Search This Blog

Thursday, March 21, 2013

மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம் !

மேல் பகுதியில் சாம்பல் நிறமாகவும் அடிப் பகுதியில் வெண்மை நிறமாகவும் இருக்கும். கழுத்தில்  கருமையான திட்டுக்களோடு, பார்க்க அழகாக இருக்கும்.’
 
இன்னும் கொஞ்சம் நாளில் சிட்டுக்குருவிகளைப் பற்றி இப்படி விவரிக்கத்தான் முடியும். பார்க்க முடியாது. ஆம், சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த சிட்டுக்குருவிகள்பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ம் தேதியை 'உலக சிட்டுக்குருவிகள் தினம்' என்று அனுசரித்துவருகிறார்கள்.

அழிந்த சேதி தெரியுமா?

செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் நகரங்களில் அடியோடு மறைந்துவிட்டன. நகரங்களின் கட்டட அமைப்பும் இவை கூடு கட்டுவதற்கு ஏற்றதாக இல்லை. தவிர, சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் நகரங்களின் தெருக்களில் கிடைப்பது இல்லை. கிராமங்களிலும் நிலைமை மோசம்தான். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால்,  அந்த உரங்களின் வேதியியல் நச்சுப் பொருட்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் அழிந்தன. அந்தப் பூச்சிகளை உண்டுவந்த சிட்டுக்குருவிகளுக்கும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மடிந்துவிட்டன. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டன.

ஏன் காப்பாற்ற வேண்டும்?

எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவுச் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தச் சங்கிலியில்  ஓர் உயிரினம் அழியும்போது, அந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைக்கப்படும். கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டை அச்சுறுத்திய டெங்கு காய்ச்சலுக்கும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படித் தெரியுமா?

சிட்டுக்குருவிகள், கொசுக்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். அவை இல்லாததால், கொசுக்கள் பெருகி நோயைப் பரப்பிவருகின்றன. எனவே, சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். ரசாயன உரங்களைத் தவிர்த்தல், நீர், காற்று மாசுபாட்டைத் தடுத்தல், மரங்களைக் காத்தல் போன்ற செயல்களால், சிட்டுக்குருவி இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது. இந்திய அஞ்சல் துறையும் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டு உள்ளது. நாமும் நம்மால் ஆன முயற்சிகளைச் செய்யலாம்.

நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும்  வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்டுக்குருவி களின் இனிய கீச் கீச் குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.

1 comment:

  1. நன்றி...

    எங்கள் ஊரில் இல்லை....

    படத்திலாவது பார்க்க முடிகிறதே...

    ReplyDelete