள் ஓட்டும்போது வழக்கமான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸில் இருந்து சின்ன மாறுதல் இருந்தால், உடனே சர்வீஸ் சென்டரில் சோதனை செய்துவிடுவது அவசியம். ஹேண்ட் பிரேக் எடுக்காமலேயே காரை ஓட்டினால், காரின் பின்பக்க பிரேக் லைனிங் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

 
அதேபோல், மலைச் சாலையில் கீழே இறங்கும்போது இன்ஜின் பிரேக்கிங்கைப் பயன்படுத்திக்கொள்ளாமல், பிரேக்குகளையே பயன்படுத்தி வந்தால், பிரேக்குகள் ஏகத்துக்கும் சூடாகி அதன் செயல்திறன் குறைந்துவிடும். குறிப்பாக, முன் பிரேக்குகள் இதில் அதிகமாகப் பாதிக்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் காரை எடுக்கும்போது, பிரேக்குகள் சரியாக இருக்கிறதா என்று பிரேக் பிடித்து சோதனை செய்துவிட்டு பயணத்தைத் தொடர்வது நல்லது.

சும்மா அதிருதுல்ல!

காரின் சஸ்பென்ஷனை சிறப்பாகக் கவனித்து பராமரிக்கத் தேவை இல்லை. கார் ஓட்டும்போது சஸ்பென்ஷனில் இருந்து விநோதமான சத்தம் வந்தால், கவனிக்க வேண்டும். மோசமான சாலைகளில், வேகமாக ஓட்டாமல் இருப்பது சஸ்பென்ஷனைப் பாதிக்காமல் இருக்கும்.


கார் ஓட்டும்போது, அதிர்வுகள் எந்தப் பக்கம் இருந்து எழுகிறது என்று கவனியுங்கள். காரின் ஸ்டீயரிங் வீல் அதிர்ந்தால், காரின் முன் பக்கத்தில் பிரச்னை இருக்கலாம். பெரும்பாலும் மோசமான வீல் பேலன்ஸிங்/அலைன்மென்ட்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.

இருக்கையில் அதிர்வுகள் இருந்தால், காரின் பின்பக்க சஸ்பென்ஷன் அல்லது வீலில் பிரச்னை இருக்கலாம். காரின் மீது, ஒவ்வொரு வீலின் மேல் பகுதியில் அழுத்தி விட்டுப்பாருங்கள். ஒரு தடவை கார் கீழே இறங்கி மேல் ஏறி நிற்கும். அதற்குப் பதிலாக சிறிது அதிகமாகக் குலுங்கினாலும், சஸ்பென்ஷனில் பிரச்னைதான். ராக் அண்டு பினியன் ஸ்டீயரிங் சிஸ்டம் இல்லாத கார்களில், ஒவ்வொரு முறை டயர்கள் ரொட்டேஷன் செய்யப்பட்ட பிறகு, சஸ்பென்ஷனில் க்ரீஸ் வைக்க வேண்டும்.

புதிய அலாய் வீல் பொருத்தினாலோ, காரின் டயரையும் வீலையும் அப்-சைஸ் செய்தாலோ, மிக அகலமான டயர்களைப் பொருத்தினாலோ, சஸ்பென்ஷன் செயல்பாட்டில் மாற்றம் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சஸ்பென்ஷன் அடிவாங்கும் என்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்டைலுக்காக வீல்களிலும் டயர்களிலும் கைவைக்க வேண்டாம். காருக்கு அடியில் அண்டர்சேஸி கோட்டிங்கை ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன் செய்வது, முக்கிய பாகங்கள் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கும்.

இம்சிக்காத இன்டீரியர்!

காரின் இன்டீரியரில் என்ன பராமரிப்பு வேண்டியிருக்கிறது என சிலர் நினைத்தால், அது முற்றிலும் தவறு. காருக்குள் அமர்ந்து சாப்பிடுவது, பானங்கள் அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தாலே, கார் இன்டீரியர் பராமரிப்பு விஷயத்தில் நீங்கள் பாஸ் மார்க் வாங்கிவிடலாம். இதனால், இருக்கைகளில் படியும் தேவையற்ற, சிரமமான கறைகளைத் தவிர்க்கலாம்.

ஸ்டீயரிங் வீலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஓரளவுக்கு மேல் அழுக்கு படிந்தபின், ஸ்டீயரிங் வீல் வழுக்க ஆரம்பித்துவிடும். இதனால், எதிர்பாராத சமயங்களில், வழுக்கி ஆபத்துக்கு வழி வகுத்துவிடும்.

