Search This Blog

Friday, October 05, 2012

வயிறு வலித்தால் என்ன செய்வது?


விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டாகிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்றுவலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்துவலி, காதுவலி, கண் வலி, முதுகுவலி, மூட்டுவலி போன்றவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை.

இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரையை விழுங்குகிறோம். இந்த வலிகளுக்குக் காரணம் தெரிந்து முதலுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென்றால், நாம் செய்யும் முதலுதவியே சமயங்களில் ஆபத்தாகி விடும்.

தலைவலி:

சாதாரண காய்ச்சலில் தொடங்கி ஆபத்தான மூளைக்கட்டிகள் வரை தலைவலிக்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, வைரஸ் காய்ச்சல்கள் எல்லாமே தலைவலியை ஏற்படுத்தும்.‘சைனஸ்’ என்று அழைக்கப்படும் முகக் காற்றறைகளில் அழற்சி ஏற்பட்டால், தலைவலி வரும். ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி, பல்நோய், காதுநோய், தொண்டை நோய், ஒற்றைத் தலைவலி போன்றவையும் தலைவலியை ஏற்படுத்தும்.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுகளை விளையாடுவது போன்றவையும் தலைவலிக்குக் காரணமாகலாம். பசிகூட தலைவலியை உண்டாக்கும். குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவைச் சாப்பிடாமல் சென்றால், வகுப்பறையில் தலைவலிக்கும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தலைவலியை உண்டாக்கும்.

தலைவலிக்கு முதலுதவி:

பாராசிட்டமால், புரூஃபன் மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தினால், தலைவலி குறையும்.

வெளிச்சம் அதிகமில்லாத, சத்தமில்லாத, அமைதியான இடத்தில் போதிய ஓய்வெடுத்துக் கொண்டால்,சாதாரண தலைவலி சரியாகிவிடும்.

அப்படியும் தலைவலி குறையவில்லை என்றால், தலையைச் சிறிது நேரம் அழுத்திக் கொடுக்கலாம்.

இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.

வலிநிவாரணி தைலங்களை நெற்றியில் தடவலாம்.

‘டிங்சர் பென்சாயின்’ சொட்டு மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.

வெந்நீரில் குளிக்கலாம்.

 காபி அருந்தலாம்.

இனிய இசையைக் கேட்கலாம்.

தொண்டை வலி:

வைரஸ், பாக்டீரீயா தொற்றுகளால் தொண்டையில் புண் உண்டாகும். இதனால், தொண்டையில் அரிப்பு, கரகரப்பு, வலி ஏற்படும். முக்கியமாக, ஜலதோஷம் பிடிக்கும்போது மூக்குடன் தொண்டையும் பாதிக்கப்படும். பெரும்பாலான நேரங்களில் தொண்டைவலி தானாகவே சரியாகிவிடும். காய்ச்சல், கழுத்தில் நெறிக்கட்டி, தொண்டை இறுக்குவது போன்ற உணர்வு, விழுங்குவதில் சிரமம், குரலில் கரகரப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்போது சிகிச்சை தேவைப்படலாம்.

முதலுதவி என்ன?

ஒரு தம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் அரை தேக்கரண்டி சமையல் உப்பைக் கலந்து வாய் மற்றும் தொண்டையைக் கொப்பளித்தால், தொண்டைக்கு இதமளிப்பதுடன், தொண்டையிலிருந்து சளி வெளியேறவும் உதவும். இதனை ஒரு நாளில் நான்கு முறையாவது செய்ய வேண்டும்.

’ஹால்ஸ்’ போன்ற மருந்து கலந்த சூயிங்கத்தைச் சுவைத்தால், உமிழ்நீர் அதிகம் சுரந்து, தொண்டையைச் சுத்தம் செய்யும். தொண்டை வறட்சி, அரிப்பு, கரகரப்பு குறையும்.

இளஞ்சூடான பால், காபி, எலுமிச்சைத் தேநீர் போன்றவற்றை அருந்தினால், சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.

பாராசிட்டமால், புரூஃபன் கலந்த மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தினால், தொண்டைவலி குறையும்.

பேசுவதைக் குறைத்து தொண்டைக்கு ஓய்வு கொடுத்தால், தொண்டை வலி விரைவில் குணமாகும்.

வயிற்றுவலி:

வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. செரிமானக்குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள் என்று பல நோய்களில் வயிற்றுவலி வரும். வலி உள்ள இடத்தைப் பொறுத்து நோயின் தன்மையை ஓரளவுக்கு நாம் அறிந்துகொள்ள முடியும்.

முதலுதவி என்ன?

வயிற்றுவலி ஆரம்பித்த உடனேயே வயிற்றுவலி மாத்திரை ஒன்றை (எ.கா. - ‘சைக்ளோபாம்’) சாப்பிடலாம். வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் பொதுவான முதலுதவி இது.

இந்த மாத்திரை கிடைக்காவிட்டால், ஒரு கண்ணாடி பாட்டிலில் கொதிநீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக் கொண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம்.

மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கலாம். இதற்கு அமில நீர்ப்பு மருந்து(எ.கா. - ஜெலுசில், டைஜீன்) அல்லது அமில எதிர்ப்பு மாத்திரைகளில் (எ.கா. - ரேபிபிரசோல், பேன்டபுரசோல்) ஒன்றைப் பயன்படுத்தலாம்.

மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால், வயிற்றுவலி மாத்திரையுடன், மலமிளக்கி மாத்திரை (எ.கா-பர் கோளக்ஸ்) ஒன்றை இரவில் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வருமானால், அதற்குக் குடல்புழு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. குடல் புழு மாத்திரை ஒன்றை (எ.கா- அல்பண்டசோல்) விழுங்கினால், வயிற்று வலி வராது.

சிறுநீர்க்கடுப்புடன் அடிவயிறு அல்லது கீழ்முதுகு வலித்தால், சிறுநீரகக்கல் காரணமாக இருக்கும். இதற்கு வயிற்றுவலி மாத்திரையுடன், 200 மி.லி. தண்ணீரில் 2 கரண்டி ‘சிட்ரால்கா சிரப்’ பைக் கலந்து அருந்தலாம். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழரசங்களைக் குடிக்கலாம்.

இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்றுவலியுடன் புளித்த ஏப்பம், உமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும். இதற்கு இளநீர் அருந்தலாம். ‘எலெக்ட்ரால்’ பவுடர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்தலாம். இதனை அடிக்கடி குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

வாயு சேர்ந்து வயிறு வலித்தால், ‘சைமத்திக்கோன்’, ‘சார்க்கோல்’ மாத்திரைகளில் ஒன்றைச் சாப்பிடலாம்.

வயிற்றின் வலது பக்கம் தொப்புளைச் சுற்றியும் அடிவயிறும் வலித்தால், குடல் வால் அழற்சி காரணமாக இருக்கலாம். இந்த வலிக்கு வெந்நீர் ஒத்தடம் தரக்கூடாது. பதிலாக, குளிர்ந்த நீரைக் கண்ணாடி பாட்டிலில் நிரப்பிக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும்.

வயிற்றுவலி நீடித்தால் அல்லது அதிகரித்தால், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மயக்கம் போன்ற துணை அறிகுறிகள் தோன்றினால், மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்து விட்டு, மருத்துவரின் ஆலோசனையையும் உடனடியாகப் பெற வேண்டும்.


 

 
 

3 comments: