Search This Blog

Tuesday, February 04, 2014

மொபைல் இன்ஷூரன்ஸ்

இன்றைய மாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்கூட இஎம்ஐ-யில் 20 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள். இப்படி அதிக விலை தந்து வாங்கும் போன் தொலைந்துபோனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய. இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க இன்ஷூரன்ஸ் நமக்குக் கைதரும் என்றாலும், எந்தச் சூழ்நிலையில் நமக்கு கிளைம் கிடைக்கும், செல்போன் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு, கிளைம் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றி பார்போம்.

புதிதாக வாங்கும் செல்போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிகபட்சம் மூன்று வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்குமேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும்.செல்போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம்தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களை பாலிசிதாரர்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும்.செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பாலிசியின் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் பார்ப்பது அவசியம். ஏனெனில், இந்த இன்ஷூரன்ஸில் நிபந்தனைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்களில் செல்போன் தண்ணீரில் விழுந்தால் கிளைம் தரமாட்டோம் என்ற நிபந்தனை இருக்கும். இன்ஷூரன்ஸ் எடுத்த ஒரு வருடத்தில் செல்போன் தொலைந்து போனால் இத்தனை சதவிகிதம்தான் கிளைம் கிடைக்கும் என்றும் நிபந்தனை விதித்திருப்பார்கள்.மேலும், செல்போன் தொலைந்து விட்டது அல்லது திருடு போய்விட்டது என்ற காரணங்களுக்காக கிளைம் கேட்டு விண்ணப்பிக்கும்போது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவை.  சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் செல்போன் காணாமல்போன சம்பவத்தைக் காவல் துறை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும், காவல் துறையின் சமுதாயப் பதிவேட்டு ரசீது இருந்தால் போதும் எனக் கூறுகின்றன. எனவே, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே எதற்கெல்லாம் கிளைம் கிடைக்கும், எதற்குக் கிடைக்காது என்பதை பாலிசியைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்வது நல்லது.
 
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்போன் இன்ஷூரன்ஸ் வழங்குவதையே தவிர்த்து வருகின்றன. ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் வருடத்துக்கு ஒருமுறை புது செல்போன் வாங்கும் பழக்கத்தைப் பலரும் வைத்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே போனை தொலைத்திருக்கலாம் என இன்ஷூரன்ஸ் நிறுவனம் சந்தேகப்படுவதுதான் இதற்கு காரணம்.
 
மேலும், செல்போன் தொலைந்து போனால், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் கடினமான காரியம். அதேபோல, முதல் வருடத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும் அதில் அதிகபட்சம் மூன்று வருடம் வரை மட்டுமே அந்த இன்ஷூரன்ஸைத் தொடர முடியும்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உங்கள் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ரூபாவதி

No comments:

Post a Comment