Search This Blog

Saturday, November 17, 2012

எனது இந்தியா (அஜந்தாவும் எல்லோராவும்) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியக் கலைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருபவை அஜந்தாவும் எல்லோ​ராவும். இந்தியாவின் சமூக வரலாறு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதன் கலை வரலாறும் முக்கியமானதே. கிரேக்கக் கலைகள் எப்படி அதன் உன்னத நாகரிகத்துக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே, இந்தியக் கலைகள் தனக்கெனத் தனித்துவமான அழகியலுடன் இருக்கின்றன. இந்தியக் கலைகளின் ஊடாக கலைஞனின் ஞானமும் வாழ்க்கை குறித்த தத்துவ​சாரமும் ஒன்றிணைந்து இருக்கின்றன. கலைஞனின் ஆன்ம வெளிப்பாடே, கலையின் உன்னதமாகக் கருதப்படுகிறது.
சாஞ்சியில் ஒரு சிற்பம் உள்ளது. அதில், ஞானம் பெற்ற பிறகு தன் தாயிடம் பிட்சை ஏற்க வரும் புத்தர் பிரமாண்டமாக நிற்கிறார். பிட்சை அளிக்கும் தாயும் அந்த அரண்மனையும் சதுக்கமும் படைகளும் அவரது முழங்காலுக்குக் கீழே இருப்பதுபோல், அந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஞான நிலையின் முன், உலகம் மிகச் சிறியது என்ற கலைஞனின் ஆன்மிக வெளிப்பாட்டின் உதாரணம் இது.


கலையின் வரலாறு, குகையில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்​களில் இருந்தே தொடங்குகிறது. கலைகளே இந்தியப் பண்பாட்டின் மகத்தான ஆவணங்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர், அவர்களுடைய பண்பாடு, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதற்கு இன்றும் ஆதாரமாக இருப்பவை குகை ஓவியங்களே.

அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மணிகள், தாழிகள், கல்வெட்டுகள் வழியாக நாம் 3,000 ஆண்டுகள் வரைதான் பின்னோக்கிப் போக முடிகிறது. ஆனால், குகை ஓவியங்கள் வழியாக நாம் மொழியின் பயன்பாடு உருவாவதற்கு முந்தைய மனிதர்களின் உலகையே அறிந்துகொள்ள முடிகிறது. அதுதான் கலையின் சிறப்பு. அஜந்தா மற்றும் எல்லோராவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இதுபோல குகைகளில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் பிரான்சில் உள்ள குரோட்டே சோவெட்டில் உள்ளது. இது, 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்​பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற வேட்டைக் காட்சிகள்கொண்ட குகை ஓவியங்கள் பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சீனா, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன.

தொல்பழங்காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்கள், வன விலங்குகளின் இயல்பைப் பதிவு செய்வதற்காகவும் நினைவைப் பாதுகாக்கவும் இவை வரையப்​பட்டு இருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு வேட்டை குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்காக வரையப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்வர்டோ கலியானே என்ற ஆய்வாளர் இது​போன்ற குகை ஓவியங்களைப் பெண்கள்தான் வரைந்து இருப்பார்கள் என்று கருதுகிறார். குகை ஓவியங்களில் மனித உருவங்கள் மிகவும் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டு இருக்கின்றன. வேட்டை​யாடப்பட்ட மிருகங்களை மட்டுமின்றி வலிமையான காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் குகை ஓவியங்களில் காணப்படுகின்றன.


ஓவியங்கள் காணப்படும் பல குகைகளில் மனிதர்கள் வசித்த தடயங்கள் இல்லை. விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டு இருப்பதால், இந்தக் குகைகள் மந்திரச் சடங்குகள் செய்யப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.

தமிழகத்தில் குகை ஓவியங்களை ஆய்வு செய்யும் அறிஞர் காந்திராஜன், குகை ஓவியங்​களின் வரலாற்றைப் பற்றி நிறையத் தகவல்கள் தருகிறார். அவர் தனது தொடர்ந்த தேடுதலில் கரிக்கியூரில் காணப்படும் அரிய பாறை ஓவியங்​களைக் கண்டறிந்துள்ளார். இது, கி.மு. 7000-ம் ஆண்டைச் சேர்ந்தது. இவரது கருத்துப்படி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம் மல்லப்​பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகிறான். கீழ்வாலை என்ற ஊரில் காணப்படும் குகை ஓவியத்தில் செம்மண் வண்ணத்தால் வரையப்பட்டுள்ள பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்​படுகின்றனர். இந்த ஓவியம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகின்றனர். சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் ஓவியம் காணப்​படுகிறது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி, ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் திண்டுக்​கல் மாவட்டம் சிறுமலைக் குகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் குகை ஓவியங்​கள் இருக்கின்றன. பௌத்தத் துறவிகள் குகைகளில் தங்கி வாழ்ந்தனர். மாணவர்களுக்கு ஞானம் அளிக்கும் கல்விச் சாலைகளும் குகைகளில் இருந்தன. பௌத்தக் கலைஞர்கள் குகைகளில் படுகை​களையும், புத்தரின் சிலைகளையும், புத்த ஜாதகக் கதைகளைப் பற்றிய ஓவியங்களையும், பல்வேறு விதமான கலைச்சிற்பங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட குகைவரைக் கோயில்கள்தான் அஜந்தாவும் எல்லோராவும்!

7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா ஓவியங்​கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கின்றன. இவை, பௌத்தக் கலை மரபின் சாட்சிகள். மகாராஷ்டிராவின் ஒளரங்கபாதில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்​கிறது அஜந்தா குகை. இங்கே உள்ள குகைகளில் பாதி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் மீதம் உள்ளவை 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஜந்தா ஒரு கல்வி நிலையமாகவும் ஞான மார்க்கத்தின் அற நிலையமாகவும் புகழ்பெற்று விளங்கியது. அஜந்தாவை ஒரு கலைத் தொகுப்பு என்றே சொல்லலாம். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இருந்து அந்தக் காலத்தைய உடைகள், நகைகள், இசைக் கருவிகள், நடனமுறைகள், அரண்மனை அழகிகள், சமூக அந்தஸ்து, துறவிகளின் இயல்பு, மன்னர்களின் வாழ்க்கைமுறை எனப் பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது.

ஹீனயான பௌத்த மரபு, புத்தருக்கு உருவம் தந்து வழிபடுவது இல்லை. குறியீடுகள் வழியாகவே அவை பௌத்த ஞானத்தை அடையாளப்படுத்துகின்றன. மஹாயான மரபில்தான் புத்த உருவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அஜந்தாவில் இந்த இரண்டு மரபுகளின் சாட்சிகளையும் காணலாம். ஆரம்ப காலக் குகைகளில் புத்த பாதம், போதி மரம் போன்ற குறியீடுகளும் அலங்கார ஸ்தூபங்களும் மட்டுமே இருக்கின்றன. அதன் பிறகே, மிகப் பெரிய புத்தர் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அஜந்தா குகைகள் கி.பி. 460 முதல் 480 வரை வாகதகர் காலகட்டத்தில் செதுக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் வால்டர் எம்.ஸ்பிங் என்ற ஆய்வாளர். வாகதகப் பேரரசர் ஹரிசேனரின் காலகட்டத்தில் இந்தக் குகைகளில் பல ஓவியங்கள் செதுக்கப்பட்டன. கி.பி. 3-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிர நிலப்பகுதியில் தோன்றிய அரசு வாகதகப் பேரரசு. குஜராத்தின் மால்வா பகுதியையும் தெக்காணத்தின் வடக்குப் பகுதியையும் இணைத்து வாகதகர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.

வாகதக வம்சம் இந்து தர்மத்தைப் பின்பற்றிய​போதிலும் அஜந்தா குகை ஓவியங்களை நிர்மாணித்​திட உதவி செய்துள்ளது. இது நடைபெற்றது குப்தப் பேரரசின் காலத்தில் என்ப​துடன், வாகதகர்களே குப்தர்களுடன் மண உறவு​கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜந்தாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சாதவாகனர் மற்றும் வாகத​கர்கள் வைதீக நெறியைப் பின்பற்றுகிறவர்கள் என்றபோதிலும், அவர்களின் ஆதரவில் பௌத்தக் கலை, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பௌத்தம், இந்தியாவில் வீழ்ந்த பிறகு, அஜந்தா குகைகள் கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடையத் தொடங்கியது.

1819-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜான் ஸ்மித், புலி வேட்டை ஆடுவதற்காக காட்டுக்குள் சென்றார். ஒரு புலியைத் துரத்திச் சென்றபோது தற்செயலாக ஒரு குகைக்குள் நுழைந்து இருக்கிறார். அப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது முற்றிலும் நிரூபணம் செய்யப்படாத தகவல். ஆனால், அவரது முயற்சியால் அஜந்தாவின் ஓவியங்​களும் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை.

அஜந்தாவில் 30 குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவற்றில் 9, 10, 19, 26 மற்றும் 29 ஆகிய குகைகள் சைத்யங்கள் எனப்படும் பௌத்த வழி​பாட்டு ஸ்தலங்கள். மற்றவை துறவியர் தங்கும் விகாரைகள்.

குகைச் சுவரின் மீது களி மண்ணும் சாணமும் கலந்த கலவையால் வேயப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு இயற்கையான நிறங்களைக்கொண்டு அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைவுற்ற நிலையில்தான் இருக்கின்றன. இதில், புத்த ஜாதகக் கதைகளின் நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மிகப் புகழ் பெற்றவை பத்மபானி, வஜ்ரபானி போன்ற ஓவியங்கள்.

1 comment:

  1. Sorry, There is no any art form in Gudiyam Caves, it was used as a temporary shelter by paleolithic people...
    Regards,
    Ramesh.K
    gudiyamcaves.rameshyanthra.com

    ReplyDelete