Search This Blog

Friday, November 16, 2012

இயங்குவது எப்படி? கேமெரா


க்ளிக். இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரபலமான, எல்லோராலும் புரிந்து கொள்கிற, விரும்புகிற வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

காரணம், ‘க்ளிக்’ என்பது கேமெராவின் அடையாளம். 

உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? கேமெராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்த காலம் எல்லாம் போய்விட்டது. இன்றைய கேமெராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவானவை, சத்தமே இல்லாமல் நூற்றுக்கணக்கான போட்டோக்களை எடுத்துக் குவித்துவிடுகின்றன!

அதென்ன டிஜிட்டல் தொழில் நுட்பம்? அதுக்கு முன்பு ஒரு கேமெரா எப்படி இயங்குகிறது என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்வோம்.

எந்த கேமெராவிலும் கண்ணில் படுகிற முதல் விஷயம் லென்ஸ்தான்.

‘லென்ஸ்’ என்பது வித்தியாசமான வடிவத்தில் தயாரிக்கப்படுகிற ஒருசிறப்புக் கண்ணாடித் துண்டு. இதன் வேலை, ஒளியைக் குவித்து ஒரே இடத்தில் கொண்டு வருவது.

ஒரு கடைக்குப் போகிறீர்கள். வாசலில் ஒரு பெரிய கண்ணாடி. அது வழியாக வெளிச்சம் கடைக்குள்ளே வந்து விழுகிறது. இதுக்குக் காரணம், அந்தக் கடையில் இருக்கிற கண்ணாடி, ஊத்தப்பம் மாதிரி தட்டையான வடிவத்தில் இருக்கிறது. அதனால், சூரிய ஒளி அதைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது.

அதே கண்ணாடியைக் கொஞ்சம் வேறு வடிவத்தில் தயாரிக்கிறதாக வைத்துக் கொள்வோம். நடுவில் தடிமனாவும் ஓரங்களில் மெலிதாவும் கிட்டத்தட்ட, வாழைப் பழம் மாதிரி.

இந்த ஸ்பெஷல் கண்ணாடி வழியாகச் சூரிய வெளிச்சம் நுழையும்போது, அது லேசாக வளைந்து, திரும்பிக் கீழே விழுகிறது, பரவலாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. அதுதான் லென்ஸின் அடிப்படை நுட்பம்.

கேமெராவுக்கு முன்னால் இருக்கிற லென்ஸும் கிட்டத்தட்ட இதே வேலையைத்தான் செய்கிறது. நாம் எந்தப் பொருளைப் படம் எடுக்கிறோமோ, அதிலிருந்து வருகிற ஒளிக் கதிர்களை ஒரே இடத்தில், அதாவது கேமெராவுக்குள்ளே இருக்கிற பின் பகுதியில் கொண்டு போய்க் குவிக்கிறது.

உதாரணமாக, உங்கள் வீட்டில் ஒரு பார்ட்டி. அதுக்காகக் கட்டப்பட்டிருக்கிற பலூன்களை கேமெராவால் படம் எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அறையில் நிறைய விளக்குகள் இருக்கின்றன. அதிலிருந்து வருகிற வெளிச்சம், அந்த பலூன்கள் மேல் பட்டுப் பிரதிபலிக்கிறது. அது கேமெராவுக்குள்ளும் நுழைகிறது.

கேமெராவில் இருக்கிற லென்ஸ் இந்த வெளிச்சங்களை ஒரே இடத்தில் கொண்டு போய்க் குவிக்கிறது.அங்கேதான் ஃபிலிம் இருக்கிறது. அது ஒரு விசேஷமான பிளாஸ்டிக் தகடு. அதில் சிலரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். இந்த ரசாயனங்களின் சிறப்பு அவற்றின்மேல கொஞ்சம் வெளிச்சம் பட்டாலே போதும், அந்த வெளிச்சத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும்.

இதனால், பலூன்களில் இருந்து வருகிற வெளிச்சம் லென்ஸ் வழியாக இந்த ரசாயனங்களின் மீது விழும்போது, அந்தக் காட்சி அப்படியே ஃபிலிம் ரோலின் ஒரு பகுதியில் பதிவாகி விடுகிறது. இதேமாதிரி அடுத்தடுத்து நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு போட்டோவும் இந்தச் சுருளில் வரிசையாகப் பதிவாகிக் கொண்டே வருகிறது.

அப்புறமென்ன? ஃபிலிம் ரோலை வெளியில் எடுத்துப் படத்தைப் பார்க்க வேண்டியது தானே?

