Search This Blog

Saturday, August 11, 2012

சுதந்திரத்தை இழக்கிறதா ரிஸர்வ் வங்கி?


இந்தியா சுதந்திரம் அடைந்த சில காலத்துக்குப் பிறகு ராஜாஜி ஒருமுறை சொன்னார். அதிர்ஷ்டவசமாக நம் நாட்டை டச்சுக்காரர்களோ, பிரான்ஸோ, போர்ச்சுகலோ ஆளவில்லை. பிரிட்டன் ஆண்டது" என்றார்.

பிரிட்டிஷ் அரசு செய்துவிட்டுப்போன பல அடிப்படை வசதிகளின் மீதுதான் நாம் மேற்கொண்டு சீர்திருத்தங்கள் செய்து இருக்கிறோம். நிர்வாக அமைப்பில் பிரிட்டன் உண்டாக்கிய Indian Civil Service (I.C.S.) என்பதை முன்னோடியாகக் கொண்டு நாம் 'Indian Administration Service (I.A.S.)' ‘இந்திய ஆட்சிப் பணி’ என்ற நிர்வாக அமைப்பை உருவாக்கினோம்.

அதே மாதிரி பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நாணயப் புழக்கம், அதன் கட்டுப்பாடு, வங்கிகள் செயல்படும் விதத்துக்கான விதிகள் முதலியவற்றைக் கண்காணிக்க 1935-ல் இந்திய ரிஸர்வ் வங்கியை ஒரு சட்டத்தின் மூலம் அமைத்தது. இந்த அமைப்பு பிரிட்டனில் இயங்கி வரும் Bank of England செயல்பாடுகளுக்கு ஒப்பானது.

1935- முதல் ரிஸர்வ் வங்கி மேற்சொன்ன பொறுப்புகளை முழுக்கவனத்துடன் கண்காணித்துச் செயலாற்றி வருகிறது. பிரிட்டிஷ் அரசு இந்திய ரிஸர்வ் வங்கியின் அன்றாடச் செயல்பாட்டில் குறுக்கிடாமல் அதற்கு முழு சுதந்திரம் அளித்து வந்திருக்கிறது. ரிஸர்வ் வங்கியின் நிர்வாகத் தலைவருக்கு ‘கவர்னர்’ என்ற பதவிப் பெயரையும் அளித்து அந்தப் பதவிக்குண்டான மரியாதையையும், சுதந்திரத்தையும் அவருக்குப் பரிபூரணமாக வழங்கியது.

ரிஸர்வ் வங்கியின் கவர்னர் பதவியை பல சிறந்த பொருளாதார நிபுணர்கள் வகித்திருக்கிறார்கள். குறிப்பாக சில பெயர்கள்: சி.டி. தேஷ்முக். (பின்னாளில் இவர் சுதந்திர இந்தியாவின் நிதி மந்திரியாக பதவி வகித்தார்) பி.ராமராவ், ஐ.ஜி. படேல், பிமல் ஜலான் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான நபர் நமது தற்போதைய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங்.

ஆரம்ப நாளிலிருந்து ரிஸர்வ் வங்கி எந்தவித அரசு குறுக்கீடும் இல்லாமல் தனது பொறுப்புகளைச் செவ்வனே செய்துவந்திருக்கிறது.

ஆனால் சமீபகாலத்தில் வெளியான சில செய்திகள் கவலையை அளிக்கின்றன. மத்திய அரசின் நிதித்துறை ரிஸர்வ் வங்கியைப் புறக்கணித்து விட்டு அரசு உடைமை ஆன பல வங்கிகளுக்கு நேரிடையாக கட்டளை இடுவதும் அவை எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்வதும் அந்த வங்கிகளின் கடன் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டுமென்று கட்டளை இடுவதாகவும் செய்திகள் கசிந்திருக்கின்றன.

அரசு நிதி அமைச்சகத்தின் இந்த நேர் தலையீட்டுக்கு ரிஸர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் டி. சுப்பாராவும், அவருக்கு முந்தைய கவர்னர் வேணுகோபால் ரெட்டியும் கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றனர். பொருளாதாரத் தினசரி ஒன்றுக்கு (Economic Times - 17-7.2012) வேணுகோபால் ரெட்டி அளித்துள்ள பேட்டியில் நிதி அமைச்சகத்தின் இந்த நேர்முகக் குறுக்கீடு விரும்பத்தக்கதல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

கொஞ்சம், கொஞ்சமாக ஆரம்பித்திருக்கும் இந்தக் குறுக்கீடு நாளாவட்டத்தில் அதிகமாகலாம் என்ற கவலை ஏற்படுகிறது. இதனால் ரிஸர்வ் வங்கியின் மாட்சிமை பாதிக்கப்படும். மத்திய அரசு இதை உணர்ந்து, இந்திய ரிஸர்வ் வங்கி சுதந்திரமாக இயங்க வேண்டிய தன்மையில் குறுக்கிடாமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது.

இதில் ஏற்கெனவே ரிஸர்வ் வங்கியின் கவர்னராக இருந்த நமது பிரதம மந்திரி மன்மோகன்சிங் கவனம் செலுத்த வேண்டும்.

வீ.கோபாலன்



No comments:

Post a Comment