Search This Blog

Wednesday, July 17, 2013

அருள்வாக்கு - ஆத்மா ஆத்மா!


சந்தோஷமாக இருப்பதாகச் சொல்வது மனசின் அனுபவங்களை வைத்துத்தான். ஆனால், சந்தோஷ அனுபவம் பெறுகிற இந்த மனசுதான் நாமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? எதெதையோ தெரிந்து கொள்வதிலும் எதெதையோ ஆராய்ச்சி பண்ணி உண்மைகளைக் கண்டுபிடிப்பதிலும்தான் மனுஷ்ய ஜீவனின் பெருமையே இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அணுவிலிருந்து galaxy வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் உண்மைகளை தினந்தினமும் தெரிந்துகொண்டு கர்வப்படுகிறோம். இப்படித் தெரிந்து கொள்கிற நாம் வாஸ்தவத்தில் யார் என்று ஆராய்ச்சி பண்ணித் தெரிந்துகொள்ள வேண்டாமா? தன்னுடைய சத்யமான ஸ்திதியையே தெரிந்துகொள்ளாமல் மற்றவற்றைத் தெரிந்துகொண்டு ‘சயன்ஸால் சத்யங்களைத் தெரிந்து கொள்கிறோமாக்கும்!’ என்று மார்தட்டிக் கொள்வது பரிகாசத்துக்கு இடமானதல்லவா? சத்ய சத்யமானதைத் தெரிந்து கொள்ள வேண்டும், அறிகின்ற அறிவை அறிய வேண்டும் என்றால் ஆத்ம சாஸ்திரத்தை அப்பியசிக்க வேண்டும்.

ஆத்ம சாஸ்திரங்களை இப்போதே தீவிரமாக அப்பியசிப் பதற்கில்லாத பெரும்பாலாருங்கூட, மெய்யான ஆத்மாவை அடியோடு மறந்து பொய்யான மனசுக்காகவே சதாவும் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக இருக்கப்படாது. அப்படி இருந்தால் நாம் ஏமாளி என்று ஆகிவிடும். அதனால்தான், எப்படிப்பட்டவராயிருந்தாலும், தினம் ஒரு அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷமாவது, ‘நம்முடைய காரியம், எண்ணம், லோகம் முதலான சகலமும் பொய்யாகப் போய் விடும் ஒரு பெரிய சாந்த பதம் ஆத்மா ஆத்மா என்று இருக்கிறது’ என்பதாக நினைப்பூட்டிக் கொண்டு, அந்த அஞ்சு பத்து நிமிஷம் சாந்தமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



No comments:

Post a Comment