Search This Blog

Saturday, January 19, 2013

எனது இந்தியா (இந்தியப் பருத்தியின் அழிவு!) - எஸ். ராமகிருஷ்ணன்....

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா முழுவதும் ரயில் பாதைகள் அமைத்தனர். தொழில் துறையை மேம்படுத்தினர். அதனால், இந்தியாவின் வாழ்வு வளமானது என்ற ஒரு பொதுக் கருத்து பலரிடம் இருக்கிறது. அது உண்மை அல்ல. இந்தியாவின் அரிய செல்வங்களும் உற்பத்திப் பொருட்களும் இந்த ரயில் பாதை வழியாகப் பிரிட்​டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரிட்டனின் வாழ்வு மேலோங்கியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் அரிய தொழில்களை, வேண்டும் அளவுக்கு உறிஞ்சிக்கொண்டு முடிவில் அதை ஒழித்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கான ஓர் அடையாளமே டாக்கா மஸ்லின். டாக்கா நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் சேர்ந்த கிராமங்களில் பாரம்பரியமாக இந்த நெசவில் ஈடுபட்ட குடும்பங்கள் இருந்தனர். அவர்கள், நவாப்பின் ஆதரவைப் பெற்றவர்கள். அரச குடும்பத்தினருக்காக ஆடைகளைத் தயாரிப்பதற்கு என்று மானியம் வழங்கப்பட்டவர்கள். இந்த மஸ்லின் ஆடைகளின் நேர்த்தியை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதை இந்தியாவில் இருந்து கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. மஸ்லின் ரகத்தை வாங்குவதில் ஏற்பட்ட போட்டி, அந்தத் துறையை முற்றிலும் தனதாக்கிக்கொள்ள முயன்றது பிரிட்டிஷ். அதற்காக, உள்ளூர் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். அரசு நேரடியாக நெசவாளிகளை மிரட்டி, தங்களுக்கு மட்டுமே துணிகளை விற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. டாக்கா, ஒரிசா மற்றும் பீகாரில் இருந்து மஸ்லின் துணிகள் பெருமளவு விலைக்கு வாங்கப்பட்டு பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வணிகத்​தில் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர்கள். 1767-ல் ராபர்ட் கிளைவ் சம்பாதித்த சொத்தின் மதிப்பு 4,01,102. பவுண்டுகள், ஜான் ஜோன்ஸ்டன் சொத்து மதிப்பு 3,00,000 பவுண்டுகள். ரிச்சர்ட் ஸ்மித்தின் சொத்து மதிப்பு 1764 முதல் 1770 வரை 2,50,000 பவுண்டுகள். 1757 முதல் 1784 வரை இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்த வகையில் அதிகாரி​களுக்குக் கிடைத்த லாபம் 18,000,000 பவுண்டுகளாக இருக்கக்கூடும் என்று குறிப்​பிடுகிறார் மார்ஷல்.


கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த ரத்தம் உறிஞ்சிய வணிகத்தைப் பற்றி, நிக்ராபின்ஸ் தனது புத்தகத்தில் மிகவும் விரிவாக எழுதி இருக்கிறார். அதில் இன்​றுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னோடி கிழக்கிந்தியக் கம்பெனியே என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனி 1664-ம் ஆண்டு மஸ்லின் துணிகளை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. அத்துடன், இந்தியாவில் இருந்து கலிக்கோ துணி ரகங்கள் அதிக அளவில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியத் துணிகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, உள்ளூர் நெசவுத் தொழிலைப் பாதிக்கிறது என்று பிரிட்டிஷ் அரசு 1721-ம் ஆண்டு கலிக்கோ சட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி, அன்றாடப் பயன்பாட்டுக்கு கலிக்கோ துணிகளை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக புதிய துணி ரகங்களைத் தயாரிக்குமாறு நெசவாளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

கலிக்கோ என்பது சாயம் போடப்படாத பூ வேலைப்பாடு நிறைந்த பருத்தித் துணி. இது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இங்கிலாந்தில் அதிகமாகப் பயன்படுத்தபட்டது. இன்றுகூட புத்தகங்​களை பைண்டிங் செய்யும்போது புத்தக முதுகில் ஒட்டுவதற்கு கலிக்கோ துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரண​மாகவே கலிக்கோ பைண்டிங் என்ற பெயரும் உருவானது. கி.பி. 1720-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான மொத்தத் துணி வியாபாரத்தில் கலிக்கோ துணி 20 சதவிகிதமாக இருந்தது. 1780-ம் ஆண்டில் 6,  1840-ம் ஆண்டில் 4 சதவிகிதமாகவும் குறைந்து இருக்கிறது. கலிக்கோ துணி, கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து உருவானது. போர்த்துக்கீசியர்கள் இந்தத் துணிக்கு கலிக்கோ என்று பெயர் சூட்டினர். சாலியர்கள் எனப்படும் நெசவாளிகள் இந்தத் துணியை நெய்துவந்தனர். இன்றும்கூட கேரளாவின் பேப்பூர் அருகே சாலியர் காலனி இருக்கிறது. அங்கு ஓடும் ஆறும் சாலியம் ஆறு என்றே அழைக்கப்படுகிறது. சாமுதிரின் அரசனால் இந்த நெசவாளிகள் கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களது பூர்வீகம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம். வலங்கை இடங்கை சண்டை ஏற்பட்டதில் இவர்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அது என்ன வலங்கை இடங்கை சண்டை? சோழர்கள் காலத்தில் அந்தணர் மற்றும் வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் வலங்கை இடங்கை என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். 10-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் படைப் பிரிவில் இந்த வழக்கம் தோன்றியது. வலங்கைப் பிரிவில் 98 குலங்களும், இடங்கைப் பிரிவில் 98 குலங்களும் இருந்தன. வலங்கைப் பிரிவினர், மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். ஆனால், இடங்கையினர் பெரும்பாலும் சிறுவணிகர்களாகவும் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இவர்​களிடையே பிரிவினைகள், மோதல்கள் இருந்தன. வலங்கை, இடங்கை வகுப்பின​ரிடையே ஏற்பட்டு இருந்த மோதல்கள் 19-ம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளை​யிலும் முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம், இரு வகுப்பினரும் அனுபவித்துவந்த உரிமை​களைப் பற்றியது. சென்னையில் சர் ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகு வலங்கை, இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள். கிழக்​கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வணிகத்தில் உதவிசெய்து வந்தவர்கள்.

ஒரு சமயம், வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் கடந்து கோட்டைக்குச் சென்றபோது தப்பட்டை அடித்துக்கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக்கொண்டும் சென்றனர். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என, அதை எதிர்த்து இடங்கையினர் கவர்னரிடம் புகார் அளித்தனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதில் உரிமைப் பிரச்னை ஏதும் கிடையாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், பிரச்னை ஓய்ந்தது. கேரளாவுக்குச் சென்ற சாலியர்களிடமும்கூட, வலங்கை இடங்கை சண்டை நடந்து இருக்கின்றன என்பதை சாமுதிரின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

இதற்கிடையில், கோழிக்கோட்டில் இருந்து கலிக்கோ துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்துவந்த போர்த்துக்​கீசியர்கள், தாங்களே பருத்தி விளைவிப்பது என்று முடிவு செய்தனர். பிரேசிலில் பருத்தி பயிரிடுவதற்கு முயன்றனர். அத்துடன், கோழிக்கோட்டில் இருந்த சாலியர்கள் சிலரை தங்களுடன் கப்பலில் அழைத்துச் சென்று பிரேசிலில் குடியமர்த்தி அங்கே இந்திய நெசவுக் கலையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

கலிக்கோவுக்கு ஏற்பட்ட தடையை அடுத்து, புதிய ரக துணிகளை உருவாக்க இங்கிலாந்து நெசவாளிகள் தீவிரமாக முனைந்தனர். மேற்கு ஸ்காட்லாந்துவாசிகள் நெசவுத் தொழிலில் ஆர்வம்கொண்டவர்கள். அவர்​கள் வெல்வெட் எனும் புதிய துணி ரகம் ஒன்றை உருவாக்கினர். இது, பட்டுத் துணி போலவே இருக்கிற மலிவு விலைத் துணி என்பதால், இதற்கு பெரிய சந்தை உருவானது. வெல்வெட் துணிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து புதிய சந்தையை உருவாக்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.

இன்று, கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் ஒன்றான குஜராத்தின் தலைநகரமான அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்சிப் பொருட்களில் 15 முதல் 19-ம் நூற்றாண்டு வரை முகலாய அரசர்களும் மாகாண ஆட்சியாளரும் அணிந்த துணிவகைகள் இருக்கின்றன. இவற்றுடன், பல பகுதிகளையும் சேர்ந்த பூத்தையல் வேலைப்பாடுகொண்ட துணி வகை​களும், கட்டிச் சாயம் தோய்த்த துணி வகைகளும், சமயம் சார்ந்த துணி வகைகளும் காட்சிக்கு வைக்கப்​பட்டுள்ளன.
லங்காஷயரில் இருந்த நெசவு ஆலைகளில் இயந்திரங்​களைக்கொண்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சிறுவர்கள். லங்காஷயர் நூற்பு ஆலைகளில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் அந்த நூற்பு ஆலைகளில் வேலை செய்தனர். 

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மாண்டியத் என்பவர், இந்திய மஸ்லின் துணிகளைப் போன்ற ரகங்களை உருவாக்க வேண்டும் என்று, தனது பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்பி இந்தத் தொழில்​நுட்பத்தைக் கற்றுக்கொள்ளவைத்தார். அதோடு, வங்காளத்து நெசவாளிகள் சிலரை இங்கிலாந்துக்கு அழைத்துவந்து தனது ஆலையில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். இதன் மூலம், புதிய வகை மஸ்லின் துணியை மாண்டியத் தயாரித்தார். தான் தயாரித்த மஸ்லின் துணியில் தங்க ரேகைகள் பதித்து, இங்கிலாந்து மகாராணிக்குப் பரிசாக வழங்கினார். அதன் காரணமாக, இங்கிலாந்து மஸ்லின் துணியும் புகழ்பெறத் தொடங்கியது.

1787-ல் டாக்காவின் மக்கள் தொகை 2,00,000 ஆக இருந்தது. அது, 1817-ம் ஆண்டுக்குள் 79,000 ஆகக் குறைந்து விட்டது. 1787-ம் ஆண்டு டாக்கா மஸ்லின் துணி ஏற்றுமதி மூலமாக கிடைத்த வருமானம் 8,000,000, அதுவே 1817-ல் 23,000 ஆனது. டாக்கா மஸ்லின் நெசவாளிகளைத் திட்டமிட்டு ஒடுக்கி இடமாற்றம் செய்யப்பட்டனர். மஸ்லின் நெசவு முற்றிலும் கைவிடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

அதே நேரம், 1760 வரை லங்காஷயரில் இருந்த நெசவு நூற்கும் தொழில் பெரிய வளர்ச்சி அடையவில்லை. அதற்கு முக்கியக் காரணம், நெசவு ஆலைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கான, தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை. அதே நேரம், இந்தியாவில் நெசவுத் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருந்தது. இந்தியாவில், நெசவுக்கான பிரத்யேக கருவிகள், வழிமுறைகள் இருந்தன. இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்தே லங்காஷயரின் நூற்பாலைகள் உருவாக்கப்பட்டன. 1750 வரை இங்கிலாந்தில் இரும்பு உருக்காலைகள் தள்ளாட்டத்தில்தான் இருந்தன. அதன் காரணமாக, கனரக இயந்திரங்கள் உருவாக்குவது அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதே நேரம், இந்தியாவில் இரும்பு உருக்கும் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனித்துவமிக்க தொழிலாக விளங்கியது. இந்தியர்கள் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்குகிறார்கள் என்பதை அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இங்கிலாந்திலும் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்க முயன்றனர். அதிலிருந்து அங்கும் இரும்புத் தொழில் வளர்ச்சி அடையத் தொடங்கியது. 

