Search This Blog

Saturday, May 18, 2013

அருள்வாக்கு = ஈடுபாடு!


‘எதனிடம் ஈடுபாடு வைக்கிறோமோ அது உயிருள்ள ஒன்று; அதிலே நம் சிற்றுயிர் ஈடுபாடு என்ற பெயரில் உறவு கொண்டாடுகிறது; அப்புறம் உறவும் போய், தானும் போய், அதுவேயாகிவிட வேண்டும்’ என்று இருப்பதே அன்பு. உயிர்! அது முக்கியம்! ப்ராண ஸ்நேஹிதன், உயிர்த் தோழன் என்கிறோமே, அப்படி உயிரோடு உயிர் சேர்வது அன்பு. செஸ்ஸுக்கு, கிரிக்கெட்டுக்கு உயிர் (இருப்பதாகத்) தெரிகிறதா?

ஸங்கீதம், நாட்யம், காவ்யம், ஆகியவற்றை உயிருள்ள தேவதையாக வைத்து தங்களையே அதற்குக் கொடுத்து ஈடுபாட்டுடன் அப்யாஸம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவற்றில் ரொம்பவும் உயர்ந்த கட்டத்தைத் தொடும்போது, மெய்மறந்து பண்ணினார்கள்" என்கிறோம். என்ன அர்த்தம்? அப்போதைக்குத் தனி - நானை அந்தக் கலைக்கே இவர்கள் கொடுத்து விடுகிறார்கள். அதைத்தான் ‘மெய்மறந்து’ என்கிறோம். அந்தக் கலைக்கு ‘உயிர்’ இருப்பதால் அதுவே இவர்களுக்குள்ளே புகுந்து இவர்களை அதில் உசந்த ஒன்றைப் பண்ணும்படிச் செய்கிறது.

ஸயன்ஸில் கூட இப்படி மெய்மறந்த நிலையில்தான் - ‘இன்ட்யூஷ’னில் - ஐன்ஸ்டைன் போன்றவர்கள் ‘டிஸ்கவரி’ பண்ணுகிறார்களென்றால், அதெப்படி? கலைகளை அப்யஸிக்கிறவர்களைப் போல அவர்கள் ஒன்றும் ஸயன்ஸ் ஒரு உயிருள்ள தேவதை என்று நினைக்கவில்லையே என்றால், எல்லா உயிர்களுக்கும் மேலே ஒரு பேருயிர் இருக்கிறதோ, இல் லியோ? அத்தனை கலை, ஞானம், கார்யம் எல்லாவற்றுக்கும் அதுதானே மூலம்? ஒரே ஈடுபாடாக, dedicated-ஆக இவர்கள் ஸயன்ஸுக்குத் தங்களை அர்ப்பித்துக் கொண்டிருப்பதை மெச்சி அந்தப் பேருயிரே அவர்களுடைய சிற்றறிவின் வேலைக்கு மேற்பட்ட இன்ட்யூஷனாக ஒரு உண்மையை அவர்களுக்குத் தெரிவித்து விடும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment