Search This Blog

Wednesday, May 02, 2012

குக்கர் - இயங்குவது எப்படி?


இப்ப நாம் பார்க்கப்போறது, உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற்றி. ரொம்ப எளிமையான, அதேசமயம் ரொம்ப ரொம்ப உபயோகமான பாத்திரம் இது.பிரஷர் குக்கரின் வேலை அரிசி, பருப்பு, காய்கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும். அதுக்காக நீராவியை, அதாவது வாயு வடிவத்தில் இருக்கிற தண்ணீரைப் பயன்படுத்துகிறது குக்கர்.உணவுப் பொருள்களை வேகவைக்கிறதுக்கு நமக்கு குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத்தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும். ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் குக்கர் இருக்கிறது. ஏன்?இதுக்கு இரண்டு காரணம். முதலில் மற்ற பாத்திரங்களைவிட குக்கர் ரொம்ப வேகமாகச் செயல்படுகிறது, இதனால்சமைக்கிறவர்களுக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது.அடுத்த காரணம், குக்கரில் சமையல் செய்யும்போது நாம் அதுக்குப் பயன்படுத்துகிற எரிபொருளும் குறைவு. சமையல் சிக்கனமாக முடிந்துவிடுகிறது.குக்கர் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். குக்கரின் பாகங்களைக் கவனிக்கலாம். ஒரு பெரிய பாத்திரம், அதுக்குள்ளே சில சின்னப் பாத்திரங்கள், மேலே ஒரு மூடி, அதுக்கு ஒரு கைப்பிடி, அதன் தலையில் ஒரு ‘வெயிட்’, அப்புறம் ‘காஸ் கட்’ என்று சொல்லப்படுகிற ரப்பர் வளையம்.

இந்தப் பெரிய பாத்திரத்தில்தான் நாம் தண்ணீர் ஊற்றப் போகிறோம். அந்தத் தண்ணீர்தான் சூடாகி, நீராவியாக மாறுகிறது. உள்ளே சின்னப் பாத்திரங்களில் வைத்திருக்கிற அரிசி, பருப்பு, காய்கறி, இட்லியைச் சூடாக்கிச் சமைக்கிறது.சில குக்கர்களில் இந்தப் பாத்திரத்தின் கீழ்ப் பகுதியில் மட்டும் வேறு உலோகம் ஒன்றைப் பூசியிருப்பார்கள். ‘காப்பர் பாட்டம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, பாத்திரத்துக்குள்ளே நெருப்பு சீராகப் பரவுவதற்கு இது உதவி செய்கிறது.அடுத்து, அந்த மூடியைக் கவனித்துப் பாருங்கள், அதோட விளிம்புகள் அந்தப் பெரிய பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிற மாதிரி வடிவமைத்திருப்பார்கள். அதில் ரப்பர் வளையத்தைப் போட்டு மூடுவார்கள்.மூடிதான் ஏற்கெனவே கச்சிதமாகப் பொருந்துகிறதே, அப்புறம் எதுக்கு ரப்பர் வளையம்?என்னதான் மூடியைக் கச்சிதமாகத் தயாரித்தாலும், அழுத்தி மூடினாலும், அதில் ஆங்காங்கே சின்ன இடைவெளிகள் இருக்கும். குக்கருக்கு உள்ளே இருக்கிற தண்ணீர் சூடாகி, நீராவியாக மாறும்போது வெளியே வந்துவிடும். அதைத் தடுக்கிறதுக்குத்தான் ரப்பர் வளையம். அது இந்த இடைவெளியைக் கச்சிதமாக அடைத்துவிடும். வழக்கமான பாத்திரங்களுக்கும் குக்கருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது. மற்ற பாத்திரங்களில் தண்ணீர் சூடாகும்போது அது மெல்ல ஆவியாகி வெளியேறிவிடும், உணவுப் பொருள்கள் வேக அதிக நேரமாகும். ஆனால் குக்கரில், நீராவி உள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது. அதனால் அங்கே இருக்கிற உணவுப் பொருள்கள் வேகமாகச் சூடேறுகின்றன, சுலபமாக வேகின்றன.அடுத்து, இப்படி ஒரு பாத்திரத்துக்குள்ளே நீராவி உருவாகி அங்கேயே அடைபட்டுக் கிடக்கிறதால், அதோட அழுத்தம் அதிகரிக்கும், அதனால் தண்ணீரின் கொதிநிலையும் அதிகரிக்கும். இதுவும் உணவுப் பொருள்கள் வேகமாக வேக ஒரு முக்கியமான காரணம். ‘பிரஷர்’ குக்கர் என்ற பெயருக்குக் காரணம் புரிகிறதா?

ஒரு ‘வெயிட்’ இருக்கே, அது எதுக்கு?

பிரஷர் குக்கரில் மற்ற எல்லாப் பாகங்களையும்விட மிக முக்கியமானது, இந்த ‘வெயிட்’தான். அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பேசுவோம்.குக்கருக்குள்ளே தண்ணீர் ஆவியாகிறது, ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்கிறதால் அதோட அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது என்று பார்த்தோம். ஒரு கட்டத்தில் குக்கர் பாத்திரத்தால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது. அது அப்படியே வெடித்துச் சிதறிவிடும்.இதைத் தவிர்க்கிறதுக்குதான், ‘வெயிட்’ என்ற கனமான இரும்புக் குண்டைக் குக்கரின் மூடியில் பொருத்துகிறார்கள். குக்கருக்குள்ளே அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிப் போய்விடாமல் இது பார்த்துக்கொள்கிறது.குக்கர் மூடியில் ஒரு சின்ன ஓட்டை போட்டு, அதில் குழாய் ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கேதான் ‘வெயிட்’டைப் போடுகிறோம், அதாவது, அந்தச் சின்ன ஓட்டையை மூடிவிடுகிறோம். இதனால், குக்கர் முழுமையாக மூடப்படுகிறது.அதுக்கப்புறம் அடுப்பைப் பற்ற வைக்கிறோம், அதன் மேல் குக்கரை வைக்கிறோம், இந்தச் சூட்டினால் அந்த குக்கருக்குள்ளே இருக்கிற தண்ணீர் ஆவியாகும். நீராவி உருவாகும். அதோட அழுத்தம் அதிகரிக்கும். அந்த நீராவி இந்தச் சின்ன ஓட்டை வழியாக வெளியே வரப்பார்க்கும், ஆனால் ‘வெயிட்’ அதை வெளியே வரவிடாது.கொஞ்ச நேரத்தில் குக்கருக்குள்ளே அழுத்தம் மேலும் மேலும் அதிகரிக்க,நீராவிக்கு கூடுதல் பலம் வந்துவிடும். இந்த வெயிட்டை மேலே தள்ளிட்டு வெளியேறும். இதைத்தான் ‘விசில்’ என்கிறோம்.இப்படிக் கொஞ்சம் நீராவி வெளியே போனதும், குக்கருக்குள்ளே அழுத்தம் குறையும், உடனே சட்டென்று வெயிட் கீழே விழுந்து, ஓட்டையை மூடிவிடும். மறுபடி குக்கருக்குள் அழுத்தம் அதிகரிக்கும், மறுபடி வெயிட் மேலே போய் விசில் அடிக்கும், மறுபடி கீழே விழும், இப்படி மாறி மாறி நான்கைந்து விசில்சத்தம் கேட்டதும் சமையல் முடிந்தது என்று கணக்கு.இப்போது புரிகிறதா, ‘வெயிட்’ மட்டும் இல்லை என்றால், பிரஷர் குக்கர் வெறும் காலிடப்பா. அதைப் பயனுள்ள சமையல் பாத்திரமாக மாற்றுவது இந்தச் சின்ன இரும்புக் குண்டுதான்!

சமையல் முடிந்தது. குக்கரைத் திறக்கலாமா?

கொஞ்சம் பொறுங்கள். குக்கருக்குள்ளே ஏகப்பட்ட நீராவி அடைந்து கிடக்கிறது. அதெல்லாம் கொஞ்சம் அடங்கட்டும், வெயிட்டைத் திறந்து அழுத்தத்தைக் குறைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் திறக்க வேண்டும். இல்லை என்றால் அத்தனை நீராவியும் ‘என்னை ஏன் அடைச்சுவெச்சீங்க?’ என்று நம் மேல் பாய்ந்துவிடும்.

No comments:

Post a Comment