Search This Blog

Saturday, November 10, 2012

எனது இந்தியா (மத்த விலாசம்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

'அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணவாக இருப்பது எது?’ என்ற கேள்விக்கு 'புகழ்ச்சி’ என்று மகா​பாரதத்​தில் விதுரன் பதில் சொல்கிறான். என்ன ஓர் அற்புதமான பதில்!

புகழ்ச்சிதான் அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்துகிறது. புகழ்ச்சி என்பது தேடிப் பெற வேண்டிய ஒன்று அல்ல. அது, தானே தேடி வர வேண்டிய ஒன்று. புகழ்ந்து பாடுவதற்காகவே அரசவைக் கவிஞர்கள் நியமிக்கப்பட்டனர். சில அரசர்கள் தாங்களும் கவிஞனாக ஆசைப்பட்டுப் புனையும் அபத்தமான கவிதைகளை, இதுதான் உலகின் உன்னதக் கவிதை என்று புகழ வேண்டிய நெருக்கடியும் புலவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், யாரோ எழுதியதை அரசர்கள் தங்கள் பெயரில் வெளியிட்டு பாராட்டுகளை அள்ளிக்கொள்வதும் நடந்து இருக்கிறது. இசை, இலக்கியம் மற்றும் நுண்கலைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட சில மன்னர்கள், தங்களின் உயர்ந்த படைப்புகளால் மக்களிடம் புகழ்பெற்றதும் இந்திய வரலாற்றில் உண்டு. அரசுக் கட்டிலில் இருந்தபோதும் ஹர்ஷர், ஜகனாரா பேகம், மகேந்திர வர்மன் போன்றவர்கள் எழுதுவதில் ஆர்வம்கொண்டு இருந்தனர். மாமன்னர் ஹர்ஷனும் மகேந்திர பல்லவனும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி புகழ்பெற்று இருக்கின்றனர். மகாகவி காளிதாசன், பாஷன், பாண பட்டர் ஆகியோருக்கு இணையாக இவர்களது நாடகங்களும் சமஸ்கிருத இலக்கியத்தில் இன்றும் விருப்பத்துடன் வாசிக்கப்படுகின்றன. இருவரது நாடகங்களையும் வாசிக்கும்போது, அரசியல் கொந்தளிப்புகளுக்கு ஊடே எப்படி இவர்கள் இதுபோன்ற நாடகங்களை எழுதினர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று, சமஸ்கிருத நாடகங்கள் அதிகம் நடத்தப்படுவது இல்லை. ஆனால், அதன் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒன்றிரண்டு நாடகங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. 



பல்லவ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் மகேந்திர வர்மன். சிம்ம விஷ்ணுவின் மகனான இவர், காஞ்சிபுரத்தை கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஓவியம், சிற்பம், கட்டடக்கலை என ஆர்வம்கொண்டமகேந்திர வர்மனுக்கு, சித்திரகாரப்புலி என்ற சிறப்புப் பெயரும் இருந்தது. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்றும், பின்னாளில் இவர் சைவ சமயத்துக்கு மாறினார் என்றும் கூறப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய அரசன் புலிகேசி, காஞ்சியின் மீது படை எடுத்து வென்றான். பல்லவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களின் மூலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இன்றும் நிலவுகின்றன. அவர்கள் பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என ஒரு சாராரும், மணி பல்லவத்தில் இருந்து வந்தவர்கள் என சில அறிஞர்களும் கூறுகின்றனர். தொண்டை மண்டலத்தைப் பல்லவர் ஆட்சி செய்தபோது, சமஸ்கிருதமே முக்கிய மொழியாக இருந்தது. பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூன்று பிரிவினர் உண்டு. இவர்களில், பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணுவின் மரபில் வந்தவர் முதலாம் மகேந்திர வர்மன். மாமல்லபுரம், மாமண்டூர், சிங்காவரம், நாமக்கல் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் பல்லவர்கள் உருவாக்கிய கோயில்கள் கலைச் சிறப்புகொண்டவை. அன்று, காஞ்சிபுரத்தில் சமண பௌத்த சமயங்களுடன், பாசுபதம், காபா​லிகம், காளாமுகம் போன்ற தீவிர சைவ நெறிகளும் பின்​பற்றப்​பட்டன. திருநீறு அணிந்து சிவனே முழுமுதற் கடவுள் என்று சொல்பவர்களை பாசுபதர்கள் என அழைப்​பார்கள். காபாலிகர் என்ற பிரி​வினர், சிவனின் வடிவமான பைரவரை வணங்குபவர்கள். இவர்கள், கழுத்தில் மண்டை ஓடுகளை மாலைகளாக அணிந்து, பெண்களை சக்தி வடிவமாக வணங்கினர். அதுபோலவே, மந்திரம் சொல்லி உயிர்ப்பலி கொடுத்து சக்தியை அடைய முயன்றவர்கள் காளாமுகர். இந்த சமயப் பிரிவுகளுக்குள் கருத்து மோதல்களும் சண்டைகளும் அதிகாரத்தோடு யார் நெருக்கமாக இருப்பது என்பதிலும் போட்டி நிலவியது. மகேந்திர வர்மன், 'மத்த விலாச பிரகசனம்’, 'பகவதஜ்ஜூகம்’ ஆகிய இரண்டு நாடகங்களை எழுதி இருக்கிறார். இரண்டுமே அங்கத வகையைச் சேர்ந்த நாடகங்கள். மகேந்திர வர்மனின் நாடகத்தைப் புரிந்துகொள்ள அன்றைய சமயச் சூழலை அறிவது அவசியம்.

'மத்த விலாச பிரகசனம்’ நாடகம் காஞ்சிபுரத்தில் நடைபெறுவதுபோல எழுதப்பட்டு இருக்கிறது. நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஐந்து பேர். காபாலிக சமயத்தைச் சேர்ந்த துறவி மற்றும் அவரது காதலி, இருவரையும் வீதியில் சந்திக்கும் ஒரு புத்த துறவி, அவர்களுக்கு நியாயம் சொல்ல வந்த பாசுபத சமயத்தைச் சேர்ந்த இன்னொரு துறவி. இடையிடும் ஒரு பைத்தியக்காரன் என்ற ஐந்து பேரைக்கொண்டு நாட​கம் நடத்தப்படுகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் குளறுபடிகள், போலித்தனங்கள் இந்த நாடகத்தில் கேலி செய்யப்​படுகின்றன. தமிழகத்தில் 7-ம் நூற்றாண்டில் பௌத்தம் தன்னுடைய செல்வாக்கை இழக்கத் தொடங்கி இருந்தது. பௌத்த மடாலயங்கள் வணிகர்களின் ஆதரவை நம்பி, அவர்களின் ஊதுகுழல்கள் போல செயல்பட்டன. அதே நேரம், சைவம் புத்துருவாக்கம் பெற ஆரம்பித்து இருந்தது. மகேந்திர வர்மன் சமண மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோது இந்த நாடகத்தை எழுதி இருக்கக்கூடும். காரணம், அன்று பல்லவர்களின் ஆட்சிக்கு அடங்காமல் கலகக் குரல் எழுப்பியவர்கள் காபாலிகர்கள் மற்றும் பாசுபத பிரிவைச் சேர்ந்த ஆதி சைவர்கள். அவர்களைக் கேலிசெய்து விமர்சிப்பதே இந்த நாடகங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

மத்த விலாசம் நாடகம், சூத்ரதாரி எனும் கதை​சொல்லியின் மூலம் தொடங்குகிறது. அரச சபையில் புதிய நாடகம் நிகழ்த்த தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தன் மீது கோபம்கொண்டுள்ள மூத்த மனைவியை மகிழ்விக்க, வேடிக்கையான ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தலாம் என்கிறான் சூத்ரதாரி. அதைக் கேட்ட அவனது மனைவி நடீ, 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கோபத்துடன் முறைக்கிறாள். ஆனால் அவனோ, 'உன் நடிப்பில் மகிழ்ந்து நிறையப் பாராட்டும் பரிசும் கிடைக்கும். ஆகவே, நகைச்சுவையான நாடகத்தை நிகழ்த்துவோம்’ என்று அவளை உற்சாகப்படுத்துகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மன்னர் மகேந்திர வர்மன் எழுதிய, 'மத்த விலாசம்’ என்ற நாடகத்தை, தாங்கள் நிகழ்த்த உள்ளதாகச் சொல்லி நாடகத்தைத் தொடங்குகிறான் சூத்ரதாரி. நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஓர் காபாலிகன். அவனது பெயர் சத்தியசோமன். காபாலிகர்கள் கையில் கபால ஓட்டை ஏந்தி வீதிவீதியாகப் பிட்சை வாங்கி பிழைப்பவர்கள். இவர்கள் மயானத்தில் வாழ்பவர்கள். பிட்சாடனக் கோலம்கொண்ட ருத்ரனின் வாரிசுகள். நாடகத்தில் வரும் காபாலிகன் மது, மாமிசம், மாது என்ற மூன்றுமே முக்திக்கு வழிகாட்டுபவை என்கிறான். நாடகம் தொடங்கும்போது காபாலிகனும் அவனது காதலி தேவசோமாவும் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு போதையோடு ஆடியபடியே மேடையில் நுழைகின்றனர். பெண்கள் போதை ஏற்றிக்கொண்ட பிறகு, புதிய அழகு பெறுகின்றனர் என்று பாராட்டுகிறான் சத்தியசோமன். அப்போது, அவள் பெயரை மாற்றிச் சொல்லிவிடுகிறான். உடனே தேவசோமா, அது எந்தப் பெண் என்று சந்தேகப்படுகிறாள். காபாலிகன், அது போதையில் ஏற்பட்ட தடுமாற்றம். இதுபோல வம்புகள் உருவாகும் காரணத்தால் நான் இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்கிறான்.

அதைக் கேட்ட தேவசோமா, இதற்காகப் போய் இன்பம் தரும் குடியை விட்டுவிடாதே... இது உன்னுடைய தவம் என்கிறாள். இருவரும், போதை ஏறவில்லை என்று இன்னொரு மதுக் கடையைத் தேடிப்போகின்றனர். காஞ்சிபுரம் நகரமே ஒரு புளிப்பேறிய மதுவைப் போல தித்திப்பாக இருக்கிறது என்கிறான் துறவி. இன்னொரு மதுக் கடைக்கு செல்கின்றனர். செல்லும் வழியில் சத்தியசோமனின் பிட்சைப் பாத்திரமான கபால ஓடு காணாமல் போகிறது. இப்போது, எங்கே போய் அதைத் தேடுவாய், மாட்டுக் கொம்பில் மதுவை வாங்கிக் குடி என்று அவனை சமாதானப்படுத்துகிறாள் காதலி. அவனோ, திருட்டுப்போன கபால ஓட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனது துறவித்தன்மை கெட்டுவிடும் என்று கத்துகிறான்.

நகரம் முழுவதும் அதைத் தேடி அலையும் இருவரும் முன்பு தாங்கள் குடித்த இடத்துக்கே மறுபடி வருகின்றனர். தனது கபால பாத்திரத்தில் கொஞ்சம் மாமிசம் மீதம் இருந்தது. ஆகவே, அதை ஒரு நாயோ அல்லது புத்த துறவியோதான் திருடி இருக்க வேண்டும் என்கிறான் சத்தியசோமன். அப்போது, ஒரு புத்த பிக்கு வீதியில் நடந்து வருகிறான். தனது கபால ஓட்டைத் திருடியவன் அவன்தான் என்று கூச்சலிடுகிறான் காபாலிகன். வீதியில் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அவர்களது வாதத்தின் வழியே, பௌத்தம் மிக மோசமாகக் கேலிசெய்யப்படுகிறது. உன் மண்டையை உடைத்து அதையே தனது பிட்சைப் பாத்திரமாக எடுத்துக்கொள்ளப்போவதாக பிக்குவின் முடியை பிடிக்கத் துள்ளுகிறான் சத்தியசோமன். உன்னைப் போன்ற மூடர்களிடம் நாங்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே தலையை மொட்டை அடித்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறார் புத்தர். உன்னால் முடிந்தால் செய்து பார் என்கிறான் பிக்கு. இவர்கள் சண்டைக்கு நியாயம் சொல்ல வருகிறான் ஒரு பாசுபதன். நடந்ததைப் பற்றி அவன் விசாரிக்கிறான். வழக்காடு மன்றம் சென்றாலும் புத்த துறவிகள் தங்களுக்கு அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்று குறை சொல்கிறாள் தேவசோமா. அப்போது, கபால ஓட்டைக் கவ்விக்கொண்டு ஓடும் ஒரு நாயைத் துரத்தியபடியே ஒரு பைத்தியக்காரன் ஓடி வருகிறான். அவன், நாயிடம் இருந்து கபாலத்தைப் பறிக்கிறான்.

No comments:

Post a Comment