Search This Blog

Saturday, September 28, 2013

தொண்டையைப் பாதுகாப்பது எப்படி?

 
கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல்வளையின் கீழ்ப்பகுதிவரை உள்ள குழல் பகுதியைத் ‘தொண்டை’ என்கிறோம். சுமார் 12 1/2 செ.மீ. நீளமுள்ள தொண்டை, நம் உணவுப் பாதைக்கும் சுவாசப்பாதைக்கும் பொதுவான பாதையாக இருக்கிறது. வாயில் தொடங்கும் உணவுப்பாதை தொண்டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மூலம் இரைப்பைக்குச் செல்கிறது. இதுபோல் மூக்கில் தொடங்கும் சுவாசப்பாதை தொண்டை வழியாகச் சென்று, உணவுக்குழாய்க்கு முன்பக்கமாக, சுவாசக்குழாய் மூலம் நுரையீரலுக்குச் செல்கிறது. இவற்றில், சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். அதன்வழியாக காற்று போவதும் வருவதுமாக இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும்; உணவு சாப்பிடும் போது மட்டும் திறக்கும். உணவு உள்ளே போனதும் மூடிக்கொள்ளும். சுவாசம் தொடரும். 
 
தொண்டையில், சுவாசப்பாதையும் உணவுப்பாதையும் இணைகிற இடத்தில், சுவாசக்குழாயின் வாசலாக ‘குரல் வளை’ இருக்கிறது. இதில் வீணையில் நாண்கள் இருப்பதுபோல் இரண்டு குரல்நாண்கள் உள்ளன. இவற்றின் அசைவினால்தான் குரலோசை ஏற்படுகிறது. பேசுவது, கோபமாகக் கத்துவது, கிசு கிசுப்பாகப் பேசுவது, பாடுவது, ‘மிமிக்ரி’ செய்வது என்று குரலோசையைக் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் குரல்நாண்கள் மட்டுமல்லாமல், வாய், கன்னம், தொண்டை, டான்சில், மூக்கு, சைனஸ் அறைகள் என்று ஒரு ‘பட்டாளமே’ கூட்டுமுயற்சி செய்கின்றன. மேலும், குரல்வளையானது வெறும் ஓசையை எழுப்புகின்ற வேலையை மட்டும் செய்யவில்லை; சுவாசக்குழாய்க்குள் காற்றை அனுப்புவது, உணவுக்குழாய்க்கு வருகிற பொருள்கள் சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடாதபடி தடுப்பது போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறது.நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று இவை மூன்றும் சுத்தமாக இல்லாவிட்டால், தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொண்டை வலிக்கும். இருமல், காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுவது, காதுவலி போன்ற தொல்லைகளும் ஏற்படும். புகைபிடித்தாலும் அடிக்கடி தொண்டைவலி வரும். ‘சமையல் உப்பு + இளம்வெந்நீர்’ கரைசலில் வாயையும் தொண்டையையும் கொப்பளித்தால், ஆரம்பநிலையில் உள்ள தொண்டைவலியைக் குறைக்கலாம். தகுந்த வலிநிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால், தொண்டைவலி முழுவதுமாகக் குணமாகும். குழந்தைகளுக்கு வருகிற ஒரு முக்கியமான தொல்லை டான்சில் வீக்கம். தொண்டையில் உள்நாக்குக்கு இருபக்கமும் உள்ள நிணநீர்த்தசைக்கு ‘டான்சில்’ என்று பெயர். இது, காற்றில் வருகிற கிருமிகளை அடையாளம் கண்டு, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. ஆகவே, இது உடலுக்குப் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. இருந்தாலும், சில வேளைகளில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது டான்சிலும் பாதிக்கப்பட்டு வீங்கிவிடும். அப்போது தொண்டையில் வலி, காய்ச்சல், கழுத்தில் நெறிகட்டுதல், காதுவலி போன்ற தொல்லைகள் ஏற்படும். நோயின் ஆரம்பநிலையில் இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகளே போதும். அடிக்கடி டான்சில் வீங்குகிறது, காது வலிக்கிறது, காதில் சீழ்ப்பிடிக்கிறது, வாந்தி வருகிறது, பசியின்மை போன்றவை தொடருமானால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. 
 