அவசரப்படாதீர்கள். கேமெராவிலிருந்து ஃபிலிம் ரோலை வெளியில் எடுத்தால், இங்கே இருக்கிற வெளிச்சம் முழுவதும் அதுமேல் விழும், அதுவரைக்கும் நீங்கள் எடுத்த படங்களெல்லாம் அழிந்துவிடும், மொத்தச் சுருளும் பாழாகிவிடும்.

அதனால், இதற்கென்று வடிவமைக்கப்பட்ட ‘டார்க் ரூம்’, அதாவது இருட்டு அறைகளில்தான் ஃபிலிம் ரோலைப் பிரித்து வெளியில் எடுப்பார்கள். சில விசேஷக் கரைசல்களில் நனைத்து, காயவைப்பார்கள். அதன் மூலமாக உங்கள் படங்கள் என்றும் அழியாதபடி பாதுகாக்கப்படுகிறது.

அந்த ஃபிலிம் ரோலுக்குப் பெயர் ‘நெகட்டிவ்’. அதை நாம் வெளிச்சத்தில் பார்த்தால், நமக்கு ஒன்றுமே புரியாது. அந்த ’நெகட்டிவ்’வைச் சில விசேஷக் கருவிகளில் செலுத்தி, ‘பாசிட்டிவ்’வாக மாற்றுவார்கள். அதாவது, கொஞ்சம் தடிமனான ஒரு காகிதத்தில் அழகாக அச்சடித்துத் தருவார்கள். அதைத்தான் நாம் ‘போட்டோகிராஃப்’ என்று சொல்கிறோம்.

ஒரு ஃபிலிம் ரோலைப் பத்திரமாக வெளியில் எடுத்து, நெகட்டிவ்வாக மாற்றி, அச்சிட்டுத் தருவதற்குச் சில மணி நேரங்களாவது ஆகிடும். அதாவது, நாம் எடுத்த ஃபோட்டோவை உடனே பார்க்கமுடியாது. 

இப்போது வருகிற பெரும்பாலான கேமெராக்களில் ஃபிலிம் ரோல் கிடையாது, டார்க் ரூம் கிடையாது, நெகட்டிவ் கிடையாது, ஆனால் உடனுக்குடன் போட்டோ மட்டும் உண்டு. அது எப்படி?

இந்த கேமெராக்களிலும் லென்ஸ் உண்டு. ஆனால் அதில் வெளிச்சம் நுழைந்து குவிகிற இடத்தில் ஃபிலிம் ரோல் இருக்காது. படச்சுருள் பிளாஸ்டிக், ரசாயனத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒளியை உணரக்கூடிய விசேஷ சிலிக்கான் சில்லுகளைப் பயன்படுத்திப் படங்களைப் பதிவு செய்கிறார்கள். அதுதான் டிஜிட்டல் கேமெரா!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய நன்மை, இந்த கேமெராவில் எடுத்த படங்களை உடனே பார்க்கலாம். மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.

அதுமட்டுமா? ஃபிலிம் ரோல், நெகட்டிவ் தயாரிக்கிறது, அச்சிடறது என்று எல்லாமே விலை அதிகம் பிடித்த விஷயங்கள். முப்பது போட்டோ எடுப்பதற்கே சில நூறு ரூபாய்கள் செலவாகிவிடும்.

ஆனால் டிஜிட்டல் கேமெராவில், அவ்வளவு செலவு கிடையாது. ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். இல்லை என்றால் அப்படியே கேமெராவில் பார்க்கலாம், கம்ப்யூட் டரில் பார்க்கலாம், டிவியில் பார்க்கலாம், இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் இருக்கிறது.
முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம்.

டிஜிட்டல் கேமெராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் போனிலேயே ஒரு கேமெராவையும் கொடுத்து விடுகிறார்கள்.
ஜாலிக்காக போட்டோ எடுக்கிறவர்கள் ஒரு பக்கமிருக்க, இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொள்கிறவர்களும் ஏராளமாக உண்டு. இவர்களுக்காகவே விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

நீங்கள் எப்படி? ஜாலிக்கு ‘க்ளிக்’ செய்யப் போகிறீர்களா? அல்லது, உங்கள் படங்கள் சரித்திரத்தில் இடம் பெறும்படி உழைக்கப் போகிறீர்களா? நோக்கம் எதுவென்றாலும் அதுக்குப் பொருத்தமான ஒரு கேமெராவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்!




1 comment:

  1. இப்போது குழந்தைகள் கூட அருமையாக சுட்டுத் தள்ளுகிறார்கள்...!

    விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete