Search This Blog

Sunday, September 23, 2012

சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி... அன்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்கு நிகரான ஒரு போராட்டம் இப்போது இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டம்தான் அது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா, கூடாதா என கடந்த பல ஆண்டு காலமாக விவாதித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளிலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகும், அவர்கள் அளித்துவந்த ஆதரவு போனாலும் பரவாயில்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் என்கிற துணிவோடு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசு அறிவிப்பை முறைப்படியாக வெளியிட்டது. இந்த வர்த்தகத்தில் இது ஒரு பெரும் புரட்சி என்றே விளம்பரம் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்கு நடுவே, அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மக்களிடம் புழங்க ஆரம்பித்தன. காரணம், மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுபற்றி கடுமையாக விவாதிக்கப்பட்டன. வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்பட்சத்தில் சிறு வியாபாரிகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள்:(
 
முதலில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துகளைப் பார்ப்போம்.
 
 

இந்திய ரீடெய்ல் துறையில் சுமார் 6-8% வரை மட்டுமே ஆர்கனைஸ்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது. மீதம் பரம்பரை பரம்பரையாக வணிகம் செய்பவர்களிடமும், சிறுவணிகர்களிடமும்தான் இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் தொடங்கப்படும்  கடைகள் பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் தான் அனுமதிக்கப்படும். அப்படிப் பார்த்தால் 2011 மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் 53 நகரங்கள்தான் பத்து லட்சத்துக்கு மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களே இல்லை. ஆக, வெறும் 53 நகரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உரிய பிரச்னையாக பூதாகரமாக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் 70 சதவிகிதத்துக்கு மேலான வர்த்தகம் இன்னும் சிறுவணிகர்களிடம்தான் இருக்கிறது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அந்த துறை நன்றாக வளர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஆங்காங்கே அமைக்கப்படும் கடைகள் எப்படி ஒட்டுமொத்த இந்திய ரீடெய்ல் துறையையே மாற்றி அமைக்கும் என்று புரியவில்லை.

மேலும், அந்நிய நிறுவனங்கள் இந்தியாவை மொத்தமாக சுரண்டி லாபம் சம்பாதிக்கும் என்பது உண்மையில்லை. ஏற்கெனவே இப்போது இருக்கும் முக்கியமான பிராண்டட் ரீடெய்ல் நிறுவனங்கள் பல தங்களது கடையை இழுத்து மூடிவருகின்றன. அவர்கள் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் லாபமே சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து எல்லோரையும் ஒழித்துவிடும் என்று சொல்வதெல்லாம் அதீதமான கற்பனைதான்.

அந்நிய நிறுவனங்கள் பிஸினஸ் செய்வதற்கும் நாம் பிஸினஸ் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்தியா ஒரு பரந்துபட்ட நாடு. தினந்தோறும் தேவைக்கு ஏற்ப மளிகை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு, மாதத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதாவது, ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் நம் நாட்டில் அதிகம். இவர்களின் தேவையை நிறைவேற்ற எங்களை போன்ற கடைக்காரர்களால்தான் முடியும். பத்து பட்டாணிக் கடை இருந்தாலும் பதினோறாவதாக இன்னொரு கடை போட்டால் இங்கு வியாபாரம் நடக்கும். அது ஒரு பிரச்னையே இல்லை.  

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் வரமாட்டார்கள். ரீடெய்ல் கடைகளுக்கு வரும் மக்கள் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த மக்களாகவே இருப்பார்கள். அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்று மளிகை வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும்பட்சத்தில் எங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.

என்றாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களை டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், இந்த நிறுவனங்களின் முக்கிய பிஸினஸ் ரீடெய்ல் ஸ்டோர் நடத்துவது கிடையாது. அவர்களிடத்தில் இருக்கும் பல பிஸினஸ்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். அதனால்தான் அவர்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. ஆனால், இப்போதுவரும் அந்நிய நிறுவனங்களுக்கு அதுதான் முக்கிய பிஸினஸ். அதனால் அவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக ஆட்களின் சம்பளம், ஷிஃப்ட் முறை கொண்டுவருவது, டெக்னாலஜியில் மாற்றங்களை கொண்டுவருவது உள்ளிட்ட பல வேலைகளை நாங்கள் செய்தாக வேண்டும். இது ஆரோக்கியமானதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊரில் யார் வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது''.


 ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடே தேவை இல்லை. இது தேசத்தையே விற்பதற்கான முயற்சிகளில் ஒன்று. 1991-ம் ஆண்டு இந்தியர்களின் சேமிப்பு ஜி.டி.பி.யில் 18%. ஆனால், இப்போது 36%. இத்தனை வருட இடைவெளியில் நமது சேமிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த சேமிப்பு முதலீடாக மாறவில்லை. நம்மிடத்தில் சேமிப்பு இல்லை என்கிறபட்சத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு சேமிப்பு இருந்தும், அதை இந்த அரசு முதலீடாக மாற்ற முயற்சிக்கும் வழியை, நம்பிக்கையை உண்டாக்காமல் அந்நிய முதலீட்டை கொண்டுவருவதில் என்ன நியாயம்?

அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில்லறை வர்த்தகத்தை நம்பி இருக்கும் பத்து கோடி தொழில்முனைவோர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள். மேலும், இந்தியாவின் முக்கியமான நகரங்களில்தான் இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்க போவதாகச் சொல்கிறார்கள். ரீடெய்ல் துறையின் பிஸினஸ் பெருநகரங்களில்தானே நடக்கிறது? 

இந்தக் கடைகள் வரும்பட்சத்தில் இடைத்தரகர்கள் தேவை இல்லை; விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் விவசாயிகளுக்கு தரும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடுமா? முடியாதே! மக்களின் வரிப் பணம், விவசாயிகளுக்கு மானியம் என்கிற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போகப் போகிறது.

மேலும், இந்த நிறுவனங்களிடம் இருக்கும் பணபலத்தால் சில பொருட்களை அவர்களிடத்தில் மட்டுமே கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடத்தில் குறைவான அளவுகொண்ட பொருட்கள் இருக்காது. ஆஃபர் என்கிற பெயரில் கிலோ கணக்கில் பல பொருட்களை நாம் வாங்கி வைத்திருப்போம். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. நம்மூர் ரீடெய்ல் நிறுவனங்களைவிட பல மடங்கு பெரிய நிறுவனங்கள் நம் வணிகர்களை விழுங்கும் வாய்ப்பே அதிகம். இதனால் நமது இந்திய வாழ்க்கை முறையே மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது'' 
 
 

ஆனாலும், ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை நமது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கவே செய்கின்றன. காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் 51 சதவிகிதம்தான் வைத்திருக்க முடியும். மீதியை ஏதாவது ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டி இருக்கும். ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் அவர்கள் இதை விரும்புவதில் ஆச்சர்யமில்லை.
 

No comments:

Post a Comment