Search This Blog

Monday, November 18, 2013

ஆனந்த் - கார்ல்சன்

 
ஆனந்த் - கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டியினால் இந்திய செஸ் வளர்ச்சியின் மீதான கவனம் அதிகமாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நல்ல செய்தி. FIDE rated players என்று சொல்லப்படுகின்ற அதிகப் புள்ளிகள் கொண்ட வீரர்களில் இந்தியாவும் பிரான்ஸும் இப்போது சமநிலையில், முதலிடத்தில் உள்ளன. இந்தியாவின் முதல் FIDE rated player, விஸ்வநாதன் ஆனந்த் அல்ல. மேனுவல் ஆரோன் (FIDE பட்டியலில் வர ஆயிரம் புள்ளிகள் இருந்தாகவேண்டும்.) இந்தியாவின் முதல் இன்டர்நேஷனல் மாஸ்டர் இவர்தான். ஆனந்தின் வரவுக்குப் பிறகு இந்திய செஸ் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. அதுவும் கடந்த பத்து வருடங்களில் பலமடங்கு அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் இப்போது 34 கிரான்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, குஜராத் பள்ளிகளில் செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு எந்த நாடுகளை விடவும் இந்தியாவில்தான் அதிகமாக நபர்கள் செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரான்சு, கடந்த 10 வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது. எப்படியும் அடுத்த மார்ச், ஏப்ரலில் பிரான்சைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டி.வி.யில் லைவாகப் பார்ப்பது புதிய அனுபவம், அதுவும் கமென்ட்ரியோடு. கமென்டேட்டர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பவர், சூசன் போல்கர். ஹங்கேரி, புதாபெஸ்டைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வாழ்கிறார். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல் கரின் சகோதரி. சூசன், பெண்களில் முதல் கிரான்ட் மாஸ்டர் என்கிற பெருமையை உடையவர். ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் வீராங்கனை. உலகில் எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் அதைப் பற்றிய விவரங்களைத் தம் இணையதளத்தில் வெளியிடுகிறார். அடிக்கடி செஸ் தொடர்பான போட்டிகளை வாசகர்களுக்கு வைப்பார். சூசன், 1990களில் ஆனந்துடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறார்.  

அப்போது ஆனந்த் பரபரப்பாக ஆடுவார். எவ்வளவு பெரிய கிரான்ட் மாஸ்டராக இருந்தாலும் அரை மணி நேரத்தில் தோற்கடித்து விடுவார். அவர் மூளை கம்ப்யூட்டர் போலச் செயல்படும்" என்கிறார். 
 
சரி, யார் அடுத்த உலக சாம்பியன்? ஆனந்தை லேசில் நினைக்க முடியாது. இது மாதிரியான போட்டிகளில் அவர் மிகவும் கடினமாக ஆடுவார். ஆனால், கார்ல்சன் அடுத்த ராஜாவாகத் தயாராக இருக்கிறாரா என்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்.
 
ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment