Search This Blog

Tuesday, December 31, 2013

வரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றப்படும் நகரம் காஞ்சி புரம். அப்படிப்பட்ட காஞ்சியம்பதியை நினைக்கும்போதும் சொல்லும்போதும் நமக்குள் சட்டென்று மூன்று விஷயங்கள் சடசடவென விரிந்து நிற்கும். காஞ்சி என்றதும், சிவ காஞ்சியைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரும், சக்தியின் முக்கிய பீடமாகத் திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும், விஷ்ணு காஞ்சியைப் பறைசாற்றும் வகையிலான ஸ்ரீவரதராஜரும் நினைவுக்கு வருவார்கள்.
அதிலும் வைஷ்ணவர்கள், 'காஞ்சி வரதா... காஞ்சி வரதா’ என்று கண்ணீர் வடிய பக்தி செலுத்துவார்கள். காஞ்சியில் பிரமாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜரை, தன்னையும் தன் சந்ததியினரையும் வாழ வைக்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்று கின்றனர் பக்தர்கள். நம் தாயார் எப்படி நமக்குத் தேவையானதை நாம் கேட்காமலே தந்து காப்பாற்றி வருவாளோ அதேபோல, நாம் கேட்காமலேயே நமக்குத் தேவையானதையெல்லாம் தந்து அருளும் கருணையுள்ளம் கொண்டவர் ஸ்ரீவரதர் எனச் சொல்லிச் சிலாகிக்கின்றனர்.
அதுமட்டுமா? தங்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகளையும், கவலை களையும் அவமானங்களையும் தயக்கமோ குழப்பமோ இல்லாமல் ஸ்ரீவரதரிடம் முறையிட்டு, 'இது உனக்கே நல்லாருக்கா? என்னைக் காப்பாத்திக் கரை சேக்கறது உன் கடமை இல்லியா?'' என்று நண்பனி டம் புலம்புவதுபோல், உரிமையுடன் கேட்பார்கள் பக்தர்கள்.
கடவுளை நண்பனாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகப்பெரிய ஈடுபாடும் அறிவும் வேண்டும். மனம் முழுவதும் இறை பக்தியும், புத்தி முழுவதிலும் நம்பிக்கையும் குடிகொண்டிருக்க வேண்டும். காஞ்சி யில் அருளும் பெருமாளை, ஸ்ரீவரதராஜரை வரதா வரதா என்று அழைத்துப் பரவசமாகிற பக்தர்கள் பலரும், அவரைத் தோழனாகப் பாவித்துதான் வணங்கிச் செல்கிறார்கள் என்பது தெரிகிறது.
அதேபோல், வைணவர்கள் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் வரதர் எப்போது திருவீதியுலா வருவார் என ஆவலாகக் காத்துக் கிடப்பார்கள். தவிர, வரதராஜ பெருமாளுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதத்தில், எந்த நட்சத்திர நாளில் விழா எடுப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். அந்தந்த நாட்களில் ஸ்ரீவரதரைத் தரிசனம் செய்து பூரித்துப் போவார்கள்.
வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் என்றொரு கிராமம் உள்ளது. இந்த ஊரில், மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  
காஞ்சி வரதருக்கு எப்போதெல்லாம் சிறப்பு பூஜைகளும் வழிபாடு களும் கோலாகலமாக நடை பெறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜருக்கும் பூஜைகள் சிறப்புற நடைபெறும்.
ஐந்து நிலை ராஜகோபுரமும், பிரமாண்டமான நீளமான மதிலும் கொண்டு, ஒருகாலத்தில் கம்பீரத்துடன் நின்ற கோயில்தான் இது. ஆனால் இன்றைக்கு, எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்பதுபோல் நிற்கிற கோபுரம் நம்மைப் பதைபதைக்கச் செய்கிறது. அழகிய கோபுரத்தின் வழியே நுழைய முடியவில்லை. சுற்றுச் சுவருக்கு நடுவே சிறியதொரு பாதையில் சென்றுதான் ஸ்ரீவரதராஜரை தரிசிக்கவேண்டியுள்ளது.
காஞ்சி வரதரைப் போலவே, வாழைப்பந்தல் வரதரும் விழாவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவாராம். இதைப் பார்க்க ஒருங்கிணைந்த தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வருவார்களாம். ஆனால், வரதரின் வாகனங்கள் எல்லாமே இப்போது சிதைந்தும் பெயர்ந்தும், வண்ணங்களை இழந்து பரிதாப மாகக் காட்சி அளிக்கிறது.
கல் தீப ஸ்தம்பம், பிராகாரம், அதைச் சுற்றிலும் நந்தவனம் என அழகும் சக்தியும் நிறைந்த திருத்தலமாக இருந்திருக்கிறது இந்தக் கோயில். காலப்போக்கில் முள்ளும் புதருமாக மாறிப் போய், சந்நிதிகள் எல்லாம் களையிழந்துவிட்டதுதான் கண்ணீரை வரவழைக்கிறது.
கருவறையில், மூலவரும் உத்ஸவரும் திவ்விய தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். இவரை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.
ஒருகாலத்தில், திருகூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வாழைப்பந்தல் என்று இப்போது அழைக்கப்படும் தலத்தில் உள்ள ஸ்ரீவரதரின் ஆலயம், வழிபாட்டுக்கு உரிய அழகிய இடமாகத் திகழ வேண்டாமா? கஜேந்திரன் எனும் யானைக்கு மோட்சம் கிடைத்தது போல், இந்தக் கோயிலின் திருப்பணியில் நாமும் பங்கு பெற்று, மோட்ச கதியை அடையவேண்டாமா?
ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீஅனுமனும் அருளும் ஒப்பற்ற இந்தக் கோயிலில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட்டு, வரதருக்கு நைவேத்தியம் செய்யப் புளியோத ரையும், சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதமும் அங்கே மணக்க மணக்கத் தயாராவதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வதுதானே நம் கடமை? வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜரின் வாகனங்கள் சரிசெய்யப்படுவதற்கும், மண்டபங்களும் கோபுரமும் மதிலும் பழையபடி பொலிவுறுவதற்கும் திருப்பணியில் கலந்து கொண்டால், நம் சந்ததியும் வாழையடி வாழையாய் வாழாதா?

காஞ்சியம்பதி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், வருடம் முழுவதும் திருவாபரணத்துக்கும், ஸ்வாமியின் திருஅலங்காரத்துக்கும் ஒரு குறைவுமில்லை. ஆனால், அதே திருநாமத்துடன் காஞ்சிக்கு அருகில் உள்ள இந்தப் புராதனத் திருக்கோயிலும் காஞ்சிக் கோயிலைப்  போலவே கம்பீரம் காட்டி நிற்பதுதானே முறை!
பித்ருக்கள் சாபத்தில் இருந்து விமோசனத்தைத் தந்து, நல்ல நிம்மதி யான வாழ்க்கையையும் அருளச் செய்பவர் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள். ஆயிரம் வருடப் பழைமையான ஆலயம் என்றும், ஆதி கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் என்றும் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், நாம் தருகிற சிறு திருப்பணிக்கான காரியம் நமக்குப் பன்மடங்காக, வீர்யம் கொண்டதாக, நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட வாழ்க்கையைத் தந்து, நம்மையும் நம் வம்சத்தையும் வாழச் செய்யும் என்பது உறுதி!  
ஸ்ரீவரதா... ஸ்ரீவரதா... உன் கோயிலில், கும்பாபிஷேகம் எனும் வைபவம் நடைபெறும் நாள் வந்துவிட்டது ஸ்ரீவரதா!
படங்கள்: ச.வெங்கடேசன்
எங்கே இருக்கிறது?
வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது வாழைப்பந்தல் கிராமம். இங்கே, மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அற்புதமாக அமைந் துள்ளது ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில். ஆரணியில் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உண்டு.

No comments:

Post a Comment