1174-ல் கென்டிஷ் பாதிரியார் எட்மண்ட் கார்ட்​ரைட் உருவாக்கிய பவர்லூம் எனப்படும் நெசவு இயந்திரத்தின் வருகையும் அதைத் தொடர்ந்து உருவான நெசவு ஆலைகளும் இங்கிலாந்துக்கு ஒரு புதிய தொழில் துறையை ஏற்படுத்தியது. இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட நூலின் விலை மலிவாக இருந்தது. ஆகவே, அதைப் பயன்படுத்தி உலகம் தழுவிய ஒரு சந்தையை உருவாக்க முயன்றது பிரிட்டிஷ் காலனி அரசு. அந்த சந்தைப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டதுதான் டாக்கா மஸ்லின். டாக்கா மஸ்லினை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஸ்விஸ் மஸ்லின், புக் மஸ்லின் என்று இரண்டு துணி ரகங்களை இங்கிலாந்து பெருமளவு விற்பனை செய்தது. அவற்றில், ஸ்விஸ் மஸ்லின் ஸ்விட்சர்லாந்திலும் புக் மஸ்லின் இங்கிலாந்தின் கிளாஸ்கோவிலும் தயாரிக்கப்பட்டவை. மஸ்லின் என்ற இந்தியப் பெயரையும், இந்தியாவின் தொழில்நுட்பத்தையும் தனதாக்கிக்கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், இந்த நெசவுத் தொழிலில் கோலோச்சிய டாக்கா நெசவாளிகளை முற்றிலும் ஒடுக்கி, தங்கள் துணிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யத் தொடங்கினர். 1783-ல் இங்கிலாந்தில் இருந்து வங்காளத்துக்கு கப்பல் நிறைய இங்கிலாந்தின் பருத்தித் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதுதான் இந்தியாவுக்கு வந்த அந்நியத் துணிகளின் தொடக்கம். அதன் வருகை இந்திய நூற்புலகில் பெருத்த அதிர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பிரிட்டன் ஏற்றுமதியில் 8-ல் ஒரு பாகம் இந்தி​யாவுக்குச் சென்றது என்பதையும், துணி ஏற்றுமதியில் 4-ல் ஒரு பாகம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய நாட்டுப் பருத்தி தரமற்றது. அதைப் பயிரிட வேண்​டாம் என்று ஆங்கிலேயர்கள் நாடெங்கும் பரப்பினர். காரணம், அவர்களின் இயந்திரங்களுக்கு ஏற்ப அது நீண்ட இழைகளுடன் இல்லை. அதனால், வீரியப் பருத்தி விதைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்​பட்டன. ஆக, இந்தியப் பருத்தி விவசாயத்தின் அழிவுக்கும் முதல் காரணமாக இருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.

பட்டுத் துணிகளில் சீனர்கள் எவ்வாறு சிறந்து விளங்கினார்களோ, அதற்கு நிகராக மஸ்லின் துணியில் இந்தியா புகழ்பெற்று விளங்கியது. காலனிய ஆட்சியின் கொடுங்கரம் இந்த அருமையான நெசவுத் தொழிலை முடக்கி இன்று அடையாளமற்றதாக்கி விட்டது. இன்று, செயற்கை இழைகளால் உருவான மஸ்லின் ஆடைகள் விற்கப்படுகின்றன. இயற்கையை அழித்துவிட்டு செயற்கையான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது காலத்தின் கோலம்.

No comments:

Post a Comment