Search This Blog

Monday, November 18, 2013

அன்னாசி


பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத்திலிருந்து எதையெதையோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக ஏற்றுமதி செய்தார். ஆனால், நீண்ட கப்பல் பயணத்தில் அந்தப் பழங்கள் எல்லாம் அழுகிவிட்டன. கொலம்பஸ் நொந்துபோனார்.நல்லவேளையாக, ஒரே ஒரு பழம் மட்டும் அழுகாமல் தப்பியிருந்தது. அதைத் தன்னுடைய அரசர் ஃபெர்டினாண்ட்க்கும் அரசி இசபெல்லாவுக்கும் பரிசாகக் கொடுத்தார் கொலம்பஸ்.அந்தப் பழத்தின் தலையில் கிரீடம்போல இலைகள் முளைத்திருந்தன. சொரசொரப்பான தேகம். தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருந்தது, முகர்ந்து பார்த்தால் ஆளை மயக்கியது.வாசனையிலேயே அசந்துபோன அரசர், அந்தப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டார். ஆஹா! நான் இதுவரை இப்படி ஒரு பழத்தைச் சாப்பிட்டதில்லையே" என்று கிறங்கிவிட்டார்.உடனடியாக இந்தப் பழத்தை நம் நாடு முழுவதும் விளைவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இனிமேல் தினம் நான் இதைச் சாப்பிடவேண்டும்!"

அரசர் நினைத்ததுபோல அது அத்தனை சுலபம் இல்லை. அந்தப் பழம் சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில், மண் வகைகளில்தான் விளையும். அன்றைய ஐரோப்பாவுக்கும் அதற்கும் ஒத்துப்போகவில்லை.அதனால் என்ன? மன்னர் நினைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதைத் தருவிக்கலாமே?அன்று தொடங்கி, அந்தப் பழம் அரசர்களின் விருப்பமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு செலவானாலும் சரி, அந்தப் பழம் எங்கே விளைகிறதோ அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.அபூர்வமாக மட்டுமே கிடைக்கும் அந்தப் பழத்தை அவர்கள் ‘அரசர்களின் பழம்’ (Fruit of the kings)என்று செல்லமாக அழைத்தார்கள்.இன்றைக்கு, அந்த அருமையான பழம் உலகம் முழுவதும் கிடைக்கிறது. மன்னர்கள் மட்டுமல்ல, நம்மைப் போன்ற மக்களும் வாங்கிச் சாப்பிடலாம்.ஆகவே, ‘அரசர்களின் பழம்’ என்ற பெயரைத் திருப்பிப்போட்டு, அதனைப் ‘பழங்களின் அரசன்’ (King of fruits) என்று மாற்றிவிட்டார்கள். ‘பைனாப்பிள்’ என்று ஆங்கிலத்திலும், ‘அன்னாசி’ என்று தமிழிலும் அழைக்கப்படும் சுவையான பழம் தான் அது!கடைக்குச் செல்கிறீர்கள். அன்னாசிப் பழம் ஒன்றைக் கையில் எடுக்கிறீர்கள். கடைக்காரரிடம் இந்தப் பழம் என்ன விலை?" என்று விசாரிக்கிறீர்கள்.உண்மையில் உங்கள் கேள்வியே தவறு. அது ‘பழம்’ அல்ல, ‘பழங்கள்’! 

ஆமாம், நாம் ஒரு பழமாக நினைக்கும் அன்னாசிக்குள் பல பழங்கள் ஒருங்கிணைந்து கூட்டணி சேர்ந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் "Multiple Fruit' என்று அழைக்கிறார்கள்.சந்தேகமாக இருக்கிறதா? ஓர் அன்னாசிப் பழத்தைக் குறுக்கே நறுக்கிப் பாருங்கள், மையத்தில் ஒரு தண்டு தெரியும், அதைச் சுற்றிச் சிறு கண் போன்ற பகுதிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழம். மொத்தமாகச் சேர்ந்து சொரசொரப்பான வெளித்தோலுடன் வளர்கின்றன!பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் அன்னாசிப் பழங்கள் அதிகபட்சம் ஓரிரு கிலோ எடைதான் இருக்கும். ஆனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவை மிகப் பெரியதாக வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ எடைவரை செல்லக்கூடும்.அன்னாசி புதர் போன்ற சிறு செடிகளில் விளைகிறது. பொதுவாக மலைச் சரிவுகளில்தான் அன்னாசி நன்றாகச் செழித்து வளரும். மலையோரக் கிராமங்கள் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதனைப் பயிரிடுகிறார்கள்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அன்னாசியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.‘பைனாப்பிள்’ என்ற ஆங்கிலச் சொல்லை, பைன் + ஆப்பிள் என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பைன் மரக் கூம்பைப் போல் சொரசொரப்பாக இருக்கும், ஆனால் வெட்டிச் சாப்பிட்டால் ஆப்பிளைப்போல ருசிக்கும் என்பதால் அப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.இதனைத் தமிழில் ‘அன்னாசி’ என்று அழைக்கிறோம். உண்மையில் இது போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து வந்த பெயர். செந்தாழை, பிருத்தி, அன்ன தாழை போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதனை அழைப்பது உண்டு.இந்தச் செடியின் தாவரவியல் பெயர் ‘அனனாஸ்’. இதற்கு ‘மிக நல்ல பழம்’ என்று அர்த்தம்.அன்னாசிப் பழத்தைத் தோல் சீவித் துண்டாக்கி அப்படியே சாப்பிடலாம். பல நாடுகளில் இதன்மீது உப்பு, காரப்பொடியைத் தூவி அப்படியே சாப்பிடுவார்கள். அப்படியே குச்சியில் குத்தி எடுத்து ஐஸ்க்ரீம்போலச் சுவைக்கிறவர்கள் உண்டு. இதேபோல, அன்னாசிப் பழரசமும் மிகச் சுவையானது. இந்தப் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள், ஜெல்லி தயாரிக்கிறார்கள், கேக் போன்ற இனிப்புகளின் மீது அலங்காரமாக நறுக்கி வைக்கிறார்கள்!

பிட்ஸாவில் பொதுவாகக் காரமான சமாசாரங்கள், காய்கறிகள்தான் சேர்க்கப்படும். ஆனால் அன்னாசிக்கு மட்டும் அங்கே விதிவிலக்கு, இனிப்பான அன்னாசிப் பழத்துண்டுகளைத் தூவிய பிட்ஸா உலகம் முழுக்கப் பிரபலம்.இவை தவிர, அன்னாசிப் பழத்தைச் சமைத்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. குறிப்பாக, அன்னாசி அல்வா பலருக்குப் பிடித்த இனிப்பு வகை. அன்னாசிப் பழத்தில் ரசம், பச்சடி, சாலட் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கேசரியில் இதனைத் துண்டாக்கிச் சேர்ப்பது தனி சுவையைத் தரும்.அன்னாசியில் பெரும்பகுதி தண்ணீர்தான். ஆகவே, இதை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும், ஆனால் தொப்பை போடாது.பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை இதில் ஏராளமாக உண்டு. வைட்டமின் இயும் அதிகமாக இருக்கிறது.அன்னாசிப் பழத்துக்கு மருத்துவ குணங்களும் நிறைய உண்டு. உடலில் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. வயிற்றில் புழுக்கள் இருந்தால் அவற்றை நீக்கிக் குணப்படுத்தும். வியர்வை, சிறுநீர் சுரப்பில் இருக்கக்கூடிய கோளாறுகளை அகற்றும். உடலில் காயம்படும்போது ரத்தம் அதிகம் வெளியேறாமல் காக்கும்.‘பைனா’வை நேரடியாகவோ, அல்லது, பட்டு, பாலியெஸ்டருடன் சேர்த்தோ நெசவு செய்யலாம். இதிலிருந்து சில விசேஷமான ஆடைகளைச் செய்கிறார்கள். மேஜை விரிப்பு, பைகள், பாய்கள் போன்றவற்றையும் தயாரிக்கிறார்கள்.அன்னாசியை நறுக்கும்போது நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற தோல், இலைகள் போன்றவற்றுக்கும் பயன் இருக்கிறது. வினிகர் உற்பத்தியிலும், வேறு சில பானங்களைத் தயாரிக்கும்போதும் இவற்றைச் சேர்க்கிறார்கள், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.

என்.சொக்கன்

1 comment:

  1. "மழைக்காகிதம்"
    இந்த வார்த்தைதான் உங்கள் ப்லாக்கிற்கு
    இழுத்து வந்தது.

    இந்த வார்த்தை எனக்கு அறிமுகமான்பொழுது எனக்கு சிறு வயது,
    அப்பொழுது எல்லாம்
    கடைகளில் பொருள் வாங்குவது துனிப்பையில், காகிதப்பை அல்லது
    பொட்டலம், துனிக்கடை என்றால் சணற்பை. என்னுடன் படிப்பவர்கலிள்
    பெருந்தணக்காரர்கள் அயல் நாட்டில் இருந்து அல்லது பெருநகர்களிலிருந்து கொண்டுவரும்
    அழகிய வண்ணங்களுடன் வழுவழுப்பான பிளாஸ்டிக் பைகள் எங்களுக்கு ஏக்கப்
    பெரு மூச்சுதரும். மழையில் அவர்களின் புத்கம் நனைவதில்லை. நாங்களோ
    பெரும்பாடு பட வேண்டும். நணையமல் தோதாக இருப்பதாலே "மழைக்காகிதம்" என்றே
    அழைக்கப்பட்டது. அரிதான பொருளகவே இருந்தது. கால ஓட்டத்தில் மலிவான பிளாஸ்டிக் பைகள்
    கிடைக்க ஆரம்பித்தன. மலிவாக கிடைத்ததும் அதன் மீதான மோகம் குறைந்த்தது. சில நாட்கள்
    கடைகளுக்கு செல்லும்பொலுதெல்லாம் பைகளை தேடாமல் கை வீசி சென்று பிளாஸ்டிக் பேக்கில்
    வாங்கி வந்தேன்.
    ஒரு பெரு மழைக்காலத்தில் வடிகாலெல்லாம் நிரைந்தது சாலைகளில் ஓடியது. காரனம் மக்காத பிளாஸ்டிக்குகள்.
    மக்காத பிளாஸ்டிக்குகள் மண்ணின் வளத்தையும் கெடுத்ததை அறிந்ததும் மனம் கவிழ்ந்தது. இப்போதெல்லாம்
    தோதான இடதில் துணிப்பைகளை வைத்ருக்கிறேன். கடைகளுக்கு அவர்றையே எடுது செல்லுகிறேன். பிளாஸ்டிக்பையின்
    மீதான மோகம் இப்பொழுது இல்லை, ஆனலும் "மழைக்காகிதம்" என்ற வார்தை மண் வாசம்போல் மணதிற்க்குள் நிற்க்கிரது.
    கால சக்கரம் அரு முழுச்சுற்று முடித்து வைத்தது மீண்டும் அந்த இடத்த்திற்கே.
    ___ சரவணகுமார்

    ReplyDelete