Search This Blog

Wednesday, July 18, 2012

எனது இந்தியா! (ரத்தக்கறை படிந்த வைரம்! )

 
ஆந்திர மாநிலத்தின் கோல்​கொண்​டாவுக்கு அருகில் உள்ள கொல்லூர் சுரங்கப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கோகினூர் வைரம், பாபர் முதல் நாதிர்ஷா வரை கைமாறிக் கைமாறிப் பயணம் செய்து, முடிவாக லண்டனில் முடங்கியிருக்கிறது. இந்த வைரத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்​பட்ட சதிகள், கொலைகள், துர்மரணங்கள், இதை ரத்தக்கறை படிந்த வைரம்’ என்று குறிப்பிடுகின்றன.
 கோகினூர் வைரத்தை யார் தோண்டி எடுத்தவர் என்ற விவரம்தெரிய​​வில்லை. ஆனால் அது, மால்வா அரசரிடம் இருந்தது என்பதில் இருந்தே கோகினூரின் கதை தொடங்குகிறது!

1306-ல் மால்வா மன்னரிடம் இருந்த கோகினூர் வைரம், காகதீயா அரசர்களுக்குக் கைமாறி இருக்​கிறது. அதன்பிறகு, அலாவுதீன் கில்ஜி, அவரிடம் இருந்து துக்ளக் கைப்பற்றினார். பிறகு இந்த வைரம் தைமூர் வசமானது. மீண்டும் டெல்லி சுல்தான்வசமானது 1526-ல். அதன் பிறகு, இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து கோகினூர் வைரத்தை பாபர் கைப்பற்றினார். அவரது காலத்துக்குப் பிறகு அது ஷாஜகான் வசமானது. 1739-ல் பாரசீக மன்னர் நாதிர் ஷா படையெடுத்து வந்து கோகினூ​ரையும் மயிலாசனத்தையும் அபகரித்துச் சென்றார்.

நாதிர் ஷாவிடம் இருந்து ஆப்கானின் அகமது ஷா-வுக்கு கோகினூர் சொந்த​மானது. பிறகு அது, குடும்பச் சண்டை காரணமாக, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்து கடைசி சீக்கிய மன்னரான துலீப் சிங் மூலம் இங்கிலாந்து மகாராணிக்குப் பரிசாகக் கிடைத்தது. அப்படி வைரம் இங்கிலாந்து போகக் கார​ணமாக இருந்தவர் டல்ஹவுசி பிரபு. கோகினூர் வைரம், 1852-ல் மீண்டும் பட்டை தீட்டப்பட்டது. அதன்பிறகு, எலிசபெத் ராணி அதை தனது கீரிடத்தில் பதித்து முடி சூட்டிக்கொண்டார். இன்றுவரை அது பிரிட்டிஷ் சொத்தாகவே இருக்கிறது.

கோகினூர் வைரம் கை மாறிய கதை ஒரு திரைப்படத்தை விடசுவாரஸ்​யமானது. இதில் பெரும்​பான்​மைக் கதைகள் யூகத்தில் உருவாக்கப்​பட்டவையே. 1530-ல் பாபர் இறந்து போனார். ஹுமாயுன் பதவிக் காலத்தில் ஷேர்கான் எனும் பழைய எதிரி, மொகலாயர்கள் மீது படை எடுத்தான். அதில் ஹுமாயுன் படுதோல்வி அடைந்தார்.

தன் மனைவி பிள்ளைகளுடன் கோகினூர் வைரத்தையும் எடுத்துக்கொண்டு ஹுமாயூன் ஈரானுக்குத் தப்பி ஓடினார். அப்போது அவரிடம் இருந்து வைரத்தைக் கைப்பற்றச் சதி நடந்தது. ஆனால் அவர், அதை பிரார்த்தனைப் பொருட்களுடன் ஒளித்துவைத்துக் காப்பாற்றி இருக்கிறார். முடிவில் ஈரானிய மன்னரிடம் படை உதவி கேட்டு, அதற்குப் பதிலாக கோகினூர் வைரத்தைப் பரிசாகத் தந்தார். இப்படியாக, வைரம் ஈரான் போய்ச் சேர்ந்தது.

ஈரான் படையின் உதவியால் மீண்டும் மொகலாய சாம்ராஜ்யம் கிடைத்தது. ஆனால், கோகினூர் வைரம் மட்டும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கோல்கொண்டா ராஜ்யம் புகழ்பெறத் தொடங் கியது. கோல்கொண்டா மன்னருடன் நட்பு வைத்துக்​கொள்ள ஈரான் மன்னர் விரும்பினார். அந்த நட்பின் அடையாளமாக கோகினூர் வைரம் கோல்கொண்டா மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.  இந்தக் காலகட்டத்தில் கோல் கொண்டா சுல்தானுக்கு மிர் ஜும்லா என்ற பாரசீக வணிகர் நண்பராக இருந்தார்.
 அவருக்கு எப்படியாவது கோல்கொண்டா சாம்ராஜ்யத்தின் மன்னராக வேண்டும் என்பது ஆசை. ஆகவே அவர் ஒளரங்கசீப்பின் ஆளாக மாறி கோல்கொண்டாவைத் தாக்க ஏற்பாடு செய்தார். இதனால் வைரம் ஒளரங்கசீப் வசமானது.  இப்படி வைரம் கை மாறும்போதெல்லாம் சாவையும் குருதிக் கறையையும் சந்தித்தே கடந்து வந்து இருக்கிறது.

17-ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டை ஆப்கானிஸ்தான் ஆட்சி செய்து வந்தது. ஆப்கானிய ஆளுனர்கள் ஈரானில் கொடூரமாக ஆட்சி செய்தார்கள். அதனால் ஈரான் மக்கள் குமுறலில் இருந்தார்கள்.

இந்தச் சமயத்தில் நாட்டின் இன்னொரு பக்கம் நாதிர் ஷா எனும் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையோரங்களில் ஆடு மேய்ப்பதும் இரவில் திருடர்களுடன் வழிப்பறி செய்வதுமாக இருந்தான்.  நாளடைவில் அந்தத் திருட்டுக் கும்பலுக்கு அவனே தலைவனாகவும் ஆனான்.

அவன் இளைஞர்களைத் தன்வசமாக்கி மெள்ளப் புகழ்பெறத் தொடங்கினான். அவனை நாட்டின் முக்கிய வணிகர்களும் அதிகாரிகளும் மறைமுகமாக ஆதரித்தனர். நாட்டின் அரசாளுமைக்குள் தலையிட்ட அவன் ஆப்கானியர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று முனைப்பாகச் செயல்பட ஆரம்பித்தான். இதன் காரணமாக 1736-ல் ஈரானிய மன்னன் டமாஸ்ப்பின் மகன் சபாவிட் ஷா என்ற சிறுவனை பொம்மை அரசனாக்கினான் நாதிர் ஷா. முடிவில், ஆப்கானியர்களை நாட்டை விட்டுத் துரத்திவிட்டு, 1736-ல் நாட்டின் மன்னராக தானே முடி சூடிக்கொண்டான்.

அதன் பிறகு நாதிர் ஷா, இந்தியா மீது படையெடுத்து வந்து தாக்கினான். வழியில் இருந்த காபூல், பெஷாவர், லாகூர் என ஒவ்வொன்றாக வீழ்ந்தது. முடிவில், டில்லி சாம்ராஜ்யமும் தோல்வி யுற்றது.

1739 மார்ச் மாதம் 9-ம் தேதி மொகலாய சாம் ராஜ்யம் மொத்தமாகச் சரண் அடைந்தது. அப்போது, மொகலாய அரசனாக இருந்தவர் நாசிர் முகமது. அவரிடம் இருந்து மயிலாசனம், கோகினூர் வைரம்... ஆகியவை  நாதிர் ஷா கைக்கு மாறியது!

அதைப்பற்றியும் ஒரு கதை இருக்கிறது. அது,  நாசிர் முகமது வைரத்தை தனது தலைப்பாகைக்குள் ஒளித்து வைத்திருந்தார். அதை ஒரு வேலைக்காரப் பெண் மூலம் ரகசியமாக அறிந்துகொண்ட நாதிர் ஷா, ஆட்சி கைமாறியதற்கு அடையாளமாக தலைப்பாகை மாற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறி நாசிர் முகமது வைத்திருந்த தலைப்பாகையை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதற்குள் இருந்த கோகினூர் வைரம் நாதிர் ஷா வசமானது. அதன் ஒளிரும் பிரகாசத்தைக் கண்டு கோகினூர் என்று கத் தினார் நாதிர் ஷா. கோகினூர் என்றால் மலையைப் போன்ற ஒளி என்றே அர்த்தம் என்கிறது கதை. இது நடந்த உண்மையா என்பது நிரூபிக்கப்படவில்லை.

