Search This Blog

Sunday, September 23, 2012

சமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி?

னி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டருக்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்துதான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.  

மின்சார அடுப்பு!
மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக் கொள்வோம். ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனில், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.

மின் அடுப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல்லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப்பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமைத்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.

உங்களின் வீட்டில் அதிகபட்சமாக 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும் மானியமில்லாத விலையில் ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு  மிகக் குறைவுதான்.

ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8 ரூபாய் தரும்பட்சத்தில், அதற்காகும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.

எலெக்ட்ரிக் குக்கர்!

சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம்தான் இதற்கும் தேவைப்படும். ஆவியில் வேக வைக்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோவேவ் அவன்!

மைக்ரோவேவ் அவன் - இன்று கணிசமான குடும்பங்களில் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் டீ, காபி போட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நேரம் என்பது மிக மிக குறைவாக இருக்கும். ஆனால், இதற்கென இருக்கும் பிரத்யேகமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.


மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத்து, ஆண்டு முழுவதையும் ஓட்டிவிடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள். அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:

சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசியம். 

அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால்  அதிக கேஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

அகலமான பாத்திரத்தை வைத்து சமைத்தால் எரிபொருள் வீணாகாது. 

தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக்காமல், குக்கரில் சமைப்பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.

வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ளன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.

 டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில்,  மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்தலாம்.

1 comment:

  1. பயனுள்ள பல தகவல்கள்... ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete