Search This Blog

Saturday, May 11, 2013

இந்திய சினிமா 100!


தெற்கு மும்பை கிர்கான் பகுதியிலுள்ள காரனேஷன் வெரைட்டி ஹால் அரங்கில்தான் முதன் முதலில் இந்தியாவின் முழு நீள சலனத் திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா’ (1913, மே-3 மாலை) திரையிடப்பட்டது. அதைத் தயாரித்து இயக்கியவர் தாதா சாகிப் பால்கே. அவரது பெயரால்தான் இந்திய அரசு சினிமாத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கிறது. முதல் முழுநீள சலனத் திரைப்படம் திரையரங்கில் திரையிட்டு மிகச்சரியாக இது 100 ஆவது ஆண்டு.இந்திய சினிமா 100 என்கிற நீண்ட பயணத்தின் முதல் அடியை எங்கிருந்து தொடங்குவது என்பது சற்று கடினமான விஷயம்தான். பால்கேவின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் முழு நீள மௌனப்படம் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பாகவே சிறு சிறு சினிமா முயற்சிகள் தொடங்கிவிட்டன. 

இந்திய சினிமா 100 என்கிற நீண்ட பயணத்தின் முதல் அடியை எங்கிருந்து தொடங்குவது என்பது சற்று கடினமான விஷயம்தான். பால்கேவின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் முழு நீள மௌனப்படம் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பாகவே சிறு சிறு சினிமா முயற்சிகள் தொடங்கிவிட்டன. 

1896-ல் அகஸ்டி நிக்கோலஸ் லூமியர், லூயிஸ் ழீன் லூமியர் சகோதரர்கள் எடுத்திருந்த ஆறு மௌனப் படங்களை, அவரது குழுவினர் இந்தியாவில் திரையிடும் பொருட்டு மும்பை வந்தனர். ஜூலை 7, 1896 அன்று மும்பை காலாகோடா பகுதியில் இருந்த வாட்சன் ஹோட்டலில் சில பார்வையாளர்களுக்கு அந்தப் படங்களைக் காண்பித்தனர். அதில் பார்வையாளராக இருந்த ஹெச்.எஸ்.பி. வடேகர் ஒரு மூவி கேமராவை லண்டனில் வாங்கி, அதில் அன்றாட நிகழ்வுகளைச் சிறு சிறு செய்திப்படங்களாக எடுத்துத் திரையிட்டார். 

1897-ல் எம். எட்வர்ட் என்கிற ஐரோப்பியர் தாம் எடுத்த துண்டுப் படங்கள் சிலவற்றை, சென்னை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். 1898 ஆம் ஆண்டு ஸ்டீவன்ஸன் என்பவர் கொல்கத்தா வந்திருந்தார். அங்கு திறந்தவெளி மைதானம் ஒன்றில் தனது flower of persia என்ற குறும்படத்தைத் திரையிட்டார்.அதே ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஹீராலால் சென் என்பவர் ஸ்டீவன்ஸனிடமிருந்து ஒரு கேமராவை விலைக்கு வாங்கி அதன் மூலம் A dancing scene என்ற குறும்படத்தை எடுத்து, அதனை ஒரு சிலருக்குப் போட்டுக் காண்பித்தார். அதுதான் இந்தியாவின் முதல் குறும்படமாக இருக்கக் கூடும். பிற்பாடு அவர் தமது சகோதரர் மோதிலாலுடன் சேர்ந்து ராயல் பயாஸ்கோப் என்ற கம்பெனி மூலம் சுமார் 42 சிறு படங்களை எடுத்தார். 1902-ல் ஜாம்ஷெட் பிரேம்ஜி மதன் என்பவர் துண்டுப் படங்களைத் திரையிடுவதற்காகவே கெட்டித்துணியிலான கூடாரம் (டென்ட்) ஒன்றை கொல்கத்தாவில் அமைத்து வணிக ரீதியாக படங்களைக் காண்பித்தார். லாபகரமான தொழிலாக அது இருக்கவே நிரந்தரமான அரங்கைக் கட்டத் தீர்மானித்த ஜாம்ஷெட்ஜி கொல்கத்தாவில் 1907-ல் எஸ் பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் திரையரங்கைக் கட்டினார். அதுதான் இந்தியாவின் முதல் திரையரங்கம். இன்றும் கொல்கத்தாவில் புகழ்பெற்று விளங்கும் அந்தத் திரையரங்கின் இன்றைய பெயர் சாப்ளின் சினிமாஸ். லூமியர் சகோதரர்கள் தயாரித்த சில துண்டுப் படங்களை அவரது குழுவினர் இந்தியாவெங்கும் ‘டூர்’ அடித்துத் திரையிட்டனர். அதனால்தான் ‘டூரிங் சினிமா’ என்று பெயர். அவர்கள் காண்பித்த life of Jesus என்ற படத்தைப் பார்த்து, திரைப்படத்துறைக்கு இந்தியாவில் வித்திட்டவர்கள் மஹாராஷ்ட்ராவின் திரையம்பகேஷ்வரில் பிறந்த பால்கேவும், கோவையில் பிறந்த சாமிக்கண்ணு வின்சென்டும்தான். 

1870-ல் பிறந்த பால்கே, பரோடாவிலுள்ள கலாபவன் பயிற்சிப்பள்ளியில் சிற்பம், ஓவியம், புகைப்படக்கலை ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக் கொண்டார். தொல்லியல் துறையில் பணிக்குச் சேர்ந்த பால்கே ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார். அச்சகம் குறித்த தொழில்நுட்பங்களை அறிய ஜெர்மன் சென்ற அவர் அங்கு நவீன புகைப்படக் கருவிகள் பற்றி அறிந்தார். அதற்குப்பிறகு இந்தியா வந்த அவர் Life Of Jesus படத்தைப் பார்த்தது முதல் தமது இலக்கு ஒரு திரைப்படத்தை இயக்குவது தான் என்று தீர்மானித்தார். அந்த முயற்சியின் விளைவே ‘ராஜா ஹரிச்சந்திரா.’1883-ல் பிறந்த சாமிக்கண்ணு வின்சென்ட் ரயில்வே துறையில் திருச்சி நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1905-ஆம் ஆண்டு ஃபதே எனும் சினிமா புரொடெக்ஷன் கம்பெனியின் ஊழியர் ‘டூபாண்ட்’ என்பவர் Life Of Jesus படத்தை இந்தியா எங்கும் திரையிட்டபடி திருச்சி வந்து சேர்ந்தார். இந்தியாவின் தட்பவெப்பம், இடைவிடாத ஊர்சுற்றல் காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட டூபாண்ட் வின்சென்டைச் சந்தித்தார். தம்மால் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய முடியாது என்பதால் தம்மிடமுள்ள கருவிகள், திரைப்படச் சுருள்களை 2000 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினார். மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் இருந்த வின்சென்டுக்கு அது இமாலயத் தொகை. ஆனாலும் எதிர்காலத்தில் இது இந்தியா எங்கும் ஈர்க்கக்கூடிய துறை என்பதை முன்கூட்டியே உணர்ந்த வின்சென்ட், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொகையைத் திரட்டி அவற்றை வாங்கினார். ரயில்வே வேலையை விட்டுவிட்டார். ஊரூராக டென்ட் அடித்து, மக்களைக் கவர மின்விளக்குகள் வைத்துத் திரையிட்டார். மௌனப்படங்கள் சலிப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் சில மேஜிக் நிகழ்ச்சிகளை இடையிடையே செய்து காண்பித்தார். நிரந்தர திரையரங்கம் கட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, கோவையில் 1914-ல் வெரைட்டி ஹால் என்ற பெயரில் (இன்றைய பெயர் டிலைட்) ஒரு திரையரங்கைக் கட்டினார். அதுதான் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம். சினிமா புரொடெக்ஷன் கருவிகளைத் தருவிக்கும் வினியோகஸ்தராகவும் இருந்தார் வின்சென்ட். பேசும் படங்கள் வர ஆரம்பித்த காலத்தில் ‘வள்ளித் திருமணம்’ என்ற படத்தையும், பின்னர் ‘ஹரிச்சந்திரா’ மற்றும் ‘சுமத்திர பரிணயம்’ போன்ற படங்களையும் தயாரித்தார். 

சாமிக்கண்ணு வின்சென்ட் ஒரு சினிமாக்காரர் மட்டுமல்ல. அவர்தான் முதன் முதலில் மின் அச்சகத்தை நிறுவியவர். அதோடு மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும் கட்டியவர். இரண்டுக்கும் தேவைப்படும் மின்சாரத்துக்காக மின்உற்பத்தி ஆலையையும் உருவாக்கியவர். ஆலைகளுக்குப் பயன்பட்டது போக உபரி மின்சாரத்தை பள்ளி உபயோகத்துக்கும், கோவையின் பொதுமக்கள் உபயோகத்துக்கும் தந்தார்.  பால்கேவுக்கும், சாமிக்கண்ணு வின்சென்ட்டுக்கும் ஆச்சர்யகரமான பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் Life Of Jesus படத்தால் ஈர்க்கப்பட்டு திரைத்துறையைத் தேர்வு செய்தவர்கள். இருவரும் அடிப்படையில் புகைப்படக்காரர்கள். இருவருமே ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து சினிமாவுக்காகப் பாதியில் வேலையை விட்டவர்கள். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஹரிச்சந்திராவைத் தயாரித்தவர்கள். அச்சகம் ஒன்றைச் சொந்தமாக வைத்திருந்தவர்கள். இப்படி பல...இருவருக்கும் உள்ள வேற்றுமை பால்கே பெயரால் சினிமாத் துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பெயர் அவரளவுக்குப் பரவலாகக் கவனப்படுத்தப்படவில்லை. திரையிடல் கலை நூறாண்டைக் கடக்கும் நிலையில், சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரால் கௌரவமிக்க விருது ஒன்று வழங்கப்படவேண்டும். அவரது படங்களும், இன்னும் அரிய பொக்கிஷங்களாக விளங்கும் தொடக்ககாலப் படங்களும் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். வருடங்கள் உருண்டோட, உருண்டோட கொண்டாட்டங்களால் நிறைவதல்ல வரலாறு. சரித்திரத்தை மாற்றியமைத்தவர்களை மறக்காமல் அங்கீகரிப்பதன் மூலம் வரலாறு நிறைவு கொள்கிறது.

பாரதிக்குமார்

No comments:

Post a Comment