Search This Blog

Monday, July 02, 2012

கள்ள நோட்டு - எச்சரிக்கை

 
கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல நோட்டுதானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராதபடிக்கு  எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
 
 
''பொதுவாக ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம் இருக்கிறது. எனவே, இந்த நோட்டுகளை வாங்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்''  

மொத்தமாக வாங்கும்போது!

வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க பணத்தை ஏற்பாடு செய்யும்போது, பல இடங்களில் இருந்தும் பணத்தைப் புரட்டுவோம். அந்த சமயங்களில்  எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கும்போது, கடன் பெறும்போது வங்கிகளை மட்டுமே நாடுவது நல்லது. பிறரிடமிருந்து மொத்தமாக பணம் பெறும்போது அதை காசோலையாகவோ/வரைவோலையாகவோ வாங்குவது நல்லது.

அவசரம்!

சில சமயங்களில் நாம் அவசர அவசரமாக சில்லறை மாற்றுவோம். நமது  இந்த அவசரத்தைப் பயன்படுத்தி, கள்ள நோட்டுக்களை நம் தலையில் சிலர் கட்டி விடுவார்கள். இந்த  சமயங் களில் பரபரப்பை அடக்கிக் கொண்டு, சரியான ரூபாய் நோட்டுகளைத்தான் தருகிறார் களா என்று பார்த்து வாங்குவது கட்டாயம்.
இரவு கடைகள்!

கள்ள நோட்டு பேர்வழி கள் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் அதை புழக்கத் தில் விடுவார்கள். எனவே, இரவு நேரத்தில் இரட்டிப்பு எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.

மதுபானக் கடைகள்!
 
மதுக் கடைகளின் மூலம்தான் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வருகிறது. மதுக் கடைகளுக்கு வரும் குடிகாரர்களால் கள்ள நோட்டை கண்டுபிடிக்க முடியாததால், எளிதாக தந்து ஏமாற்றிவிடுகின்றனர். எனவே, குடிமகன்கள் உஷார்.

கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தரும் வழிகாட்டுதல்களை பட்டியலிட்டார் ரிசர்வ் வங்கி யின் மண்டல அலுவலக கருவூலப் பிரிவு அதிகாரி இளங்கோ.

தரம்: பருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட தனிச் சிறப்பான காகிதம் கொண்டு தயாரிக்கப்படும் பணத்தை எண்ணும்போது படபடவென சத்தம் உண்டாகும்.

வரிசை எண்: பணத்தின் வரிசை எண் புற ஊதா விளக்கொளியில் ஒளிரும் வண்ணம் ஜொலிக்கும் மையினால் அச்சடிக்கப்பட்டி ருக்கும். எண்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். எண்கள் சிவப்பு நிறத்தில் தடிமனாக இருக்கும். ஆயிரம் ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல்பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தில் சிவப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

நிறம் மாறும் மை: ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக் களில் நடுவில் அச்சிடப் பட்டிருக்கும் மதிப்பு இலக்க எண்கள் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சாய்த்துப் பார்த்தால் பச்சை நீல நிறமாக மாறிமாறித் தெரியும்.

பாதுகாப்பு இழை: மகாத்மா காந்தி படத்திற்கு இடப்புறம் இருக்கும் பாதுகாப்பு இழை வெளியில் பாதி தெரிந்தும், உள்ளே மறைந்தும் இருக்கும். வெளிச்சத்தில் பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். இதில் பாரத் என்று இந்தியிலும், ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

நீர்க் குறியீடு: ரூபாய் நோட்டின் இடப்புறம் உள்ள வெள்ளைப் பகுதியில் மகாத்மா காந்தியின் உருவம் ஸ்லைடு போல தெரியும்''.

என்னதான் தீர்வு?

மொத்தமாகப் பணத்தை வாங்கும்போது வங்கி முத்திரையிடப்பட்ட நோட்டுக் கட்டுகளை மட்டுமே வாங்கலாம்.கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவும் புற ஊதா கருவியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஐநூறு ரூபாய் விலையில்கூட இந்த கருவி கிடைக்கிறது.

ஒருவர் வழக்கத்துக்கு மாறாக அதிக செலவு செய்கிறார் எனில் அவரிடம் எச்சரிக்கையாகவும், அவரது  நடவடிக்கையில் கண்காணிப்புடனும் இருப்பது அவசியம். எச்சரிக்கையோடு இருந்தால் கள்ள நோட்டை உங்கள் கைகளுக்கு வராமல் தடுக்கலாமே!

விகடன் 


No comments:

Post a Comment