Search This Blog

Monday, November 05, 2012

முதுகுவலிக்கு முதலுதவி

 
மனித உடல் எடையைத் தாங்குவதில் முதுகு முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகானது முதுகெலும்புத் தொடரினாலும் பல்வேறு முதுகுத் தசைகள் மற்றும் தசைநாண்களாலும் ஆனது. இவை சுருங்கி விரிவதால்தான் நம்மால் குனியவோ, நிமிரவோ முடிகிறது. முதுகெலும்புத் தொடரில் மூளையின் தொடர்ச்சியாகத் தண்டுவடம் அமைந்துள்ளது. தண்டுவடத்தின் வழியாக மத்திய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த நரம்புகள் கழுத்து, மார்பு, முதுகு, வயிறு மற்றும் கால் பகுதிகளுக்குச் செல்கின்றன. மூளை இடும் கட்டளைகள் இந்த நரம்புகள் வழியாக இங்குள்ள தசைகளுக்கு வந்து சேர, தசைகள் அந்தக் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றன.
 
முதுகுவலி

விபத்து, விளையாட்டு, கீழே விழுதல், அதிக எடையுள்ள புத்தகப்பையை முதுகில் தூக்குதல் அல்லது தோள்பட்டையில் தொங்க விடுதல், உடற்பருமன் போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு முதுகு வலி வருவதுண்டு. அடுத்து, அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருதல், நடத்தல் அல்லது படுத்தல், கூன்வளைந்து உட்காருதல், தவறான முறையில் சுமை தூக்குதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி வருவதுண்டு.

என்ன முதலுதவி?

வெறும் தரையில் மல்லாக்கப் படுத்து, முழங்கால் மூட்டுகளைச் சற்று மடக்கி, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்துக்கொள்ளவும்.

சில நாட்களுக்கு முதுகுக்கு ஓய்வு தரவும்.

பொருள்களை இழுப்பது, தள்ளுவது தூக்குவது கூடாது.

அடிக்கடி குனிதல் கூடாது.

ஐஸ் கட்டியைப் பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்தப் பையால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தரவும்.

ஒவ்வொருமுறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ்கட்டி ஒத்தடம் தரவும். இப்படி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்குத் தரலாம்.
வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

வலிநிவாரணி களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரலாம்.

முதுகுவலி குறைந்த பின்னர், முதுகுத் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

வயிற்றுத் தசைகளுக்கும் கால் தசைகளுக்கும் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்வது மிக நல்லது.

முறையான யோகாசனப் பயிற்சிகளும் உதவும்.

முதுகுவலி நீடிக்குமானால், மருத்துவர் உதவியை நாடவும்.

முதுகுப்பிடிப்பை எடுக்க முயலாதீர்கள். முதுகுப்பிடிப்பைத் தவறாக எடுத்துவிடும்போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.

முதுகுவலியைத் தவிர்ப்பது எப்படி?

நீண்டநேரம் நிற்கும்படி நேர்ந்தால், அவ்வப்போது சிறு நாற்காலியின்மீது ஒரு கால் மாற்றி ஒரு காலை வைத்து, கால்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

குனிந்த நிலையில் புத்தகம் படிக்கக் கூடாது. புத்தகத்தை முகத்துக்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு படிக்கவும்.

நீங்கள் நீண்ட நேரம் பயன்படுத்தும் நாற்காலி உங்கள் கீழ்முதுகு வளைவுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், கீழ் முதுகுக்கு ஒரு தலையணை வைத்துக் கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமாக எடையுள்ள சுமைகளைத் தூக்காதீர்கள்.

தொலைபேசியில் பேசும்போது குனிந்து பேசாதீர்கள்.

உயரமான காலணிகளை அணியாதீர்கள்.

உடற் பருமன் உள்ளவர்கள் உடல் எடையைக் குறையுங்கள்.

மல்லாக்கப் படுத்து உறங்கும் போது, முழங்காலுக்குக் கீழே தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக விளையாடுங்கள்.

சுமைகளைச் சரியாகத் தூக்குவது எப்படி?

அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்காதீர்கள்.

சுமைகளை இழுப்பதற்குப் பதிலாகத் தள்ள முயலுங்கள்.

சுமைகளைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காதீர்கள்.

முழங்கால்களை மடித்துக் கொள்ளுங்கள். உடலை முடிந்தவரை தூக்க வேண்டிய சுமைக்கு அருகே வைத்துக் கொள்ளுங்கள். முதுகை நேராக வைத்துக் கொள்ளுங்கள். சுமையை கைகளால் உடலருகே எடுத்துக்கொள்ளுங்கள். சுமையை வயிற்றோடு அணைத்த நிலையில், வயிற்றுத் தசைகைளப் பயன்படுத்தித் தூக்குங்கள்.

சுமையை வைத்துள்ளபோது, இடுப்பை வளைத்து உடலைத் திருப்பாதீர்கள்.

கால்களைத் திருப்பி உடலோடு திருப்புங்கள்.

அதிக எடையுள்ள பொருள்களை இடுப்புக்குமேல் தூக்க முயலாதீர்கள்.




 

2 comments:

  1. தேவையான பகிர்வு...

    விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. மிக நல்ல பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete