Search This Blog

Monday, April 22, 2013

அருள்வாக்கு - ஆத்மாதான் நிஜ நாம்!


‘நிஜம்’ என்பதை ‘உண்மையானது’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ‘நிஜம்’ என்பதற்கு நிஜமான அர்த்தம், ‘தனக்கே உரிய ஸ்வபாவம்,’ ‘தன் உண்மை இயல்பு’ என்பதாகும். இரண்டு அர்த்தத்திலும் ஆத்மாதான் நிஜ நாம். அதை அறியாத நாம் மனஸின் பொய் வேஷத்தில் நம் ஸ்வபாவத்தைத் தெரிந்து கொள்ளாமலிருப்பவர்கள்தான். மனஸை நாமாகவே நினைத்து விடுகிற அளவுக்கு அது பெரிய வேஷம் போட்டு ஏமாற்றி விடுகிறது.

ஒரு வேஷமில்லை; மாறிக் கொண்டே இருக்கிற பல வேஷங்கள்! பழநியில் (தண்டாயுதபாணிக்கு) கிடுகிடுவென்று ஒரு அபிஷேகத்துக்கு மேல் இன்னொரு அபிஷேகமாகப் பண்ணித் திரைபோட்டு அலங்காரம் பண்ணித் திறந்து காட்டுவார்கள். ஒரு அலங்காரத்திலே ஆண்டிப் பண்டாரமாக நிற்பார்; கொஞ்ச நேரத்தில் இன்னொரு அபிஷேக, அலங்காரமாகித் திரையை விலக்கும் போது பார்த்தால் ராஜாவாகக் காட்சி கொடுப்பார்; அதற்கப்புறம் இன்னொரு அலங்காரத்தில் வேடரூபத்தில் தர்சனம் தருவார். அதேமாதிரிதான் நம் வேஷமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பிறந்ததிலிருந்து (கருவாய் உருவானதிலிருந்து, இன்னும் பின்னே போனால் எத்தனையோ ஜன்மத்துக்கு முன்னாலிருந்து) நம் உடம்பும் மனஸும் மாறிக் கொண்டே இருக்கிறதென்றால், ஒவ்வொரு மாற்றமும் ஒரு வேஷந்தானே? இருந்தாலும், ஒரு துணியும் போட்டுக் கொள்ளாமல், மல மூத்ரங்களை அடித்துக் கொண்டு, செருப்பு, துடைப்பக்கட்டை எதுவானாலும, ‘ஹாவு ஹாவு’ என்று கடித்துக் கொண்டு ‘ஹா ஹூ’ என்று விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையேதான் இன்றைக்கு எத்தனையோ நாசூக்கு நாகரிகம் பார்க்கிற நாம் என்பதாக ஒரு ‘நான் - எண்ணம்’ அன்றிலிருந்து இன்று வரை அறாத, மாறாத தொடரிழையாக இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த எண்ணத்துக்கு அடியில் நமக்கு உயிராதாரமாக இருப்பதுதான் ஆத்மா. அன்றைக்குக் குழந்தை வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமி என்று நமக்கும் தெரிந்து, மற்றவர்களுக்கும் தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment