Search This Blog

Friday, November 08, 2013

சச்சினை மயக்கிய தீவிர ரசிகர்!


ஆளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். இவர் ஒரு வெறித்தனமான சச்சின் ரசிகர் என்று. மொட்டைத் தலையில் இந்தியக் கொடி வரையப்பட்டிருக்கும். மேல்சட்டை அணியாமல் இடுப்புவரை முன்னும் பின்னும் மூவர்ணத்தால் பெயின்ட் செய்யப்பட்டு, ‘டெண்டுல்கர் 10’ என்று எழுதப்பட்டிருக்கும். மூக்கில் அசோகச் சக்கரம். மீசையில்கூட மூவர்ணம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த அடையாளங்களோடு சச்சினின் தீவிர ரசிகராகப் பிரபலமாகியிருக்கிறார் பீகாரின் முசாஃபர்புர் நகரைச் சேர்ந்த சுதிர் குமார் சௌத்ரி. 

மேட்ச் நடக்கும் சமயங்களில், இந்திய வீரர்கள் ஃபோர், சிக்ஸர் அடித்தால், சுதிர் கொடியை ஆட்டிக் கொண்டும் சங்கை ஊதிக்கொண்டும் தோன்றும் காட்சிகளை டி.வி.யில் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இந்தியா மேட்சில் தோற்றுவிட்டால் வருத்தமாகிவிடுவார். அந்த நாளில் எதுவும் சாப்பிட மாட்டார்.  நவம்பர் 2003 முதல் இந்தியா ஆடிய சர்வதேச மேட்சுகள், ஐ.பி.எல். என எல்லாம் சேர்த்து இதுவரை 300 மேட்சுகளுக்குமேல் (206 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்டுகள், 70 டி20 மேட்சுகள்) நேரில் பார்த்திருக்கிறார். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, டிரெஸ்ஸிங் ரூமுக்கு சுதிரை அழைத்து உலகக் கோப்பையை அவரிடம் வழங்கிய சச்சின், போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார் சுதிர். கொல்கத்தாவில் மேட்ச் நடந்தால் கங்குலியின் வீட்டில்தான் சைக்கிளை பார்க்கிங் செய்வார். சச்சின் மேட்ச் டிக்கெட்டுகளைத் தருவதன் நன்றிக்கடனாக இவர் ஒவ்வொரு வருடமும் சச்சினுக்கு 1000 லிச்சிப் பழங்களைத் தருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் விற்கும் சங்குகளையும் அவ்வப்போது தருவது வழக்கம். சச்சினுக்காக இரண்டுமுறை மைதானத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். ஒருமுறை சச்சினின் காலைத் தொட்டு வணங்க முயற்சி செய்தபோது சச்சின் அதைத் தடுத்து, சுதிரைப் பிடிக்கவந்த காவலர்களிடம், ‘அவரை அடிக்க வேண்டாம். அவரே போய்விடுவார்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஹைதராபாத் மேட்ச் ஒன்றிலும் இதேபோல நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சுதிரை ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்று பழுக்க அடித்திருக்கிறார்கள். 33 வயது சுதிருக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கிடையாது. சுதிர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக வேண்டாம். நான் இந்தியா முழுக்கச் சுற்றுபவன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைத் துணை" என்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுஷ்ருத் ஜெயின், இந்திய கிரிக்கெட் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்கிறார். அதில் சுதிரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தில்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், சுதிர் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். ‘எனக்கும் சச்சினுக்குமான உறவு, கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது. சச்சின் ஓய்வுக்குப் பிறகும் என்னை நீங்கள் மேட்சுகளில் பார்க்கமுடியும். ‘மிஸ் யூ டெண்டுல்கர்’ என்று என் உடலில் எழுதப்பட்டிருக்கும்," என்கிறார் சுதிர். 

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment