Search This Blog

Monday, November 18, 2013

அருள்வாக்கு - மனோபாவம் அவசியம்

சிஷ்யன் பண்ணுகிற பாபம் குருவையே போய்ச் சேருகிறது. இவனுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தராமல் இவனை ஒழுக்கமுள்ளவனாக்கவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாவிட்டால், அதற்குத் தண்டனை உண்டு. சிஷ்யனை அவர் யோக்கியனாக்க முடியவில்லை, அவன் ஒரு பாபம் செய்கிறான் என்றால், அந்தப் பாபம் சிஷ்யனைத் தாக்காது. அவனைச் சீர்த்திருத்தத் தவறிய குருவையே சென்றடையும்.
 
இப்போது ஸ்கௌட் காம்ப் (சாரணர் முகாம்) என்று குழந்தைகளை ஒரு மாஸம், அரை மாஸம் வெளியூருக்கு அனுப்புகிறீர்கள் அல்லவா? இதையே கொஞ்சம் விஸ்தரித்து ஒரு ஆசார்யனிடத்தில் ஒரு வருஷமாவது கூட வசித்து பிக்ஷாசர்யம் பண்ணி வரும்படியாக ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்கிறேன். இதனால் அநேக நல்ல பழக்கங்கள், கட்டுப்பாடுகள் உண்டாகும்; குரு பக்தி என்பதன் த்வாரா (வழியாக) இத்தனையும் ஏற்படும்.
 
குழந்தைகளைத் தங்களோடு வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கப் பிரியப்படுகிற குருமார்களையும் அவர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடிய பெற்றோர்களையும் சமூக உணர்ச்சியின் மூலம்தான் உண்டாக்க வேண்டும். இந்த ஸஹாயத்தைச் செய்யும்படியாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படிப்பு முடிந்த பின் தக்ஷிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தினருக்காகவும் மற்றவர்கள் தரவேண்டும். அநேகமாக இப்படிப்பட்ட வசதியில்லாதவர்கள்தான் குழந்தைகளைக் குருகுலவாஸத்துக்கு அனுப்பக்கூடியவர்கள். அவர்களுக்கான ஸஹாயத்தை அங்கங்கே பத்துப்பேர் சேர்ந்து பண்ணினாலும் போதும். தனியாகப் பெரிய ஸ்தாபனம் என்று ஏற்படுத்தக்கூட வேண்டும். ஸ்தாபனம் கூடவே கூடாது என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஆனால் அப்படிப் பெரிய ஸ்கேலில் நடப்பதற்காக நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன். இப்போது நம்மளவில் சாத்யமான அளவுக்கு ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறேன். நாம் ஒவ்வொருவரும் சொந்த அக்கறை (Personal interest) காட்டி, தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம். இந்த மனோபாவம் வருவதுதான் அவசியம்.  

எனவே நாம் இதில் முயற்சி எடுக்க வேண்டும். யார் வருவார்கள் என்று முயற்சி பண்ணாமலே இருந்துவிடக் கூடாது. மனப்பூர்வமாக முயற்சி பண்ணினால் பத்துப் பேராவது பலன் அடையாமல் போக மாட்டார்கள்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment