Search This Blog

Saturday, May 11, 2013

அருள்வாக்கு - நல்லதை விருத்தி செய்!


லோகம் என்று இருந்தால் அதில் எல்லாமே நல்லதாக இல்லாமல் கெட்டதும் இருக்கத்தான் செய்யும். ஸ்ருஷ்டி தோன்றிய நாளாக இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ‘முடிவிலே, இந்த லோக வாழ்க்கையே - அதிலே நல்ல வாழ்க்கை என்று சொல்கிறதும் உள்படத்தான் - நிஜமில்லை; லோகாதீதமான, மாயாதீதமான ஒன்றுதான் நிஜம்; இதிலிருந்து அதற்குப் போய்ச் சேருவதுதான் நமது முடிவான லக்ஷ்யமாக இருக்க வேண்டும்’ என்று நமக்குக் காட்டுவதற்காகவே ஸ்வாமி இந்த லோகத்தில் கெட்டதுகளையும் வைத்திருக்கிறார் போலிருக்கிறது.

நாம் வாழுகிற இந்த பூலோகத்துக்கு ‘மிச்ரலோகம்’ என்று பெயர். அப்படியென்றால் ‘கலப்பு உலகம்’. என்ன கலப்பு என்றால் நல்லதும் கெட்டதும் கலந்து இருப்பதுதான். தேவலோகத்தில் எல்லாம் நல்லதே. அஸுர லோகத்தில் எல்லாம் கெட்டதே. மநுஷ்யர்களான நம்முடைய இந்த லோகத்திலோ இரண்டும் கலந்து மிச்ரமாயிருக்கும். அப்படித்தான் ஈச்வர நியதி. ஆனாலும் இதில் நல்லதை விடக் கெட்டது ரொம்ப ஜாஸ்தியாகி விட்டால் நாம் அந்தக் கெடுதலிலேயே அழுந்தி அழுக்காகி இங்கேயிருந்து போய்ச் சேர வேண்டிய லக்ஷ்யமான நிஜத்தை அடைய முடியாமலே போய்விடும். அப்படி ஆகுமாறு விடப்படாது.

ஏனென்றால் அப்போது ‘கலப்பு லோகம்’ என்ற இதன் பேரே பொய்யாகி இது அஸுர லோகமாக அல்லவா ஆகிவிடும்? அதோடுகூட, கலியின் கொடுமைக்கும் அதே சாஸ்திரங்களில் பரிஹாரம் - நிவாரணம் சொல்லியிருப்பதால், இங்கே இந்த யுகத்திலும் நல்லதற்குப் பாதியளவு இடமில்லாவிட்டாலும், நாற்பது சதவிகிதமாவது இடமுண்டு என்று காட்டுவதாகவே ஏற்படுகிறது. தற்காலத்தில் ஆகியிருப்பது போல் அந்த அளவுக்கும் கீழே நல்லது போய்விடுவதற்கு நாம் இடம் தரப்படாது. லோகம் பூராவும் இப்போது காணப்படுகிற மாதிரி கெட்டதிலேயே மேலும் மேலும் போய் விழுந்து மீட்சியே இல்லாமலாகி விடக்கூடாது. அதற்கு நல்லதை விருத்தி செய்து, கெட்டதைக் குறைக்க வேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment