Search This Blog

Wednesday, April 24, 2013

எனது இந்தியா (கல்லாயுதங்கள் !) - எஸ். ரா

வரலாற்றின் பணிகளில் ஒன்று, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவது. முறையான பதிவேடுகள், சான்றுகள் இல்லாத கற்காலத்தை அறிந்துகொள்ள நம்மிடம் இருப்பவை கல்லாயுதங்கள் மற்றும் குகை ஓவியங்கள் மட்டுமே. உலகின் முதல் ஆயுதங்களில் ஒன்று கல். கற்கால மனிதர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டுதான் வேட்டையாடி இருக்கின்றனர். பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள், உளிகள், கத்திகள் மற்றும் சிறிய கற்கருவிகள் தமிழகத்தில் பல்லாவரம், காஞ்சிபுரம், தர்மபுரி மற்றும் குடியம் குகைப்பகுதியைச் சுற்றி 30க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ள கல்லாயுதங்​களைக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பூமியில் எந்த இடங்களில் வாழ்ந்தனர், எப்படி வேட்டை​யாடினர் என்பதை மீள்ஆய்வு செய்கின்றனர். அப்படி ஆய்வு செய்யப்படும் ஆய்வியல் களங்களில் மிகமுக்கியமானது தமிழகம். அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சுற்றிய பகுதிகளும் தர்மபுரி மாவட்டத்து மலைப்பகுதிகளும்தான். இங்கே கிடைத்துள்ள பழங்கற்கால ஆயுதங்களை ஆராயும்போது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பகுதியில் மக்கள் வாழ்ந்தது தெரியவருகிறது. பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடுமுரடான கற்களை, வேட்டையாடப் பயன்படுத்தினர். பெரிய குவார்ட்சைட் பாறைகளை நெருப்பால் சூடாக்கிய பிறகு, அதன் மீது நீரை ஊற்றிப் பிளந்து ஆயுதங்கள் செய்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படியாக, கூழாங்கற்களாலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களை உடைத்து, சிறிய ஆயுதங்களாக மாற்றி இருக்கின்றனர். பின்னாளில் கல்லாயுதங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.


இன்றும் சென்னை மியூசியத்தில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல்லாயுதங்களைப் பார்க்கலாம். இவை, ராபர்ட் புரூஸ் புட் என்பவர் சேகரித்தவை. இவர், சென்னை நகரில் நிலவியல் ஆய்வாளராகப் பணியாற்றியவர். இந்திய நிலவியல் ஆய்வுகளின் தந்தை எனப்படும் ராபர்ட் புரூஸ், 1863-ல் சென்னையில் பல்லாவரம் அருகே கைக்கோடரி ஒன்றைக் கண்டுபிடித்தார். தனது நிலவியல் ஆய்வின் போது தற்செயலாகப் பார்த்த அந்தக் கல்லாயுதம் தனது வாழ்க்கையைப் புரட்டிப் போடப்போகிறது என்று ராபர்ட் புரூஸ் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தக் கல்லாயுதம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறிய முயன்ற அவரது ஆய்வு, இந்தியாவின் பழங்கற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அவரது ஆய்வுப்படி அந்தக் கோடாரி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது. இந்தக் கண்டுபிடிப்புதான், பழங்கற்கால ஆயுதங்கள் குறித்த புரூஸின் தேடுதல்களுக்கான முதல் புள்ளியாக அமைந்தது.

1834-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள செல்டன்ஹாமில் வசித்த வில்லியம் ஹென்றி புரூஸ் மற்றும் சோபியாவின் மகனாகப் பிறந்தார் ராபர்ட் புரூஸ். இளவயதில் இருந்தே பாறைகளை ஆராய்வதில் ஆர்வம்கொண்டிருந்த ராபர்ட், இதற்காகவே நிலவியல் ஆய்வுகள் குறித்த படிப்பைத் தேர்வுசெய்து படித்தார். 1858-ம் ஆண்டு இந்தியாவில் இயங்கிய கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய நிலவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றத் தேர்வுசெய்யப்பட்டு ராபர்ட் புரூஸ் கல்கத்தா வந்து சேர்ந்தார்.

இந்தியாவை ஆட்சிசெய்துவந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், இந்தியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாகக் கனிமங்களைக் கண்டறிவதில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். இதுபோலவே படை நடத்திச் செல்லும் வழி, மற்றும் குடிநீர் நிலவரம் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு நிலவியல் ஆய்வுகளை நடத்தினர். இந்திய ஆய்வுப் பணியின் தலைவராக இருந்தவர் தாமஸ் ஆல்ட்ஹெம். இவருக்குக் கீழே 12 பேர் கொண்ட குழு இருந்தது. அதில் ஒருவராக இணைந்தார் ராபர்ட் புரூஸ். இந்தியா குறித்து வாசித்து மட்டுமே அறிந்திருந்தவருக்கு, இந்திய மண்ணின் வேறுபட்ட நிலவியல் அமைப்புகள் மற்றும் இந்தியாவின் மிகையான வெக்கை, விசித்திரமானதொரு மனநிலையை உருவாக்கியது. நிலவியல் களங்களைத் தேடிச்சென்று நேரடியாக ஆய்வுசெய்த ராபர்ட் புரூஸ் பாறை அடுக்குகளின் இயல்பு குறித்து நிறையத் தகவல்களைத் திரட்டினார்.

மதபோதகர் பீட்டர் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆன் - ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு 1862-ல் திருமணம் நடந்தது. பெர்சிவல், யாழ்ப்பாணம் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். தேர்ந்த தமிழ் அறிஞர். பைபிள் மொழியாக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்தவர். பைபிளை மொழியாக்கம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த ஆறுமுக நாவலருடன் நட்பாக இருந்தவர். இலங்கையில் இருந்து மதறாஸ் வந்த பெர்சிவல், பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இங்கு ராபர்ட் புரூஸுடன் ஏற்பட்ட நட்பு, இந்தியாவின் தொன்மை குறித்த ஆய்வுகளின் வழியேதான் நடந்தேறியது, எலிசபெத்துடன் வாழ்ந்து நான்கு குழந்தைகளின் தந்தையானார் ராபர்ட் புரூஸ். எட்டு ஆண்டுகள் ராபர்ட்டுடன் வாழ்ந்த எலிசபெத் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தபோது, நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு தடுமாறினார் ராபர்ட் புரூஸ். ஆகவே, தன்னையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள எலிசா வெல்ஸ் என்ற இளம்பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். மெட்ராஸ் சர்வே பார்ட்டி எனப்படும் ராபர்ட் புரூஸின் ஆய்வுக் குழு, வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்களது நிலவியல் ஆய்வுப் பணிகளை நடத்தியது. இதில் பிளைன்போர்ட், ஆல்ட்ஹெம், வி.கிங், ஜியோகான் ஆகியோர் தனித்துவமிக்க நிலவியல் ஆய்வாளர்களாக விளங்கினர்.  
ராபர்ட் புரூஸ் மற்றும் கிங் இருவரும் பாறைகளை ஆய்வுசெய்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக, பல்வேறு பாறைப் படிவுகளைச் சேகரித்து, அவற்றின் காலம் மற்றும் தன்மை குறித்து நுட்பமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்காக சேலம், ஆற்காடு, சென்னை, நெல்லூர், கடப்பா, கர்நூல், கிருஷ்ணா பகுதிகளில் ராபர்ட் புரூஸ் அலைந்து திரிந்து நிலவியல் கூறுகளைத் துல்லியமாக ஆராய்ந்தார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல்லாவரம் பகுதியில் பாறைப் படிவங்​களை ஆராயும்போதுதான் ராபர்ட் புரூஸுக்கு கல்லால் ஆன கோடரி ஒன்று கிடைத்தது. அது, என்ன விதமான பொருள் என்று தெரியாமல் அதைச் சேகரித்துக் கொண்டுவந்தவர், தன்னிடம் இருந்த ஆய்வியல் வரைபடங்களைக்கொண்டு அது கற்கால ஆயுதம் என்பதை அறிந்தார். அந்த ஆயுதம் கிடைத்தவுடன், கற்காலச் சின்னங்கள் வேறு எதுவும் அந்தப் பகுதியில் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்.  அவரும் கிங்கும் இணைந்து அதிராம்பாக்கம் பகுதியில் அகழ்வாய்வு செய்தனர். அங்கு, பல்வேறு கல்லாயுதங்களைக் கண்டெடுத்தனர். அந்த ஆயுதங்களைக்கொண்டு அங்கே பழங்கற்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்த ராபர்ட் புரூஸ் புட், அதன் வயது ஐந்து லட்சம் ஆண்டுக்கு முற்பட்​டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் தொன்மை குறித்த புதிய வெளிச்சம் ஒன்றை உருவாக்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பழங்கற்காலத்தைய வாழ்வைத் தேடும் ஆய்வின் ஒரு பகுதியாக இது மாறியது. ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பியாவில் நடந்த அகழ்வாய்வில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மற்றும் கல்லாயுதங்கள் கிடைத்திருப்பதை அறிந்த ராபர்ட் புரூஸ், இந்தியாவிலும் அதுபோன்ற தொன்மையான மனிதக் குடியிருப்புகள் எந்த இடங்களில் இருந்திருக்கக்கூடும் என்று தேடுவதற்காக தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

இன்று, கற்காலத்தை அறியும் ஆய்வு மிகப் பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. ஆனால், ராபர்ட் புரூஸ் காலத்தில் அதற்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக, கிழக்கிந்தியக் கம்பெனி இதுபோன்ற ஆய்வுகளால் தங்களுக்குப் பிரயோஜனமில்லை என்று, அவரது கண்டுபிடிப்புகளைப் புறம்தள்ளியது. ஆனாலும் மனச்சோர்வு அடையாமல் தனது ஆய்வுப் பணியைத் தொடர்ந்த ராபர்ட் புரூஸ், 33 ஆண்டுகள் நிலவியல் அறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன் பிறகு, மூன்று ஆண்டுகள் பரோடா அரண்மனையில் அரசு நிலவியல் அறிஞராகவும், மூன்று ஆண்டுகள் மைசூர் அரண்மனையில் நிலவியல் அறிஞராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர், தனது முதுமையைக் கழிக்க ஏற்காட்டில் வசித்தார். கல்கத்தாவில் மரணம் அடைந்த ராபர்ட் புரூஸின் உடல் ஏற்காட்டில் அடக்​கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது கல்லறையும் அவரது மா​மனார் மதபோதகர் பெர்சிவலின் கல்ல​றையும் ஏற்காட்டில் சமீபத்தில் கண்டறியப்​பட்டுள்ளது.

No comments:

Post a Comment