Search This Blog

Wednesday, September 26, 2012

எனது இந்தியா ( சுதேசி மன்னர்கள்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

சுதந்திரம் அடைந்தபோது இந்தியா மூன்று பகுதி​களாக இருந்தது. ஒன்று, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள். அதாவது சென்னை, பம்பாய், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், பீகார், வங்காளம், சிந்து அஸ்ஸாம் பகுதிகளை உள்ளடக்கியது. இரண்டாவது, தலைமைக் கமிஷனர் மாகாணங்கள். இவை, பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பலுசிஸ்தானம், வட மேற்கு எல்லை மாகாணம். மூன்றாவது, 500-க்கும் மேற்பட்ட சுதேசி மன்னர்கள் ஆட்சி செய்த மன்னர் மாநிலங்கள்.

இந்த மூன்று பகுதிகளின் பிரதிநிதிகளைக்கொண்டே அரசியல் அமைப்புச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. நேருவின் தலைமையில் செயல்பட்ட இடைக்கால அரசாங்கம், மன்னர் மாநிலங்களை இந்தியாவோடு இணைக்க ஒரு தனி அமைச்சரகத்தை உருவாக்கி இருந்தது. அதற்கு வல்லபாய் படேல் பொறுப்பேற்று இருந்தார். மன்னர் மாநிலங்களை சுதந்திர இந்தியா​வோடு இணைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அன்று இருந்த மன்னர்கள் காலம்காலமாக அனுபவித்த சலுகைகள் மற்றும் ராஜ வாழ்க்கையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதற்காக, 1947-ம் ஆண்டு ஜுலை 25-ம் தேதி இந்திய மன்னர்களின் மாநாடு ஒன்றை நடத்தினார் மௌன்ட் பேட்டன்.  இதில், மன்னர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அனைத்துச் சலுகைகளையும் பிரிட்டிஷ் அரசு முறையாகப் பெற்றுத்தரும் என்றும் அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டது. சுதேசி மன்னர்கள், படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மன்னர்களின் இணக்கத்தைப் பெறுவது எளிதாக இல்லை. படேல் சாம, தான பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளைப் பயன்படுத்தியே மன்னர்களின் இசைவைப் பெற்றார். இதற்கு, உள்துறைச் செயலராக இருந்த வி.பி.மேனன் முக்கியத் துணையாக இருந்தார்.



அந்தக் காலத்தில், சுதேச சமஸ்தானங்களில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவது தண்டனைக்​குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் சுதேசி சமஸ்தானங்கள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. பி.சி.ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டு சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். 550 மன்னர்கள் தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்காக அதற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டனர். ஆனால், ஜுனாகத் நவாப், ஹைதராபாத் நிஜாம், மற்றும் காஷ்மீர் மன்னர் ஆகியோர் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்கள் இந்தியாவோடு இணைந்த நிகழ்வு எதிர்பாராத பல திருப்பங்களைக்கொண்டது.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார். சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள். கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

அதோடு, 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார். காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான் காலையில் கண் விழிப்பது வழக்கம். அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர். பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

 இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும். ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார். அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன. டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம். ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.  இந்தியாவில் இருந்த சுதேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள். இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர். அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார். ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.  நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை. அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.

அவரது செல்ல மகள் என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது. மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் கர்சன் பிரபு. அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று அறிந்த கர்சன், நிகழ்ச்சிக்கு வரவில்லை. அது, தன்னை அவமதிக்கும் செயல் என்று நவாப் பகிரங்கமாக அறிவித்தார். திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.


திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள் அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.

மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது. 


No comments:

Post a Comment