Search This Blog

Thursday, November 29, 2012

எனது இந்தியா (தண்டனையைத் தீர்மானித்த மதம்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவு​தீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னி​லையில் யானையை வைத்து மரண தண்ட​னையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை யானைக் காலால் மிதித்துக் கொல்ல தண்டனை அளித்து இருக்கிறார். முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர், யானையை வைத்து மரண தண்டனை வழங்கியதைப் பற்றி பிரெஞ்சுப் பயணி பெர்னியர் தனது குறிப்பில் பதிவுசெய்துள்​ளார். முகலாயர் ஆட்சியில் யானைகளுக்கு தந்தங்களில் இணைக்கப்பட்ட கூர்மையான தகடுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை துண்டாக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதி காலம் வரை நீடித்த இந்தப் பழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வளர்ச்சியால் குறைந்து இறுதியில் முற்றிலும் கைவிடப்பட்டது.

அது போலவே, ஒருவரது கழுத்தைக் கயிற்றால் சுற்றி கயிற்றின் இரு முனைகளால் கால் கட்டை விரல்கள் இரண்டையும் கட்டிவிடுவர். இதனால், நிமிர முடியாமல் குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில், முதுகின் மேல் ஒரு கல்லை வைத்துவிடுவர். இந்தத் தண்டனையின் பெயர் அண்ணாந்தாள். தேவதாசிப் பெண்களுக்கு இதுபோன்ற கொடூரத் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்று பேராசிரியர் சிவசுப்ரமணியன் தனது 'தேவரடியார்களும் அடிமை முறையும்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். பண்டைய இந்தியாவின் தண்டனை முறைகளைப்பற்றி ஆராய்ந்த விஜய் சோமன், தண்டனைகளைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத குருமார்கள், துறவிகள் ஆகியோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள அதுவே காரணம் என்கிறார்.


மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறை​களைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம். தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு மராத்திய மன்னர்கள் ஏறத்தாழ 180 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் யாவும் மராத்திய மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறைக்கு 'மோடி எழுத்து’ என்று பெயர், அதனால் இவை 'மோடி ஆவணம்’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மராத்திய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது ஆர்ச்சைக் மோடி என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவம் சிவாஜி காலத்தில் இருந்த மோடி வடிவமாகும். தஞ்சைக்கு வந்த பிறகு இந்த எழுத்து முறையில் மராத்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கலந்து, மோடி எழுத்து உருவாகி இருக்கிறது. 1858-ம் ஆண்டுக்குப் பிறகு, தஞ்சையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேய அரசு, மோடி ஆவணங்களை மூட்டையாகக் கட்டிக் கிடப்பில் போட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த அரிய ஆவணங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

1,700 மூட்டைகளுக்கும் மேலாக இருந்த ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 59 தொகுதிகளாக தமிழில் மொழி​பெயர்க்கப்பட்டுள்ளன. 1989-ம் ஆண்டு 'தஞ்சை மராட்டிய மன்னரின் மோடி ஆவணங்கள்’ எனும் தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் முனைவர் பா.சுப்பிரமணியன். இந்த அரிய புத்தகத்தில், மராத்தியர் காலத்தில் நிலவிய தண்டனை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சிலவற்றைப் பாருங்கள்... 'பொய் சாட்சி சொன்னவரை தண்டிப்பதற்காக அவரது உடல் முழுவதும் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்காரவைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூ மாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக்கொண்டு பிரசித்தமான வீதிகளில் பட்டணம் முழுவதும் சுற்றிவர வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. ராஜமால்படி களிமோடு என்னும் ஊரில் இருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடினாள் என அவளைச் சாவடியில் அடைத்தனர். அவளுடைய கழுத்தில் செம்பைக் கட்டி இன்ன குற்றம் செய்தாளென்று வாசித்துக்கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோராவுடன் சுற்றவைத்து, ஒவ்வொரு வீதியிலும் பிரம்பால் மூன்று அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டிவிட்டு, கோட்டைக்கு வெளியே விரட்டிவிட்டது. சொந்தக்காரனிடம் செம்பு கொடுக்கப்பட்டது.’

ஆயுத சாலையில் ஒரு தச்சன் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்தபோது, ஒரு பித்தளைத் தகடு வேஷ்டியில் இருந்தது. முறையாகக் காவல் பணி செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்த குற்றத்துக்காக பாராகாரனுக்கு ஆறு தேங்காய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜான் பைஃப் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெசிடென்ட் பிரதிநிதி தஞ்சையில் ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப்போது, தேவதாசியின் மகள் 'நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடென்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது. பொய், புரட்டு செய்தவனுக்கு காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரை மராமரத்து வேலை செய்ய வைத்து பிறகு, முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்து விரட்டப்பட்டு இருக்கிறான்.


மோடி ஆவனத்தில் காணப்படும் சான்றுகள் தமிழகம் குறித்து முற்றிலும் வேறுவிதமான சித்திரம் ஒன்றை நமக்குத் தருகின்றன. மோடி ஆவணங்கள் இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஒருவேளை, அவை யாவும் பதிப்பிக்கப்பட்டால், கடந்த காலத்தில் புதையுண்டு போயிருந்த பல உண்மைகள் வெளிவரும். மோடி ஆவணங்களைப் போலவே மராத்தியர்களின் காலத்தை அறிய உதவுகிறது மெக்கன்சி சுவடிகள். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை நில ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட காலின் மெக்கன்சி, பணி நிமித்தமாகச் சென்ற இடங்களில் இருந்த சுவடிகளையும், கல்வெட்டுக்​களையும், நாணயங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் தொகுத்து இருக்கிறார். இதற்காக, அவரோடு சமஸ்கிருதம் தெலுங்கு, சமணம் அறிந்த பண்டிதர்கள் உடன் சென்று இருக்கின்றனர். கிராமங்களில் இருந்து அவர் சேகரித்த ஏடுகளை முறையாகப் பகுத்து முக்கியச் செய்திகளை குறிப்புகளாக எழுதிவைத்து இருக்கிறார். மேலும், தான் செல்லும் இடங்களில் இருந்த சிற்பங்கள், ஓவியங்கள் குறித்தும் கோட்டோவியங்கள் தீட்டிவைத்து இருக்கிறார். திப்புவுக்கு எதிராகப் போரிட்டவர் மெக்கன்சி. ஆனாலும், மற்ற வெள்ளை அதிகாரிகளைப் போல இல்லாமல், இந்தியாவின் அரிய கலைச்செல்வங்களையும் ஏடுகளையும் பாதுகாப்பதில் அக்கறையாக இருந்திருக்கிறார். அவர் சேமிப்பில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் சென்றவை போக எஞ்சியவை, சென்னையில் உள்ள அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ச் சுவடிகளுள் (தாள்) மெக்கன்சி தொகுத்துவைத்திருக்கும் தாள் சுவடிகள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றன என்று, முனைவர் ம.ராசேந்திரன் தனது 'கர்னல் காலின் மெக்கன்சி’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். கொலை செய்த, கொள்ளை அடித்த கைதிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனைகள் அரசியல் கைதிகளுக்குப் பொருந்தாதவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்தியத் தண்டனைகளில் மிகவும் மோசமானது தூக்குத் தண்டனை. இன்று, உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமையாளர்கள் போராடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை.

96 நாடுகள் அதிகாரப்பூர்வமாக மரண தண்டனையை விலக்கி விட்டன. மரண தண்டனையை அதிகம் பயன்படுத்துவது அரபு நாடுகளும், சீனாவும்​தான். சிங்கப்பூர் இதில் முதல்இடம் வகிக்கிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிலும் தொடர் இயக்கங்கள் நடக்கின்றன. ஒரு நாடு முன்னேறி இருப்பதன் அடையாளம் அங்கு குற்றங்கள் குறைந்து இருப்பதுதான். ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதி கமாகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. வெளியே தெரியவருபவை குறைவே. நீதிமன்றத்தை நாடிச் செல்வதும் மிகக் குறைவுதான். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கே பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே போனாலும் பணம், செல்வாக்கு, பதவி போன்றவை வழக்கின் போக்கைத் திசைதிருப்பி விடுகின்றன. பல வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். மறுக்கப்படும் நீதி சாமான்ய மனிதன் மனதில் ஆழ மான வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் நீதி எனப்படுவது, சட்டத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் தனி மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை அறமாகவும் இருந்தது. இன்று, தனி மனிதனும் தனது அறத்தைக் கைவிட்டுவிட்டான். நீதி அமைப்புகளும் சாமான்ய மனிதனைக் கைவிட்டு விட்டன என்பது ஆழ்ந்த கவலை தரும் உண்மை.

No comments:

Post a Comment