Search This Blog

Saturday, November 23, 2013

அருள்வாக்கு - ஸெக்யூலரிஸம்

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘ஸெக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த ‘ஸெக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.இது சரியான கருத்தல்ல என எடுத்துக்காட்டி, ‘ஸெக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவதுபோல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அது, அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவையாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘ஸெக்யூலரிஸம்’ ஆகும்.பிரஜைகளின் உடல்நலத்துக்கும், உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் வழிவகைகள் காண்பதான விவசாயம், பொருளாதாரம், உலகியலை மையப்படுத்திய கல்வி, சுகாதாரம், உள்நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது ஓர் அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்பது உண்மையாயினும், அதோடு பொறுப்பு முற்றிலும் முடிந்து விட்டதாகக் கருதுவதற்கில்லை. உடலைவிட முக்கியம் உள்ளமேயன்றோ? பிரஜைகளின் அந்த உள்ளமாம் உயிரை அபிவிருத்தி செய்வதை ஓர் அரசாங்கம் புறக்கணிக்க முடியுமா? உள்ளவுயர்வு பெறாத மக்கட்கூட்டம் வாழும் நாடு நாடாகுமா? ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்பதன்றோ ஆன்றோர் - சான்றோர் அறிவுரை? எனவே, ஒரு நாட்டின் பரிபாலனத்துக்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், நாடு நாடாக இருக்க வேண்டுமாயின், மக்களின் உள்ளத்தை உயர்த்தவும் நிச்சயமாக உதவி புரியத்தான் வேண்டும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment