Search This Blog

Friday, October 25, 2013

இலக்கியத்துக்கான நோபல் பரிசு


சென்ற வாரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடா நாட்டைச் சேர்ந்த 82 வயதுப் பெண்மணி ஆலிஸ் மன்ரோ வாங்கியுள்ளார். அவரை நோபல் பரிசுக் குழு ‘நவீன கால மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது. 

1931-இல் கனடாவில் ஒரு பள்ளி ஆசிரியைக்கும், விவசாயிக்கும் மகளாக ஆலிஸ் பிறந்தார். திருமணமானதால் 1951இல் படிப்பை பாதியில் நிறுத்தினார். ஆனால் புத்தகத்தின் மீது ஆர்வமுள்ள இவரும், இவர் கணவரும் இணைந்து ஒரு புத்தகக் கடையை தொடங்கியுள்ளனர். புத்தகத்தின் மீது தீராக்காதல் கொண்ட ஆலிஸ் தமது 37வது வயதில்தான் முதல் சிறுகதைத் தொகுப்பை (டேன்ஸ் ஆஃப் த ஹேப்பி ஷேட்ஸ்) வெளியிட்டிருக்கிறார். இவரின் மற்றுமொரு சிறப்பம்சம் இவர்தான் நோபல் பரிசு வென்ற ஒரே கனடா எழுத்தாளர்! 

இது தவிர, 1993க்குப் பிறகு அமெரிக்க எழுத்தாளர்கள் யாரும் நோபல் பரிசு வாங்கவில்லை. நமது அண்டை தேசத்துப் பெண்மணி வாங்கியுள்ளதால் அமெரிக்க மக்களும் குஷியாக உள்ளனர். ஆனால் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இனி நான் எழுதப் போவதில்லை என்று சமீபத்தில் ஆலிஸ் பேட்டி கொடுத்துள்ளார். இவரின் குறிப்பிடத்தக்க பதிப்புகள் - Dance of the Happy Shades, The moons of Jupiter, Runaway, Open Secrets.ஹிலாரி கிளிண்டன் அடுத்த அதிபராக வரவேண்டும் என்று பலர் அமெரிக்காவில் ஆசைப்படுகின்றனர். இதற்கு வெள்ளோட்டமாக ஹாலிவுட்டில் அம்மணியைப் பற்றி ‘ரோதம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆனால் இப்படம் பெரும்பாலும் அவரின் இளமைக் காலத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது.

ஹிட்லர் பெண் போராளிகளை மட்டுமே கொண்ட நாஸி படை ஒன்றை உருவாக்கி இருந்தார் என்றும், அது வரலாற்றின் உட்சிக்கல்களால் மறைக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. ஆண் வீரர்களைப் போன்றே இந்தப் பெண்களும் யுத்தக்களத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மன் இராணுவம் சுமார் 5 இலட்சம் பெண் போர் வீரர்களைப் பயிற்சி அளித்து உருவாக்கியது. ‘ஹிட்லரின் ஃப்யூரிஸ்’ என்ற புத்தகம் இதுபற்றி விரிவாகக் கூறுகிறது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் கை ப்லாஷ் என்பவர்தான் திரைப்பட வரலாற்றிலேயே முதல் பெண் திரைப்பட இயக்குனர் ஆவார். 1873இல் பாரிஸின் புறநகரில் பிறந்தவர். ‘த காபேஜ் ஃபேரி - அந்த முட்டைகோஸ் தேவதை’ என்ற அர்த்தம் கொண்ட திரைப்படமே அவரது முதல் படைப்பாகும். தமது 23வது வயதில் 1896இல் வெளியிட்டார். சுமார் 1000 திரைப் படங்களில் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். 1910-ல் நியூயார்க்குக்குக் குடிபெயர்ந்தார். ஸ்டுடியோ ஒன்றை நிறுவி அதனை நிர்வகித்து வந்த முதல் பெண்ணும் இவரே ஆவார். அமெரிக்கக் கருப்பினர்களை மட்டும் கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படம் எடுத்த பெருமையும் இவரையே சேரும். பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செய்யப்பட்ட அந்தக் கால ஹாலிவுட் திரைத்துறையில் பெண் என்பதால் இவர் புகழ் பெருமளவில் வெளிவரவில்லை என்பது பலரின் ஆதங்கம். இவரது பங்களிப்புப் பற்றி ஒருசிலர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படத்தில் ‘கதை சொல்லித்தனம்’ தான் இவரின் சிறப்பம்சம். அதை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் இவரும் ஒருவராவார்.

No comments:

Post a Comment