Search This Blog

Saturday, May 18, 2013

தோனி = நூறு கோடி!

 
தோனியின் ஒருவருட விளம்பர வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூ. 100 கோடி. இந்திய விளையாட்டு வீரர்களில் யாரும் இந்தளவுக்கு ஒரு வருடத்தில் சம்பாதித்தது கிடையாது. ஒரு விளம்பர ஒப்பந்தத்துக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் சார்ஜ் பண்ணுகிறார். இதுவரை 17 நிறுவனங்களுடன் தோனி கைகோத்திருக்கிறார். உலகளவில் பிரபலமான உசைன் போல்ட், ஜோகோவிச் போன்றவர்களை விடவும் அதிகம் சம்பாதிக்கிறார் தோனி. 
 
இதோ இன்னொரு சாய்னா! 
 
இந்திய பேட்மிண்டனுக்கு அடுத்த சாய்னா நேவால் கிடைத்திருக்கிறார். 17 வயது பி.வி. சிந்து, மலேசிய கிராண்ட் ஃப்ரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் போட்டியை வென்று சீன வீராங்கனைகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். அவருடைய முதல் கிராண்ட் ஃப்ரிக்ஸ் பட்டம் இது. இப்போது, உலகளவில் 13வது இடத்தில் இருக்கும் சிந்து, அடுத்ததாக, முதல் பத்து இடங்களுக்குள் நுழைய பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. ‘பொதுவாக, பேட்மிண்டனில் சீனர்களின் ஆதிக்கம் அதிகம். ஆனால், என்னால் சீன வீராங்கனைகளை ஜெயிக்க முடியும்’ என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் சிந்து. மலேசிய கிராண்ட் ஃப்ரிக்ஸ் வெற்றியால் சிந்துவுக்குப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. Universal Collectabillia என்கிற விளம்பர நிறுவனம் டெண்டுல்கர் மற்றும் அவர் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம், சிந்துவின் போட்டிகளுக்கான செலவுகளை அடுத்த 2016 ஒலிம்பிக்ஸ் வரை கவனித்துக் கொள்கிறது. மலேசிய போட்டியை ஜெயித்ததற்கும் சிந்துவுக்கு ரூ. 5லட்சம் கொடுத்துள்ளது.
 
ஜோகோவிச் Vs நடால்!
 
 
மே 26ம் தேதி ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது. பீட் சாம்பிராஸ், போரிஸ் பெக்கர், ஜோகோவிச், எட்பர்க் போன்ற பிரபல டென்னிஸ் வீரர்கள் எல்லாம் ஒருமுறைகூட ஜெயிக்காத போட்டி. ஆனால் ரஃபெல் நடால் இதுவரை 7 முறை ப்ரெஞ்ச் ஓபனை ஜெயித்துள்ளார். இதனால், இந்த முறையும் நடால்தான் வெல்வார் என்று டென்னிஸ் ரசிகர்கள் எடைபோடுகிறார்கள். ஒரே பிரச்னை, உலகின் முதல்தர வீரராக இருக்கிற ஜோகோவிச்சும் 5ம் ரேங்கிங்கில் இருக்கும் நடாலும் ப்ரெஞ்ச் ஓபனின் காலிறுதியில் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. நடால், காயம் காரணமாகச் சில மாதங்கள் டென்னிஸிலிருந்து விலகியிருந்ததால், அவருடைய ரேங்கிங் குறைந்துவிட்டது. இந்தத் தடவை, நடால், எட்டாவது முறையாக வென்றால் அதிகத் தடவை ப்ரெஞ்சு ஓபனை வென்ற சாதனையைச் சமன் செய்துவிடுவார். நடால் வெல்லாவிட்டால்? கடந்த 8 ஆண்டுகளில், மூன்றுமுறை தவிர, கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கங்கள் ஆகியவையெல்லாம் நடால், ஃபெடரர், ரோவாக் ஜோகோவிச், முர்ரே ஆகிய நான்கு பேரில் யாராவது ஒருவருக்குத்தான் சென்றிருக்கிறது. அதனால், இந்தமுறை நடால் அல்லது இந்த நான்கு பேரைத் தாண்டிய ஒரு புதிய வீரர் ஜெயிப்பதையும் நினைத்துப் பார்க்கமுடியாது. மேலும், இந்த நான்கு முன்னணி வீரர்களுக்குச் சவால் விடும் இளைஞர்களின் பங்களிப்பும் குறைவாக இருக்கிறது. 2012 இறுதியில், டாப் 50யில் ஒருவீரர் கூட 21 வயதிற்குள் இல்லை. 
 
பொறுப்பு + அர்ப்பணிப்பு = டிராவிட்!

ஐ.பி.எல். ஆரம்பிப்பதற்கு முன்னால், சிறந்த கேப்டன்களில், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக டிராவிட் இருப்பார் என்று எத்தனை பேரால் ஊகித்திருக்க முடியும்? ராஜஸ்தான் அணியை இளைஞர்கள், புதியவர்களின் பங்களிப்புடன் அருமையாக வழிநடத்தி வருகிறார் டிராவிட்.

முணுக் என்றால் கோபப்படும் கோலி, கம்பீர்களுக்கு மத்தியில், அணியைக் கட்டுக் கோப்பாக உருவாக்கியிருக்கிறார் டிராவிட். சாம்சன் போன்ற இளைஞர்களுக்குத் தாராளமாக வாய்ப்புகள் அளிக்கிறார். இதனால், ஐ.பி.எல். கோப்பையை டிராவிட் வெல்ல வேண்டும் என்று ஏராளமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ராகுல் டிராவிட்டிடம் உள்ள பொறுப்பு, அர்ப்பணிப்பு போன்றவை எல்லோரிடமும் இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!
 

No comments:

Post a Comment