உணவை உண்ணும்போது, உணவுக்குழாய்க்குள் உணவு செல்லாமல், சுவாசக்குழாய்க்குள் சென்றுவிட்டால், அதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் இறங்கும். அப்போது தொடர்ந்து இருமல் வரும். இதைத்தான் ‘புரையேறுதல்’ என்கிறோம்.
 
பேசிக்கொண்டே உண்பது, அவசரமாக உணவை விழுங்குவது போன்ற காரணங்களால் புரையேறுகிறது. அழுத்தமாக பலமுறை இருமினாலே புரையேறிய பொருள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் புரையேறியவரை குனியச் சொல்லுங்கள். அவரது முதுகுப் பக்கமாக நீங்கள் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளையும் அவரது தொப்புளுக்கு மேலே உள்ள வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும் மேல்புறமாகவும் ஒரே அழுத்தாகத் திடீரென அழுத்துங்கள். புரையேறிய பொருள் வெளியேறி விடும்.  குழந்தைகள் விளையாடும்போது கோலி, பலூன், விசில், நாணயம், ஊக்கு, மாமிச எலும்பு, ஸ்குரூ என்று எதையாவது ஒன்றை விழுங்கிவிடுவார்கள். அது தொண்டையில் மாட்டிக் கொள்ளும்போது சுவாசம் தடைபடும். எக்ஸ்-ரே மற்றும் சி.டி. ஸ்கேன் மூலம் தொண்டையில் அடைத்துள்ள பொருட்களைத் தெரிந்து கொள்ளலாம். பொருளை விழுங்கியது சின்னக் குழந்தையாக இருந்தால், அதன் காலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கவிட்டபடி முதுகில் தட்டினால், தொண்டையில் உள்ள பொருள் வெளியில் வந்துவிடும். பொருள் வெளிவரவில்லை என்றால், மருத்துவரிடம் செல்ல வேண்டும்.தொண்டையில் உள்ள தசைகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது விறைப்பாக இருக்கும். தூங்கும்போது தளர்ந்துவிடும். ஆழ்ந்த தூக்கத்தில் இவை சுவாசக்குழாயில் சரிந்து அழுத்தும். இதனால் சுவாசம் தடைபடும். உடனே சரிந்த தசைகளைத் தள்ளுகிற முயற்சி நிகழும். தொண்டைத் தசைகள் அதிரும். அப்போது ஏற்படுகிற ‘கொர்ர்ர்..’ சத்தம்தான் குறட்டை. சளியுடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் வீக்கம், தைராய்டு பாதிப்பு, உடல் பருமன், கழுத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருவது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம போன்றவை குறட்டைக்கு வழிவகுக்கும். குறட்டைத் தொல்லை உள்ளவர்கள் மல்லாக்கப் படுக்காமல், ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால், குறட்டையின் அளவு குறையும்.
 
தொண்டையைப் பாதுகாக்க...

தினமும் ஒருமுறையாவது உப்பு போட்ட வெதுவெதுப்பான தண்ணீரில் கொப்பளிப்பது நல்லது. அதிகச் சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடக்கூடாது; அருந்தக் கூடாது. மிதமான சூடுதான் தொண்டையைப் பாதுகாக்கும். நன்றாகப் பல் துலக்குவது, சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிப்பது போன்றவற்றால் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். வாய்ச்சுத்தம் தொண்டைப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். புகைபிடிப்பது, புகையிலை போடுவது, பாக்கு மற்றும் பான்மசாலா மெல்லுவது தொண்டைக்கு ஆகாது. அடிக்கடி உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் திணறல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
 

No comments:

Post a Comment