காரின் இன்டீரியரில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், தூசு. இருக்கைகளிலும் இன்டீரியர் பாகங்களிலும் படிந்திருக்கும் இது, உங்கள் பயணத்தின் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும். லெதர் சீட்களை எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், ஃபேப்ரிக் சீட்களைச் சுத்தம் செய்வது சிரமமான காரியம். தவறாகச் செய்தால், தூசியும் அழுக்கும் இன்னும் ஆழமாக இருக்கையில் படிந்துவிடும். பெரும்பாலும் காரின் இன்டீரியரை நாம் சுத்தம் செய்வதைவிட, கார் டீட்டெயிலிங் சென்டரில் சுத்தம் செய்வது நலம்.

காரின் ஏ.சி-யில் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் ஃபில்ட்டர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓடும் கார்களின் ஏ.சி ஃபில்ட்டர், மிக விரைவில் அசுத்தமாகி அடைத்துக்கொள்ளும். இதனால், ஏ.சி-யின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த நிலையை அடையும் பலரும், ஏ.சி கேஸ் தீர்ந்து விட்டது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது ஏ.சி ஃபில்ட்டரைச் சுத்தம் செய்தாலே போதும். கார் ஏ.சி ரிப்பேர் செய்யும் கடைகளில் குறைந்த விலையிலே இதைச் செய்து கொடுப்பார்கள்.

கார் டேஷ்போர்டின் முன் பகுதியில் உள்ள தூசியை பெரும்பாலும் நாமே துடைத்துவிடுவோம். ஆனால், கண்ணாடிக்குக் கீழ் இருக்கும் டீஃப்ராஸ்டர் வென்ட்டை பலரும் மறந்துவிடுவர். திடீரென்று என்றாவது அதைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களாக அதில் படிந்திருந்த தூசுகள் வெளியேறி காரின் உள்ளே படிந்துவிடுவதோடு, மட்டுமல்லாமல், நம் மூக்கிலும் ஏறி தும்மலை வரவைக்கும். எனவே, டீஃப்ராஸ்டர் வென்ட்டை அடிக்கடி கவனியுங்கள்.

ஃப்ளோர் மேட்டுகளையும் அடிக்கடி துடைத்துவிடுவது அவசியம். நம் காலணியில் உள்ள அழுக்கு அத்தனையும் ஃப்ளோர் மேட்டுகளில்தான் படியும். இதைக் கவனிக்காமல் விட்டால், நாளடைவில் ஃப்ளோர் மேட்டைச் சுத்தம்கூட செய்ய முடியாமல், புதிதாக மாற்றவேண்டியிருக்கும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை ஃப்ளோர் மேட்டைச் சுத்தம் செய்யுங்கள்.

'க்ளீன்’ போல்டு!

காரின் வெளிப்புறத் தோற்றம் தான் உங்களுடைய அக்கறையை எடுத்துக் காட்டும். காரைச் சுத்தமாக, பளபளவென்று வைத்திருப்பது சமூகத்தினிடையே உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத்தரும்.

டிரைவர் இல்லாத பட்சத்தில், காரை தினம் தினம் கழுவிக் கொண்டிருப்பது சிரமமான காரியம்தான். வாரம் ஒருமுறை காரை குடும்பத்துடன் இணைந்து கழுவிப் பாருங்கள். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் குடும்பத்துடன் சிறிது நேரம் ஜாலியாக செலவு செய்த மாதிரியும் ஆச்சு! காரை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினருக்குப் புரியவைத்த மாதிரியும் ஆச்சு! தாங்களே கைப்பட கழுவிய கார் என்பதால், குழந்தைகளும் இனி காரில் எந்த அசுத்தத்தையும் செய்ய மாட்டார்கள்.

விண்ட்ஷீல்டு துடைப்பதற்கு ஃபைபர் கிளாத்தையும், நியூஸ் பேப்பரையும் பயன்படுத்துங்கள். பழைய துணியை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், கண்ணுக்குத் தெரியாத துகள்களால் விண்ட்ஷீல்டில் ஸ்கிராட்சுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சில கார் உரிமையாளர்கள் கார் கழுவுவதை உடற்பயிற்சி போலச் செய்கிறார்கள். இதுவும் நல்லதுதான். உங்களால் இந்த வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், கவலையே தேவையில்லை. எல்லா ஊர்களிலும் இப்போது கார் டீட்டெயிலிங் சென்டர்கள் வந்துவிட்டன. அங்கு காரை எடுத்துக் கொண்டுபோய் பாலிஷ், வாக்ஸ், ப்ரஷர் வாஷ், இன்டீரியர் க்ளீனிங் என காரை கச்சிதமாகச் சுத்தம் செய்துவிட்டு வாருங்கள். விலை அதிகம்தான். ஆனால், காரை புத்தம் புதிய காரைப்போல் மாற்றி விடுவார்கள்.













No comments:

Post a Comment