Search This Blog

Wednesday, January 02, 2013

எனது இந்தியா (கிருஷ்ணரின் சாபம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஐதீகப்படி, கிருஷ்ணரின் மகனான சாம்பன், தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அவனைத் தொழுநோயாளியாக ஆகும்படி கிருஷ்ணன் சாபம் கொடுத்தார் எனவும், சூரியனை வணங்கி வந்தால் மட்டுமே அந்த சாபம் மீட்சி பெறும் என்பதால் கொனார்க் கோயில் கட்டப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. ஆனால், பழங்குடி மரபில் சூரியனை வணங்குவது வழக்கம். பழங்குடிகள் அதிகமாக வாழ்வது ஒரிசா மாநிலம். ஆகவே, அங்கே சூரியனை வணங்குவது தொன்றுதொட்டு வந்திருக்கக்கூடும். அந்தப் பழங்குடி கடவுள், செவ்வியல் வடிவம் பெறும் முயற்சியாகவே பிரமாண்டமான சூரியக் கோயில் உருவாகியிருக்கக்கூடும்.

கொனார்க் கோயிலுக்குள் சூரியனின் மிகப்பெரிய சிற்பம் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் சூரியன் வருவது போன்ற சிற்பம் அது. தென் இந்தியக் கோயில்களில் இருந்து கொனார்க் பெரிதும் மாறுபட்டது. வெளியே இருந்து பார்க்கும்போது, அதன் பிரமாண்டம் நமக்குப் புலப்படாது. அருகில் சென்று பார்க்கும்போது, கோயில் விஸ்வரூபம்கொண்டதாகத் தெரிகிறது. தொழு நோயில் இருந்து மீட்சி பெறுவதற்கான இடம் என்று நம்பப்படுவதால், இன்றும் இந்தக் கோயில் பகுதியில் ஏராளமான தொழுநோயாளிகளைப் பார்க்க முடிகிறது. சிற்பத் தொகுப்பு ஒன்றில் ஒரு தொழுநோயாளி பெண்ணுடன் கல வியில் ஈடுபடும் சிற்பமும் இருக்கிறது. சூரியன் ஆணா... பெண்ணா என்பதில் ஒவ்வொரு தேசத்திலும் ஒருவித விளக்கம் கூறுகிறார்கள். கிழக்கு இந்தோனேஷியாவில் சூரியன் ஆண், பெண் என்ற இரு வடிவிலும் காணப்படுகிறது. போன்டா பழங்குடியினரிடம், சூரி​யனும் சந்திரனும் அண்ணன் தங்கை என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஒரு நாள், தங்கை நிர்வாணமாகக் குளிக்கையில் அண்ணன் பார்த்துவிடவே, இனிமேல் உன் முகத்தைப் பார்க்கவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தங்கை பிரிந்து போய்விட்டதாகப் பழங்குடி கதை கூறு கிறது. சூரிய வெளிச்சம் தொழுநோயைக் குணப்படுத்தும் என்று போன்டா மக்கள் நம்புகின்றனர். சூரியனுக்குச் சாத்தப்படும் மலர் எருக்கம் பூ. அது, மருத்துவ ரீதியாக தொழுநோயைக் குணமாக்கக் கூடியது. ஆகவே, சூரியனோடு தொழுநோய் குணமாக்கும் சடங்கு சேர்ந்து விட்டது என்றும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள சூரியனார் கோயிலில் எருக்கம் பூ சாத்தப்படுவதை முன்வைத்து பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தனது கட்டுரையில், 'இது பழங்குடி மரபின் நீட்சி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். கலவிச் சிற்பங்கள் இந்தக் கோயிலில் இடம்​பெற்றதற்குக் காரணம், சூரியன் ஜீவ உற்பத்தியை உருவாக்கும் கடவுள். அவர் வழியாகவே உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே, சூரியனின் முன்பாக பாலுறவு காட்சியாக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.

13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொனார்க்கில் எப்படி ஆப்பிரிக்க ஒட்டகச்சிவிங்கி வந்தது? அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் முழங்கால் வரை ஆடை அணிந்த சிலர் ஒட்டகச்சிவிங்கியை மன்னருக்குப் பரிசாக அளிப்பதற்குக் கொண்டு வருவது போலத்தான் காணப்படுகிறது. சாதவாகர்கள் எனப்படும் ஒரிசா வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளதற்கு நிறையவே சான்றுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் சிற்பத் தொகுதிகளில் உள்ள யானை வரிசையில் ஒன்றாக ஆப்பிரிக்க யானையும் இருக்கிறது.


ஒரிசாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் 13-ம் நூற்றாண்டில் நேரடியான கடல் வணிகம் நடந்து இருக்கிறது என்பதன் வரலாற்றுச் சாட்சிபோலவே இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில் இருந்து வங்காளத்துக்கு வணிகம் செய்வதற்கு வந்த கடலோடிகள், ஒட்டகச்சிவிங்கியைப் பரிசாக அளித்து இருக்கின்றனர். வங்காளத்தில் இருந்து அது, மைசூர் அரசுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒட்டகச்சிவிங்கி, இந்தியாவுக்கு வந்ததை தேடப்போய் அது எப்படி சீனாவுக்குப் போனது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. 14-ம் நூற்றாண்டில் சீனா மிகப் பெரிய கடல் பயணத்தைத் தொடங்கியது. 317 கப்பல்கள். அவற்றில் 27 ஆயிரம் ஆட்கள் என்று பிரமாண்டமான கடல் பயணத்துக்கு மன்னர் அனுமதி அளித்தார். இந்தக் கடல் பயணத்துக்குத் தலைமை வகித்தவர், 'ஷாங் ஹே’(Zheng He) என்ற அரவாணி. அவர், மன்னர் ஜுடேயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

அப்பா போரில் இறந்துவிடவே சிறு வயதில் அடிமையாக விற்கப்பட்டார் ஷாங் ஹே. அவரது ஆண் உறுப்பு நீக்கப்பட்டு அரண்மனையில் பணிபுரியும் எண்ணிக்கையற்ற அரவாணிகளில் ஒருவராக மாற்றப்பட்டார். சீன மன்னர்கள், அரவாணி​களின் படை ஒன்றை வைத்திருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் பாலுறுப்புத் துண்டிக்கப்பட்டு அரவாணி ஆக்கப்பட்டவர்களே. அவர்களது வேலை அந்தப்புரத்தைக் காவல் காப்பது. அரசிக்கு மெய்க்காவல் செய்வது ஆகியவைதான். அரவாணிகளாக மாற்றப்பட்டபோதும் அவர்கள் போர்த் திறனில் வலிமை பெற்றிருந்தனர்.

ஷாங் ஹே அப்படித்தான் வளர்க்கப்பட்டார். குறிப்பாக, ஜு டே இளவரசராக இருந்த நாட்களில் அவருக்குச் சேவகம் புரிந்துவந்த ஷாங் ஹே, கொஞ்சம் கொஞ்சமாகப் பதவி உயர்வு பெற்று தளபதி என்ற அந்தஸ்தை அடைந்தார். அப்போதுதான், மிங் வம்சத்தின் மன்னரான ஜு டே, அண்டை நாடுகளுடன் வணிக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனால்தான், ஷாங் ஹே தலைமையில் கடல் பயணம் செல்லும்படி உத்தரவிட்டார். பெரிய பொருட்செலவில் இந்தப் பயணம் தொடங்கியது.

இதில், முதல் கடல் பயணத்திலேயே ஷாங் ஹே இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். வங்காளத்துக்கும் வந்து இருக்கிறார். பிறகு, கேரளாவின் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்த மன்னர்களைச் சந்தித்து இருக்கிறார். அங்கிருந்து இலங்கை, கம்போடியா, வியட்நாம் என்று கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்தபோது, வங்காளத்தில் முதன்முறையாக ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இருக்கிறார் ஷாங் ஹே. அவரால் நம்பவே முடியவில்லை. சீனப் புராணங்கள் 'க்யூலின்’ என்றொரு கற்பனையான மிருகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றன. அந்த மிருகம் சொர்க்கத்தில் வாழக்கூடியது. ஒற்றைக் கொம்புடன் யூனிகார்ன் போன்ற தோற்றம் கொண்டது. அந்த மிருகத்தைக் காண்பது புனிதமானது. கன்ஃபூசியஸ்கூட இதைப்பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டு இருக் கிறார். அப்பேர்ப்பட்ட சொர்க்கத்தில் வசிக்கும் விலங் கை நேரில் கண்ட ஷாங் ஹே மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆப்பிரிக்க வணிகக் குழுவினரை அணுகி, தனக்கு இரண்டு தெய்வீக விலங்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு மாற்றாக சீனப் பட்டும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் நிறையவே கொடுத்து இருக்கிறார். சொர்க்கத்தில் இருந்து ஒரு விலங்கைக் கொண்டு வருவதாக மன்னருக்குக் கடிதமும் அனுப்பினார். மன்னரால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு விலங்கு எப்படி பூமிக்கு வந்தது. அதை எப்படி நமது கடலோடிகள் கொண்டுவந்தனர் என்று ஆச்சர்யம் அடைந்தார். அதை, 'க்யூலின்’ என்றே அழைத்து இருக் கின்றனர்.

