Search This Blog

Friday, October 11, 2013

அருள்வாக்கு - வாக்கின் சக்தி!


தமிழ்நாட்டில் எத்தனையோ மகாகவிகள், பக்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாடியது முக்கியமாகப் பெரியவர்களுக்குத்தான். அவ்வையாருக்கு அவர்களைவிட கவிதா சக்தியோ, பக்தியோ குறைச்சல் இல்லை. அவள் ரொம்பப் பெரியவள்; ஞானி; யோக சாஸ்திரத்தில் கரை கண்டவள். ஆனாலும், அவள் குழந்தைகளை நல்லவர்களாக்க வேண்டும் என்பதில் முக்கியமாகக் கவனம் வைத்து, அவர்களுக்கு நல்ல குணங்களையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போதனை செய்து பாடினாள்.

பேரக் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே என்று கரிசனத்தோடு ஒரு பாட்டி நல்லது சொல்வது மாதிரி அவ்வைப் பாட்டி அத்தனை தமிழ்க் குழந்தைகளுக்கும் உபதேசம் செய்தாள். அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆன பிறகு, இப்போதும் நாம் குழந்தையாகப் படிக்க ஆரம்பிக்கிறபோதே, அவளுடைய ‘ஆத்திசூடி’தான் முதலில் வருகிறது.இத்தனை ஆயிரம் வருஷங்களாக அவளுடைய வார்த்தை எப்படி அழியாமல் தொடர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அவளுடைய வாக்கின் சக்திதான். பரமசத்தியமான ஒன்றை, நிறைந்த அன்போடு சொல்லிவிட்டால், அப்படிப்பட்ட சொல் ஆயிரம் காலமானாலும் அழியாமல் நிற்கிறது. அவ்வை இப்படி அன்போடு உண்மைகளை உபதேசித்தாள். நம்மில் கம்பர், புகழேந்தி, இளங்கோ போன்ற கவிகளைப் படிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், அவ்வை வாக்கு ஒன்றாவது தெரியாதவர் இருக்க முடியாது.அவ்வையாருக்கு இத்தனை வாக்கு சக்தி எங்கேயிருந்து வந்தது? வாக்குச் சக்தி மட்டும் இல்லை; அவளுக்கு ரொம்பவும் தேக சக்தியும் இருந்திருக்கிறது. அதனால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழந்தை ஒன்றுக்குக் கூட நம் வாக்கு கிடைக்காமல் போகக் கூடாதே! ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் இந்த உபதேசங்களைக் கொடுக்க வேண்டுமே!’ என்ற பரிவோடு அந்தப் பாட்டி ஒரு கிராமம் மிச்சம் இல்லாமல் ஓடி ஓடிப் போய், குழந்தைகளைத் தேடித் தேடி அவர்களுக்குத் தன் நூல்களைப் பரிந்து பரிந்து போதித்தாள்.

No comments:

Post a Comment