Search This Blog

Sunday, August 12, 2012

எனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ரோடா மன்னரின் மனைவியான சிம்னாபாய், சதி முறையை ஒழிப்பதற்காக 1875 முதல் தீவிரமான இயக்கத்தை நடத்தினார். அகில இந்தியப் பெண்கள் மாநாட்டில், சதி குறித்து இவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. உடன்கட்டை ஏறுவதற்கான தடைச் சட்டம் வில்லியம் பெண்டிங் பிரபுவால் 1829-ம் ஆண்டு இயற்றப்பட்டபோதிலும், 1987-ம் ஆண்டு இந்திய அரசு இந்தச் சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்து அமல்படுத்தியது. இதன்படி, சதி முறை தடை செய்யப்பட்டது. அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் இந்தப் புதிய சட்டம் வழிவகுத்தது. இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்படும் வரையில், இந்தியாவில் கண் ணுக்குத் தெரியாமல் சதிக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.

சதி முறை, பெண்ணை உயிரோடு எரித்தது என்றால், வாழும்போதே அவளை முடக்கியது பால்ய விவாகம். சாரதா சட்டம் என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 1929-ல் அமலுக்கு வரும் வரை நான்கு, ஐந்து வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வழக்கமாகவே இருந்தது.

இந்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த 'ஹர் பிலாஸ் சாரதா’ என்ற சமூக சிந்தனையாளர். இவர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 1867-ம் ஆண்டு பிறந்தவர். ஆக்ராவில் பி.ஏ., ஹானர்ஸ் படித்தவர். ஜெய்சால்மார் மகாராஜாவிடம் பணியாற்றியவர். 1902 முதல் அஜ்மீர் நகரக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர். அதன் பிறகு சில காலம் நீதித் துறைக்கு மாற்றப்பட்டு செஷன்ஸ் ஜட்ஜ் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்களைப் பெற்ற  ஹர் பிலாஸ், குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தார்.

பெண்ணின் திருமண வயது 14 என்று அறிவிக்கப் பட்டு, 1930-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹர் பிலாஸ் சாரதா பற்றிய தனது கட்டுரை ஒன்றில் அரவிந்தன் நீலகண்டன் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றைக் கூறி இருக்கிறார். அது, பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட விதவைகளைப் பற்றிய புள்ளி விவரம். 1921-ல் விதவையான பெண் குழந்தைகளில் ஒரு வயதுக்கு உட்பட்டவர்கள் 612 பேர். ஒன்றில் இருந்து இரண்டு வயது வரையிலான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை 498. இரண்டில் இருந்து மூன்று வயதுக்குள் இருந்த விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை 1,280. மூன்றில் இருந்து நான்கு வயது வரை இருந்தவர்கள் 2,863. நான்கில் இருந்து ஐந்து வயது வரையில் ஆன குழந்தைகள் 6,758. ஐந்தில் இருந்து பத்து வயது வரையில் இருந்தவர்கள் 12,016. பால்ய விவாகத்தின் விளைவு எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் புள்ளி விவரமே சாட்சி.
 19ம் நூற்றாண்டின் இறுதி யிலேயே, குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, பி.எம். மலபாரி முயற்சி செய்தார். ஆனால், நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கைகளை வெள்ளை அரசு சீர்குலைக்கிறது என்று பழைமைவாதிகள் ஆவேசமாகக் கூக்குரலிட்டனர். மலபாரியின் முயற்சி தோற்றுப்போனது. அதன்பிறகு உருவானதே ஹர் பிலாஸின் திருமண வயது நிர்ணயச் சட்டம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனபோதும் இந்தச் சட்டமே பெண்களின் உரிமைக்கான முதல் அங்கீகாரம்.
பால்ய விவாகம், சதிக் கொடுமை போலவே இந்தியா முழுவதும் இருந்த இன்னொரு நடைமுறை தேவதாசிகள். கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று பெண்களில் சிலருக்கு பொட்டுக்கட்டி கடவுளுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களைக் கோயில் அடிமைகளாக மாற்றும் வழக்கமே தேவதாசி முறை. இப்படி, கோயில் பணியாளர்களாக இருந்த பெண்கள், ஆடல் பாடல்களில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்தியா முழுவதும் தேவதாசிகள் மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகே, ஜோகினி, ஆடல்கணிகை, ருத்ரகணிகை, தளிச்சேரி பெண்டிர் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். கோயில் பெண்களாக இவர்கள் பணியாற்றியபோதும், வசதி படைத்தவர்களுக்கான சுகப் பெண்களாக உருமாற்றம் அடைந்ததும் காலமாற்றத்தில் நடந்தேறியது.

தேவதாசி முறை எப்போது தோன்றியது என்பதற்கான நேரடி வரலாற்றுச் சான்றுகளை ஆராய முடியவில்லை. எல்லாக் கலைகளும் கோயில்களுடன் இணைந்தே வளர்ந்தன என்பதால், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு என்றே கணிகைகள் இருந்ததைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு அவர்கள் தேவதாசிகள் என்று முடிவு செய்துவிட முடியாது.

தேவதாசி மரபு மேலோங்கியது 9-ம் நூற்றாண் டுக்குப் பிறகே என்றுதான் தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம், புத்த மதத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து சமயம் மேலோங்கத் தொடங்கும்போது பல பௌத்த கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. அப்படி உருவான கோயில்களில் இருந்து பௌத்தப் பெண் துறவிகளாக இருந்த பிக்குணிகள் வெளியேறவில்லை. அவர்கள், கோயில் வளாகத்துக்குள் இருந்தபடியே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினர். இந்த நடைமுறையே, காலமாற்றத்தில் தேவதாசி மரபாக ஆகியிருக்கக் கூடும். 

ஆனால், சிறுவயதிலேயே பெண்கள் கோயிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டு கோயில் அடிமைகளாகச் செயல்பட்டதை, பௌத்தம் மேலோங்கியிருந்த காலத்தைச் சேர்ந்த இந்தியக் கோயில்கள் எதிலும் காண முடியவில்லை. நடனப் பெண்களாக இருந்த கணிகைகளைப் பற்றிக் கூறும் வட மொழி இலக்கியங்கள்கூட, இறைவனைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள், தேவதாசிகளாக வாழ்ந்ததைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

ஆகவே, தேவதாசிகள் என்ற மரபு எங்கிருந்து தொடங்கியது என்ற வேரைத் தெரிந்துகொள்வது  எளிதானது அல்ல. தஞ்சையில் வாழ்ந்த முத்துப்பழனி எழுதிய 'ராதா சாந்தவனம்’ என்ற காதல் பிரபந்தமும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ நாவலும் தாசி மரபு குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால், இவை இலக்கியப் படைப்புகள் என்பதால் வரலாற்றுத் தகவல்கள் அதிகம் இல்லை.

தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்கள், கடவுளைத் திருமணம் செய்துகொள்வதால் நித்யசுமங்கலியாகக் கருதப்பட்டனர். பூரி ஜெகன்னாதர் கோயில் வளாகத்தில் இருந்த தேவதாசிகள், புனிதமான பெண்களாகக் கருதப்பட்டு மகரி என்று அழைக்கபட்டனர்.

பெரும்பான்மை தேவதாசிப் பெண்கள் சதிர் கச்சேரி எனப்படும் நடனக் கலைஞர்களாகவே தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இசை அல்லது நடனத்தில் திறமை இல்லாதவர்கள், கோயிலைச் சுத்தப்படுத்துவது, தண்ணீர் இறைப்பது, கவரி வீசுவது, பூ கட்டுவது, அலங்காரம் செய்வது, மடப்பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வது என்று பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

தேவதாசிகள் சமூகத்திலேயே நான்கு வகையான பிரிவுகள் இருந்தன. ஒன்று, தாங்க ளாகவே விரும்பி கோயிலுக்குத் தங்களை அர்ப் பணித்துக்கொண்டவர்கள். அடுத்தது, பெற்றோரால் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுபவர்கள். மூன்றாவது, தீட்சை பெற்றுக்கொண்டு கோயிலில் இறைப் பணி செய்தவர்கள். கடைசி, கோயில் வளாகத்தினுள் நடனம் ஆடும் அலங்காரத் தாசிகள். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தேவதாசி முறை நிறுவனப்படுத்தப்பட்டு, கோயில் பணியாளர்களாக தேவதாசிகள் நியமிக்கப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த காலத்தில் ராஜராஜ சோழன் 400 தளிச்சேரிப் பெண்களை நியமித்தான் என்றும், அவர்கள் வசிப்பதற்காக தளிச்சேரி உருவாக்கப்பட்டது என்றும் சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு இலச்சினை இடும் பழக்கம் இருந்தது. சைவக் கோயிலில் ஊழியம் செய்யும் தேவதாசிகளுக்கு, சுடுகோலால் சூல வடிவத்தில் இலச்சினை பொறிக்கப்பட்டது. வைணவக் கோயிலில் சக்கர வடிவம் பொறிக்கப் பட்டது. தேவதாசியாக இருப்பவர் காதலித்தாலோ அல்லது வேறு ஆண்களுடன் பழகினாலோ, சுடுகோலால் தொடையில் சூடு போடும் பழக்கமும் இருந்தது. அதுபோலவே, விஜயநகரப் பேரரசின் காலத்தில் தேவதாசிகளுக்கு என்று தனி வரி விதிக்கப்பட்டது.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று முனைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அதற்கான மசோதாவைக் கொண்டுவந்தபோது, 'தேவதாசியாக இருப்பது தெய்வத் தொண்டு, அப்படி இருப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் மோட்சம் கிடைக்கும்’ என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. அதைக் கேட்ட முத்துலட்சுமி ரெட்டி, 'அப்படி நினைப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசி ஆக்கி மோட்சத்துக்கு அனுப்பிவைக்கலாமே?’ என்று சூடாகக் கேட்டதற்குப் பிறகே எதிர்ப்புக் குரல்கள் அடங்கின.

தேவதாசி தடைச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்ற தீர்மானத்தை 1927-ல் சிதம்பரத்தில் நடந்த தேவதாசிகள் ஒழிப்பு மாநாடு நிறைவேற்றியது. இதை தேவதாசி பெண்கள் அமைப்பினர் நடத்தினர். அதனால், முத்துலட்சுமி ரெட்டியை எதிர்த்து தேவதாசிகள் போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்றனர். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக இந்தச் சட்டம் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது.

சட்டம் கொண்டுவந்தபோதும் கோயிலில் இருந்து தேவதாசி முறையை முத்துலட்சுமி அம்மையாரால் ஒழிக்க முடியவில்லை. அதன் பிறகு, 1947-ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, பெண்களைக் கோயிலுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் வகையில் 'சென்னை தேவதாசி தடுப்பு மசோதா’ தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாகியது. அதன் பிறகே, தேவதாசி முறை கைவிடப்பட்டது.

இந்த மூன்று சட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு பின்னால், எண்ணிக்கையற்ற பெண்களின் வலியும் வேதனையும் படிந்து இருக்கிறது. இதை ஆவேசமாக எதிர்த்த அரசியல் தலைவர்கள், நீதிமான்கள், பழைமைவாதிகள் இன்று அடங்கி ஒடுங்கிப் போய்விட்டனர். பெண் கல்வி முதன்மையாக்கப்பட வேண்டும் என அன்று ஒலித்த குரல்தான், இன்று சகல துறைகளிலும் பெண்களின் சாதனைக்கு வித்திட்டு இருக்கிறது. அந்த வகையில் ராஜாராம் மோகன்ராய், ஹர் பிலாஸ்,  சாரதா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகிய நான்கு பேரும் என்றும் நன்றிக்கு உரியவர்கள்.

No comments:

Post a Comment