Search This Blog

Wednesday, August 08, 2012

பிளாட் பார்க்கப் போறீங்களா..? உஷார்!

ண்மைக் காலமாக நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதுப்புது லே-அவுட்கள் தினமும் முளைக்கின்றன. ஆயிரக்கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். டிவி துணை நடிகைகளை வைத்து இடத்தின் அருமைபெருமைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்கள் வாங்கப் போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந்து இதை நன்றாகவே தெரிந்துகொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த அனுபவங்களின் தொகுப்பு இனி:
 
சொல்வது ஒன்று, காட்டுவது வேறு..!

அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என விளம்பரம் செய்வார்கள். விலை குறைவாய் இருக்கிறதே என நீங்கள் போனால், மாட்டிக்கொள்வீர்கள். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கண்ணப்பனின் அனுபவம் இது.

''வந்தவாசி அருகே அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என டிவி-யில் விளம்பரம் பார்த்தேன். ஒரு லட்ச ரூபாயில் இரண்டு மனை  வாங்கிப் போடலாம் என்று நினைத்து மனையைப் பார்க்கப் போனேன். அங்கு போனவுடன், '40 ஆயிரம் ரூபாய் பிளாட்கள் எல்லாமே வித்துடுச்சு. நான்கு பிளாட்தான் மிச்சம் இருக்கு’ என்று லே-அவுட்டின் கடைசியில் ஒரு இடத்தைக் காட்டினார்கள். அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டவுடன்,  ''இதைவிட நல்ல இடம் அதோ அங்க இருக்கு! ஆனா, அரை கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்'' என்றார்கள். 'அரை கிரவுண்டு 40 ஆயிரம் ரூபாய்ன்னுதானே சொல்லி கூட்டிக்கிட்டு வந்தீங்க’ன்னு கேட்டால், ''அதைத்தான் காட்டினோமே! உங்களுக்கு வேணுமின்னா அந்த இடத்தையே வாங்கிக்கிங்க!'' என்றார்கள். அவர்களின் மார்க்கெட்டிங் தந்திரத்தைப் புரிந்துகொண்ட நான் இடமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்'' என்றார் கண்ணப்பன்.

பத்திரச் செலவு இலவசம்..!

'இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் முழுப் பணம் கட்டினால் பத்திரப் பதிவு செலவு இலவசம்’ என சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பளிச்சென விளம்பரம் செய்கின்றன. இந்த பத்திரச் செலவு பெரும்பாலும் 5,000 ரூபாயாகத்தான் இருக்கும். இந்த உண்மை தெரியாத சிலர், சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு, அதைவிட பல மடங்கு பணத்தை இழக்கிறார்கள். பத்திரச் செலவு இலவசம் என யாராவது சொன்னால், முதலில் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வது நல்லது. தற்போது 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான இடங்களுக்கு பத்திரம் பதியத் தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறது அரசாங்கம். 1.5 - 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள (உண்மையில்) இடங்களுக்கு இது மாதிரியான சலுகைகளைத் தந்தால் மட்டுமே அவற்றை பரிசீலனை செய்யலாம்.
இலவசங்கள் மூலம் இழுப்பு..!
மந்தமாக இருக்கும் பிளாட்களின் விற்பனையை பரபரப்பாக்கவே இந்த இலவச இழுப்பு! அண்மையில் நண்பர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் தந்து ஒரு மனை வாங்கினார். அவர் வாங்கிய பிறகு அந்த இடத்தை யாருமே வாங்கவில்லையாம். ஆனால், ஒரு பிளாட் வாங்கினால் ஒரு ஸ்கூட்டி இலவசம்! இடத்தின் விலை 2.5 லட்ச ரூபாய்! என சமீபத்தில் அறிவிக்க, சில நாட்களிலேயே அத்தனை இடங்களும் விற்றுத் தீர்ந்ததாம். இடத்தின் விலை அநியாயத்துக்கு ஏற்றிவிட்டுத்தான் இப்படி இலவசங்களைத் தருகிறார்கள் என்பது தெரியாத சில அப்பாவிகள் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள்.
பெண்கள் சென்டிமென்ட்..!

இன்னும் சில நிறுவனங்கள் பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால், தங்க நாணயம், பட்டுப் புடவை என்கின்றன. இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் மனைக்கு இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் பட்டுப் புடவையை கூடுதலாக தருவதில் லே-அவுட் போட்டவர்களுக்கு எந்த நஷ்டமும் வராது. இந்த தந்திரம் தெரியாத பெண்கள், அந்த இடத்தை வாங்கியே தீரவேண்டும் என ஆண்களை டார்ச்சர் செய்வதுதான் கொடுமை!

சிப்காட் வருது!

ஏதாவது ஒரு பகுதியில் சிப்காட் வருவதாக அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பை பயன்படுத்தியே இடங்களை விற்றுவிடத் துடிக்கின்றன சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். அரசு அறிவித்த சிப்காட் பேட்டை பத்து, பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருக்க, இதோ, இங்கதான் வருது! ரொம்ப பக்கத்துலதான் இருக்கு! என்று சொல்லியே இடத்தை விற்றுவிடுகிறார்கள். தப்பித் தவறி ஏதாவது ஒரு தொழிற்சாலை இருக்கும்பட்சத்தில், அதையும்  சிப்காட் லிஸ்ட்டில் சேர்த்துச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு இடத்தில் 400 அடி சாலை வருகிறது, சிப்காட் வருகிறது என்று சொன்னால், அதெல்லாம் உண்மையா என்று தீர விசாரித்து, உறுதி செய்து கொள்ளாமல் அட்வான்ஸ் பணத்தை அவசரப்பட்டு தராதீர்கள்.

இருக்கு..! இல்லை..!
 
பல இடங்களில் கார்னர் பிளாட்களை ஏஜென்டுகள் அல்லது புரமோட்டர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே புக் செய்துவிடுகிறார்கள். நீங்கள் அந்த இடத்தைக் கேட்டால், ஆபீஸில் கேட்டு சொல்கிறேன் என்பார்கள். பிறகு, சார், நீங்க அதிர்ஷ்டசாலி! நீங்க கேட்ட இடமே கிடைச்சுடுச்சு! என்று கொஞ்சம் இழுத்தடித்துவிட்டு தருவார்கள். செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி இடம் விற்கும் முயற்சிதான் இது என்பது தெரியாமல், கார்னர் பிளாட் கிடைச்சுடுச்சு என்று சந்தோஷமாக இடத்தை வாங்கிக்கொண்டு போகிற நல்லவர்களும் பலர் உண்டு. 

பிரமாண்டத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்..!

லே-அவுட் ஆரம்பத்தில் அரண்மனை தோற்றத்தில் நுழைவுவாயில் இருக்கும். உள்ளே பிளாட்களை பிரித்துக் காட்டும் கற்கள் ஒழுங்காக நட்டு வைத்திருப்பார்கள். ரோடுகூட அருமையாகப் போட்டிருப்பார்கள். சில இடங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா கூட அமைத்திருப்பார்கள். லே-அவுட்டின் ஆரம்பத்தில் ஹாலோ பிளாக் மூலம் ஒரே ஒரு கட்டடத்தைக் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும். இதை எல்லாம் பார்த்து, நீங்கள் வாயைப் பிளந்தால், ஏமாறப் போகிறீர்கள் என்று அர்த்தம்! காரணம், இவையெல்லாம் பிளாட்கள் விற்றுத் தீர்ந்து முடிகிற வரைதான் இருக்கும்! எல்லா பிளாட்களும் விற்றுவிட்டால், ஹாலோ பிளாக் வீட்டை அப்படியே பிடுங்கிக் கொண்டு போய், புதிதாக பிளாட் போட்டிருக்கும் வேறு லே-அவுட்டில் கொண்டு போய் வைத்துவிடுவார்கள், ஜாக்கிரதை!

பஞ்சாயத்து அப்ரூவலா, உஷார்..!

காய்கறியைக் கூறுபோட்டு விற்கிற மாதிரி இடத்தை துண்டாக்கி விற்பதுதான்           பஞ்சாயத்து மனை அப்ரூவல் என்றாகிவிட்டது. இதற்கு முன் பஞ்சாயத்து பகுதியில் லே-அவுட் போட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட    பஞ்சாயத்துத் தலைவர், இந்த இடத்தைப் பிரித்து லே-அவுட் போட ஆட்சேபனை இல்லை என எழுதித் தரவேண்டும். இப்போது அந்த விதிமுறை இல்லை என்பதால் பெரும்பாலான பஞ்சாயத்து லே-அவுட்களில் பஞ்சாயத்து தலைவரின் அனுமதி இல்லாமலே லே-அவுட் போடப்படுகின்றன. பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் போட்டு லே-அவுட் போட அனுமதி கொடுக்கவில்லை அல்லது சம்பந்தப்பட்ட லே-அவுட்டில் சாலைகள் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனில் பிற்காலத்தில் வீடு கட்டும்போது சிக்கல்தான்!

சாப்பாட்டுக்கு காசு கொடு!

இடம் பார்க்க அழைத்துச் செல்ல வாகன வசதியை ஏற்பாடு செய்கின்றன சில நிறுவனங்கள். இப்படி அழைத்துச் செல்லப்படுகிறவர்கள், இடத்தைப் பார்த்துவிட்டு, எதுவும் வாங்கவில்லை எனில், ஆளுக்கு 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் தரவேண்டும் என்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள், வண்டிச் செலவு, மதிய சாப்பாடு, சாயந்திரம் டிபன், டீ செலவுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் தரவேண்டும் என்று கேட்கிறார்களாம். அண்மையில் தாம்பரத்திலிருந்து திண்டிவனத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர் இப்படி 500 ரூபாய் அழுதுவிட்டு வந்தாராம்.

 போலீஸில் புகார் செய்தால்..?

தகிடுதத்தம் செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது புகார் தர காவல் நிலையத்திற்குச் சென்றால், அதை வாங்க மறுக்கிறார்களாம் போலீஸ்காரர்கள். ''அது நல்ல நிறுவனமாச்சே! 25 வருஷமா ஒரு புகார் வந்ததில்லையே!'' என்று நம்மிடம் சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிபருடன் பேசி, பிரச்னையை சுமூகமாக முடிக்கிற மாதிரி முடித்து, காசு பார்த்துவிடுகிறார்களாம்! ரியல் எஸ்டே நிறுவனங்களுக்கும் லோக்கல் போலீஸுக்கும் பிஸினஸ் உறவு இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள்! ஆக, இடம் வாங்கும் விஷயத்தில் உஷாராக இருந்தால் நஷ்டப்படாமல் தப்பிக்கலாம் என்பது மட்டும் உண்மை!

2 comments:

  1. விரிவான, விளக்கமான தகவல்...
    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete