Search This Blog

Saturday, July 20, 2013

ஆடி அமாவாசை - பித்ரு பூஜை!


தை அமாவாசை, ஆடி அமாவாசை இரண்டுமே பித்ருக்களைப் பூஜிக்கும் முக்கிய நாட்களாகக் கருதப்படுகின்றன. என்ன காரணம்? சூரியனின் வட திசைப் பயணமான உத்தராயணம் தை மாதம் ஆரம்பமாகிறது. தென்திசைப் பயணமான தட்சிணாயனம் ஆடி மாதம் தொடங்குகிறது. அதனால்தான், ஆடி மற்றும் தை மாத அமாவாசைகள் விசேஷமானதாக விளங்குகின்றன. இந்த இரண்டு தினங்களும் பித்ருக்களின் ஆசியை நமக்குப் பெற்றுத்தரும் அருமையான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரியாமலோ, வாழ்வில் நம்மை அறியாது பல பாவங்களுக்கு நாம் உட்படுகிறோம். பல பிறவிகளில் செய்த பாவங்களும் இப்பிறவியில் நம்மை நிம்மதியின்றி தவிக்க விடுகின்றன. ஆழமாகச் சிந்தித்தால், நமது தவறுகள் நமக்குப் புரியும்.

வயதான பெற்றோர்களை சரிவர பராமரிக்காமல் அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது... நகரத்தின் பழக்கங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்று கூறி, கிராமத்தில் பெற்றோரை தனியே வைக்கிறார்கள்... பெற்றவர்களை ஷிப்டு முறை போல அடுத்த மகளிடம் அல்லது மகனிடம் அனுப்புவது... என்ன வேதனை அந்தப் பெற்றோர்களுக்கு! பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு பிறருக்கு கல்விச் செலவுக்கு உதவுகிறேன்... கோயிலில் அன்னதானம் செய்கிறேன் என்பதால், நம் பாவம் நீங்கி புண்ணியம் பெருகிவிடாது. இவை அனைத்தும், இப்பிறவியில் நடைமுறை வாழ்வில் தினமும் நடப்பதை நாமே பார்க்கிறோம். இவற்றின் விளைவுதான், நமக்கு ஏற்படுகின்ற காரணமில்லாத பிரச்னைகள்.

இவற்றுக்குப் பரிகாரமே பித்ருக்களை பூஜிப்பதும், குலதெய்வத்தை ஆராதனை செய்வதும்தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

குடும்பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்றியதும், ஆனந்தப்பட்டு தன்னுடைய பித்ரு கடமைகளைச் செய்து தங்களைக் கரையேற்றுவான் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காகவே ஏற்பட்டது பித்ரு தர்ப்பண பூஜை. தேவலோக மூலிகையான தர்ப்பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேதமின்றி தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும்.

திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வருடந்தோறும் விழாவாகவே நடைபெற்று வருகிறது. குடந்தையில் சாரங்க பாணிப் பெருமாள் தன் பக்தனுக்கு திதி கொடுக்கிறார். திலதர்ப்பணபுரியில் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தர்ப்பணமளிக்கிறார்.

செங்கல்பட்டுக்கு அருகில் நென்மேலி என்ற இடத்தில் உள்ள பெருமாளுக்கு ‘சிராத்த சம்ரட்சணப் பெருமாள்’ என்ற திருநாமம். தினமும் கோயில் குளக்கரையில் பெருமாள் எழுந்தருளி மூதாதையருக்கு சிராத்தம் கொடுக்கிறார்.

கொடுமுடி, பவானி, திருப்புட்குழி, ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். ‘கூடுதுறை’ எனப்படும் ஆறுகள், கடல்கள் சங்கமமாகும் கரையோரங்களில் திரளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்வது வழக்கம்.

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறையாக பித்ருபூஜை செய்யும் வழக்கமும் உண்டு. முண்டம் என்பது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் பித்ருக்களைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்சய வடத்தின் வேர்ப்பாகத்தைத் தரிசிப்பது. ‘தண்டம்’ என்பது, காசி சென்று ‘பஞ்சநதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்னோர்களைப் பூஜித்து கங்கையில் நீராடி ஸ்ரீவிசுவநாதர், அன்னபூரணி, கால பைரவர் ஆகியோரை தரிசித்து தண்டம் சமர்ப்பிப்பதாகும். இங்கு அட்சய வடத்தின் மத்திம பாகத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்பது! கயையில் அட்சய வடத்தின் நுனி பாகத்தைத் தரிசித்து, பித்ருக்களிடம் பூஜை செய்தது திருப்தி தானா? குறைகளை மன்னிக்கவும் என வேண்டி, ஆல மரத்தடியில் நின்று வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு முறைப்படி பூஜை செய்து பித்ருக்களைத் திருப்திபடுத்துவதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற்பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் அருகில் அன்று காத்து இருப்பதால் அலகாபாத், காசி, கயை என சிரமம் பார்க்காமல் தை, ஆடி அமாவாசைகளில் சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணியம் சேர்க்கும்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில், சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீசுந்தரமகாலிங்கர். ஆடி அமாவாசை நாளில், சிறியவர் பெரியவர் என்கிற பேதமில்லாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் இவரை தரிசிக்க குழுமுகிறார்கள். சரிவர அமைக்கப்படாத மலைப்பாதை என்றாலும், தயங்காமல் ஏழு கி.மீ. மலையேறுகிறார்கள். அந்த நாளில், ஸ்ரீசுந்தர மகாலிங்கரை வழிபட்டு, தங்கள் பித்ருக்களின் நன்மைக்காக வழிபடுகிறார்கள். முடிந்தவர்கள் சதுரகிரி சென்று, அங்கே அந்த சமயத்தில் குழுமுகின்ற சாதுக்களுக்கு அன்ன மளிப்பதும் பெரும் புண்ணியம்.அப்படிச் செல்ல இயலாதவர்கள் தனுஷ் கோடி, கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், திரு வள்ளூர் வீரராகவ சுவாமி கோயில், கேரளத்திலுள்ள திருவல்லம் போன்ற புண்ணிய கே்ஷத்ரங்களின் படித்துறையில் பித்ருபூஜை செய்து வரலாம். பித்ரு தர்ப்பணம் முடிந்ததும் பசுவுக்கு கீரை, பழம் அளிப்பது, ஊன முற்றோர், நோயாளிகள் மற்றும் வறுமையில் பசியால் வாடுவோரைத் தேடிப்போய் அன்னமளித்து வஸ்த்ர தானம் செய்வது, பூஜையின் முழுப் பயனையும் பெற உதவும். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்நாளில் காகத்துக்கு ஒரு பிடி அன்னம் வைத்துவிட்டு பிறகு உண்ணுவது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment