Search This Blog

Saturday, February 02, 2013

எனது இந்தியா (பூணூலைத் துறந்தவர் !) - எஸ். ராமகிருஷ்ணன...

இது, மரபான பிரம்ம சமாஜத்துக்கு எதிராக தேவாலயச் செயல்பாடு​போல அமைப்பை மாற்ற முயற்சிப்பதாக இருக்கிறது என்று தேவேந்திர நாத் தாகூர் கண்டனம் தெரிவித்​தார். இதன் காரண​மாக, இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்​பட்டது. சென், கலப்புத் திருமணம் நடத்திவைப்பதை தேவேந்திர நாத் தாகூர் ஏற்றுக்​கொள்ளவில்லை. 1865-ம் ஆண்டு பிரம்ம சமாஜத்துடன் உள்ள தனது தொடர்பைத் துண்டித்துக்கொண்ட சென் அதுவரை தான் அணிந்திருந்த பூணூலையும் அறுத்து எறிந்து இருக்கிறார்.

இந்த அமைப்பின் சார்பில் இந்தியன் மிர் தருமத்துவா ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டதாக பெ.சு.மணி தனது புத்தகத்தில் கூறி இருக்கிறார். சென் உருவாக்கிய பிரம்ம சமாஜமானது பெரும்பாலும் தேவாலயச் செயல்பாடுகளை ஒட்டியே உருவாக்கப்பட்டு இருந்தது. அதில், திருமணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையில்தான் நடத்தப்பட்டன. பிரம்மோ மிஷனரிகள் உருவாக்கப்பட்டு சமயப் பணிகளுக்காக வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், ஆதிப் பிரம்ம சமாஜமானது இந்தியாவின் மரபை, பண்பாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்தியது. இதற்கு தேவேந்திரநாத தாகூர் தலைமை வகித்தார். பிரம்ம சமாஜத்தின் இந்து மத அடிப்படைத் தொடர்பை விலக்கி, அதை ஓர் தனி அமைப்பாகக் காட்ட முனைந்தவர் கேசவ சந்திர சென். ராஜாராம் மோகன் ராய் முன்வைத்த சமூக அரசியல் கருத்துக்களில் தீவிர ஈடுபாடு காட்டிய பண்டித சிவநாத சாஸ்திரி என்பவர், எளிய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
தொற்றுநோய் பரவிய காலங்களில், பிஜய் கிருஷ்ண கோஸ்சாமி என்பவரது தலைமையில் பிரம்ம சமாஜம் நிதி திரட்டி மருத்துவ உதவிகள் செய்யத் தொடங்கியது. அத்துடன், பெண்களுக்காக கல்வி நிலையங்களை உருவாக்கியதுடன், சிறப்பு இரவுப் பள்ளிகளையும் ஏற்பாடு செய்தது. இதனால், தொழிலாளர்கள் கல்வி கற்பதற்கு வழிவகுக்கப்பட்டது. 1877-ம் ஆண்டு பிரம்ம சமாஜ விதிகளுக்கு முரணாக தனது மகளை கூச் பீகார் இளவரசருக்கு கேசவ சந்திர சென் திருமணம் செய்துவைத்தார். அந்தப் பெண்ணுக்கு அப்போது வயது 14. அத்துடன் திருமணச் சடங்குகள் யாவும் இந்து முறைப்படி நடந்தன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  இதன் காரணமாக, அமைப்பு உடைந்து சாதாரண பிரம்ம சமாஜம் என்ற புதிய அமைப்பு உருவானது.

இந்தியத் தத்துவம் பற்றிக் கூறும்போது, முனைவர் முத்துமோகன் இந்தியத் தத்துவத்தின் வரலாற்றை மிகத் தெளிவாக தனது பௌத்தமும் பெரியாரிசமும் என்ற கட்டுரையில் குறிப்​பிட்டு இருக்கிறார். அவரது வாதத்தின்படி கடந்த சுமார் 3,000 வருடங்களுக்கும் மேலான​தாக அறியப்பட்ட இந்திய வரலாற்றில் 'இந்தியத் தத்துவம்’ என்ற சொல்லாடல் எங்கும் எப்போதும் துலக்கமாகப் பேசப்பட்டதாகத் தெரிய​வில்லை. வெவ்வேறு வட்டாரங்களில், வெவ்வேறு சாதிக் கூட்​டங்களுக்கு இடையில் வெவ்வேறு தத்துவங்கள் இந்தியா என்ற துணைக்கண்டப் பெரும்பரப்பில் பேசப்பட்டு வந்துள்ளன.

காலனிய ஆட்சிக் காலத்தில் மேற்கத்திய ஆட்சியாளர்களும் கிறிஸ்தவ மிஷனரிமார்களும் சில ஐரோப்பிய அறிவுத் துறையினரும் இந்திய மதங்கள், இந்தியப் பண்பாடு, இந்தியச் சமூக அமைப்பு போன்ற விஷயங்களில் அக்கறை காட்டினர். இந்த அக்கறை, அவரவர் ஆட்சி அதிகாரம் அல்லது சமயப் பரப்புத் தேவைகளைச் சார்ந்து தோன்றியது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. இருப்பினும், இவற்றுக்கு ஊடாக ஐரோப்பியரின் லத்தீன், ஜெர்மன் போன்ற பழைய மொழிகளின் சாயல் இந்தியாவின் சமஸ்கிருத மொழியில் உள்ளது என்று ஒரு 'கண்டுபிடிப்பு’ 19-ம் நூற்றாண்டின் மத்தியில் அறிஞர்களுக்கு இடையில் அதிகம் பேசப்பட்டது. நவீன நாகரிகம் தீண்டாத பழைய ஆரியர்களின் பூர்வச் சிந்தனையை சமஸ்கிருத மொழி இலக்கியங்களில் கண்டறியலாம் என்று ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் சிலர் நம்பத் தொடங்கினர். 


ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த Theosophy என்னும் இயக்கம், பண்டைய இந்திய 'பிரம்ம ஞானத்தை’ சமயமும் தத்துவமும் இணைந்த ஒன்று என வரையறுத்தது. இறை என்பதைக் குறிக்கும் Theo என்ற சொல்லையும் மெய்யியல் என்பதைக் குறிக்கும் Sophia என்ற சொல்லையும் ஒரே சொல்லாக்கி அந்த இயக்கம் பயன்படுத்தியது. நவீன ஐரோப்பிய விஞ்ஞானத் தொழில்நுட்ப மற்றும் நகரமயமாக்கத்தால் அதிருப்தி அடைந்து இருந்த அறிவாளிகளே இந்த அணியில் அதிகமாக இடம்பெற்று இருந்தனர்.

ஐரோப்பியருக்கும் தமக்கும் பூர்வத் தொடர்புகள் இருந்தன என்ற செய்தி இங்கிருந்தோரைப் பெரிதும் புளகாங்கிதம் அடையச் செய்தது. இருப்பினும், காலனிய ஆட்சியின் போக்கில் இந்திய மேட்டுக்குடிகள் இந்திய விடுதலை என்ற கருத்தை நோக்கி முன்னேற வேண்டியிருந்தது. இந்த நிலையில், காலனி ஆட்சியால் இந்தியருக்கு விளைந்த இழிவுகளை ஈடுகட்ட இந்திய ஆன்மிகத்தின் பெருமையை இங்கிருந்தோர் பாராட்டி எழுதத் தொடங்கினர். பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்த்தனா சமாஜம் போன்ற அமைப்புகள் இங்கு உருவாகின. இவற்றின் ஊடாக இந்தியத் தத்துவம் என்ற சொல்லாடலும் முக்கியப்பட ஆரம்பித்தது. மிக முக்கியமாக, ஐரோப்​பியர் தமது தேவைகளுக்​காகப் பாராட்டிய சமஸ்​கிருத வழித் தத்துவங்​களையே இங்கிருந்த​மேட்டுக்​குடியினரும் பாராட்டிப் பேசினர்.

மேற்கூறிய போக்குகளில் இருந்து விலகிய ஒரு மூன்றாவது அணியும் இதே காலத்தில் தோன்றியது. இந்த அணியினர், இந்தியத் தத்துவங்களின் ஊடாகப் பயணப்பட்டு, அவற்றினுள் புதையுண்டு இருந்த மாற்று மரபுகளை, எதிர் மரபுகளை அடையாளப்படுத்தித் தோண்டி எடுத்தனர். மகாத்மா ஃபூலே, தாமோதர் கோசாம்பி, அயோத்திதாசப் பண்டிதர், ராகுல சாங்கிருத்தியாயன், பெரியார் போன்றோர் இவ்வகை மூன்றாவது அணியைச் சார்ந்தவர்கள்தான். உலகாயதம், சாங்கியம், நியாயம், பௌத்தம், தாந்திரிகம் போன்ற இந்தியத் தத்துவங்களுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். பிராமண மரபு என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாக சிராமண மரபு என்ற சொல்லும், ஆரிய மரபு என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாகத் திராவிட மரபு என்ற சொல்லும், இந்த காலகட்டத்தில்தான் கிளர்ந்து எழுந்தன. இந்து மதம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு மாற்றாக சீக்கிய மதம், இஸ்லாமிய மதம் போன்ற சொல்லாடல்களும், சித்தரியம், கபீரியம், சந்தர் மரபு, சைத்தன்யர் மரபு போன்ற மறைஞானச் சமயங்களும் நாட்டுப்புறச் சமயங்களும்கூட இக்காலத்தில் கண்டறியப்பட்டன என்கிறார் முத்துமோகன்.

இப்படிச் சீர்திருத்த இயக்கங்களில் மூன்று கிளைகள் உண்டானதும் அதில் எதிர்ப்பு இயக்கங்கள் மட்டுமே இன்று வலுப்பெற்று இருப்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பிரம்ம சமாஜத்துக்கு தமிழகத்திலும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. 1864-ம் ஆண்டு கேசவ சந்திர சென் கடல் வழியாகப் பயணம் செய்து பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்து உரையாற்றி இருக்கிறார். 1864-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பச்சையப்பன் பள்ளியில் ஆங்கிலச் சொற்பொழிவு ஒன்றையும் சென் நிகழ்த்தி இருக்கிறார். இவரது உரையின் தாக்கத்தில் விதவை மறுமணம் மற்றும் கலப்பு மணம் பற்றிய புதிய பிரக்ஞை தமிழகத்தில் உருவாகத் தொடங்கியது. இதன் விளைவாக, வேத சமாஜம் என்ற ஓர் அமைப்பை 1864-ம் ஆண்டு சென்னையில் தொடங்கி இருக்கின்றனர்.
திருமணங்களில் நடந்த சதிர் கச்சேரிகளைத் தடுத்து நிறுத்தியதும், பால்ய விவாகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததும், பெண் கல்வியை ஆதரித்துப் பேசியதும் இந்த வேத சமாஜத்தின் முக்கியச் செயல்பாடுகள்.

பிரம்ம சமாஜத்தைப் போன்ற ஓர் சீர்திருத்த இயக்கமே ஆரிய சமாஜம். இது, கி.பி. 1875-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை உணர்த்திய மகரிஷி தயானந்த சரஸ்வதி, 1824-ம் ஆண்டு சௌராஷ்டிரா மாநிலத்திலுள்ள டன்காரா என்ற கிராமத்தில் கர்சன்-தார்வாடி என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். விராஜ் நந்த குருவிடம் வேதங்களைக் கற்றுக்கொண்ட தயானந்த சரஸ்வதி, காசிக்குச் சென்று கல்வியில் தேர்ச்சி பெற்றார். அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும் அவை கடவுளுக்குக் கீழ்படிந்து இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துக்கள். வேதம், எல்லா சாதியினருக்கும் கொண்டு செல்லப்படுவது அவசியம் என்று ஆரிய சமாஜிகள் கருதினர். ஆரிய சமாஜத்தில் தொடர்புடைய ஜம்புநாதன் என்ற அறிஞர், வேதத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது இதன் தொடர் நிகழ்வே.

நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன். வேதங்களோடு கடோப நிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது 'சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதங்களில் அர்ப்பணம் செய்திருப்பதாக தனது முன்னுரையில் கூறி இருக்கிறார்.

இரண்டு சமாஜங்களும் இன்று வலுவிழந்து​விட்டன. ஆனாலும், அவை 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி மற்றும் விதவை திருமணம், பால்ய விவாக மறுப்பு, இரவுப் பள்ளி என்று பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததை இன்றும் மறக்க முடியாது.

No comments:

Post a Comment