ஒட்டகச்சிவிங்கி சீனாவுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் வந்திருப்பது, கடவுளின் ஆசி தனக்கு நேரடியாகக் கிடைத்து இருப்பதாகவே மன்னர் நம்பினார். அதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அதை வேடிக்கை பார்த்து இருக்கின்றனர்.  தேவலோகத்தில் இருந்த மிருகம் சீனா வந்துள்ள செய்தி தேசம் முழுவதும் பரவியது.

ஒட்டகச்சிவிங்கி அதிகமாகத் தூங்குவது இல்லை. அது, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கக்கூடிய மிருகம். அதிலும் சில நாட்கள் 10 நிமிடங்கள் மட்டுமே தூங்கும். வான் உலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் மட்டுமே அதனால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று மன்னர் நம்பினார். ஒட்டகச்சிவிங்கியின் குரலும் அது அடிக்கடி தலையை உயர்த்தி வானைக் காண்பதும் அந்த நம்பிக்கையை உறுதி செய்தது. ஒட்டகச்சிவிங்கியை எப்படிப் பராமரிப்பது என்று மன்னருக்குத் தெரியவில்லை. அது எப்படி இனவிருத்தி செய்யும் என்பதும் அவருக்குப் புதிராகவே இருந்தது. அதற்காகவே, ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகத்தின் ரகசியம் அறிந்தவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.

ஷாங் ஹே உடனே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கறுப்பான மனிதர்களை சீனர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆகவே, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கறுப்பாகி விடுகிறார்கள் என்று நம்பினர். கறுப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தனக்கு நெருக்கமாக உள்ள மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியைப் பரிசளிப்பதை சீன மன்னர் பெருமையாக உணர்ந்தார். இப்படித்தான், சீனாவுக்கு ஒட்டகச்சிவிங்கி வந்தது என்று ஷாங் ஹேவின் கடற்பயணக் குறிப்பு கூறுகிறது.

இதே 1486-ம் ஆண்டு இத்தாலிய நிர்வாக அதிகாரியான பிளாரன்சோ மெடிசிக்குப் பரிசாக ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி  அனுப்பி வைக்கப்பட்டு, இத்தாலி வந்து சேர்ந்திருக்கிறது. இத்தாலிய மக்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கின்றனர். ஆனால், சீனாவில் கிடைத்த தெய்வீக அடையாளம் இங்கே கிடைக்கவில்லை.

இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு. அந்த வரலாற்றை நாம் நுட்பமாக ஆராய்ந்தால், அதனுள் காலனியத்தின் தாக்குதல் எவ்வளவு வலிமையானது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. திபெத்தியக் கலைமான்கள், பனிச் சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பறக்கும் அணில்கள், சிங்கமுகக் குரங்கு என்று எத்தனையோ அரிய மிருகங்கள் வேட்டையாடப்பட்டு, உணவுக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும், மருந்துக்காகவும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலப் பறவை, விலங்கு, பூ என ஒன்றைத் தேர்வு செய்துள்ளன. தமிழகத்தின் மாநில மலர் காந்தள், பறவை பச் சைப் புறா, விலங்கு வரையாடு. இவற்றை எத் தனை பேர் பார்த்து இருப்பார்கள் என்பது தெரிய வில்லை. விலங்குகளையும் பறவைகளையும் வெறும் அடையாளச் சின்னங்களாக வைப்பதோடு மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதும் நமது கடமை. மனிதர்கள் தங்களின் சுயலாபத்துக்காக விலங்குகளைப் பரிசளிப்பது மன்னர் காலம் தொட்டு இன்று வரை நடந்துவருகின்றன. அது தடுக்கப்பட வேண்டும் என்பதே வரலாறு சுட்டிக்காட்டும் உண்மை.

No comments:

Post a Comment