கோகினூர் வைரத்துடன் பல ஆயிரம் இந்தியப் பெண்களையும், அடிமைகளாக ஈரானுக்குக் கொண்டு சென்றார் நாதிர் ஷா. யானைகள், குதிரை கள், ஒட்டகங்களும் ஆயிரக்கணக்கில் கொண்டு​ செல்லப்பட்டன. இந்தியாவில் இருந்து கொள்ளை அடித்து வரப்பட்ட செல்வம் காரணமாக நான்கு வருடங்கள் ஈரானில் வரிவிதிப்பது முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாதிர் ஷா முன்கோபி மற்றும் பெண்மோகி என்கிறார்கள். இவனது கொடுங்கோன்மை தாள​முடியாமல் அவர் தூங்கும்போது பாதுகாவலன் ஒருவன் தனது வாளால் அவரை வெட்டிக் கொன்று போட்டான். எங்கோ ஒரு மலை அடிவாரத்தில் ஆடு மேய்ப்பவராக வாழ்க்கையை தொடங்கி, மாமன்னரான நாதிர் ஷாவின் சகாப்தம் அதோடு முடிந்தது. அதன் பிறகு, கோகினூர் வைரம் ஆப்கானிய அரசன் அகமது ஷா அப்தாலி வசமானது. ஏறக்குறைய 80 வருடங்கள் வைரம் அவன் வசம் இருந்தது. பின்னர் அந்த வைரம், பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் கொடுக்கப் பட்டது.

1839-ல் மரணப் படுக்கையில் இருந்த ரஞ்சித் சிங் கோகினூர் வைரத்தை ஒரிசாவில் உள்ள ஜெகநாத் கோயிலுக்குத் தானமாக வழங்க வேண்டும் என்று  உயில் எழுதினார். ஆனால், அது நிறைவேற்றப் படவில்லை.

மஹாராஜா ரஞ்ஜித் சிங்கிடம் இருந்த கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்குப் பெற்றுத் தருவதில் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசிக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தப் பகிரங்க அபகரிப்பை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். டல்ஹவுசி தனது நண்பர் ஜியார்ஜ் கூப்பருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'நான் எனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகமாகப் பயன்படுத்தவில்லை. ராணிக்கு உரியதைத்தான் பெற்றுக் கொடுத்தேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஞ்சித் சிங்கின் ஐந்தாவது மனைவி ஜிந்த் கௌர், அவர்களின் பிள்ளையே இளவரசன் துலீப் சிங். சிறுவனான துலீப் சிங் கோகினூரை ஒப்படைக்க இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டான். அவனுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் பொது மருத் துவராக இருந்த டாக்டர் ஜான் ஸ்பென்ஸ் லாக்கின் அவரது மனைவி லீனா ஆகியோரும் உடன் பயணம் செய்தார்கள். கோகினூர் வைரம் பாதுகாப்பாக எச்.எம்.எஸ். மெடேயாவின் தலைமையிலான பாது காப்புடன் கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. ஜூலை 3, 1850 அன்று கோஹினூர் வைரத்தை ராணியிடம் ஒப்படைத்தார் துலீப் சிங்.

அதன்பிறகு, 1853-ம் ஆண்டு துலீப் சிங், கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்குப் போதுமான ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. அதைக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்தார். ஆனால் அவர் மீண்டும் 1888-ம் ஆண்டில் சீக்கிய மதத்துக்கு மாறினார்.

ராணி விக்டோரியாவில் இருந்து அந்த வைர மானது எப்போதும் அடுத்தடுத்த மகாராணிக்கு சொந்தமானதாக கை மாறிக்கொண்டே இருக்கிறது.

1851-ம் ஆண்டில் லண்டனின் ஹைட் பார்க்கில் நடைபெற்ற வைரக்கண்காட்சியில் பொதுமக்கள் கோஹினூர் வைரத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இன்று புதுப்பொலிவு ஊட்டப்பட்ட கோகினூர் வைரம், இங்கிலாந்தின் அரச பரம்பரை நகைகளில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எலிசபெத் ராணி முடிசூடி 60 ஆண்டுகள் ஆனதை இந்த ஆண்டு உலகமே கொண்டாடுகிறது. ஆனால் இன்றும், இந்தியர்கள் மனதில் நமக்கு உரிமையான கோகினூர் வைரம் எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ளதே என்ற ஆதங்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது!

No comments:

Post a Comment