Search This Blog

Friday, May 25, 2012

ஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்

முதல் சர்ச்சை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 5 வீரர்கள் சஸ்பெண்ட் செயப்பட்டுள்ளனர். டி.பி.சுதீந்தர் (டெக்கான் சார்ஜர்ஸ்), மோனீஷ் மிஸ்ரா (புணே வாரியர்ஸ்), அமீத் யாதவ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஸ்ரீவஸ்தவா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), அபிநவ் பாலி ஆகியோர். இண்டியன் டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சூதாட்டம் தொடர்பாக ரகசிய நடவடிக்கையொன்றில் ஈடுபட்டது. எப்படி பாகிஸ்தான் வீரர்களை ஆசை வார்த்தைகள் சொல்லி தி நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற இங்கிலாந்து பத்திரிகை மடக்கியதோ அதுபோல கிரிக்கெட் வீரர்களிடம் நோ பால், வைட்களை வீச வேண்டுமென்று கூறி அவர்களைச் சிக்கவைத்துவிட்டது இண்டியன் டி.வி. ஐ.பி.எல். கிரிக்கெட், ரஞ்சிக் கோப்பை, உள்ளூர்ப் போட்டி என எந்த ஆட்டத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சொன்னபடி செயல்படத் தயாராக இருப்பதாக வீரர்கள் ஒப்புக் கொண்டதோடு, இந்திய கிரிக்கெட்டில் பெண்களை வைத்தும் காரியங்கள் சாதிக்கப்படுகின்றன என்றும் பேசியிருப்பதாக அறியப்படுகிறது. மேலும், ஐ.பி.எல்.லில் ஏலத் தொகையை விடவும் அதிகத் தொகை, கறுப்புப் பணமாக வீரர்களுக்கு வழங்கப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. இளம் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில், எல்லாமே நேர்மையாக நடக்கும் என்று நம்ப முடியாது. குறிப்பாக, ஐ.பி.எல். வந்த பிறகு இந்திய கிரிக்கெட் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறது. இதிலுள்ள ஒரு பிரச்னை, இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லாததுதான். வீரர்களின் தவறுக்குத் துணை போகும் கிரிக்கெட் நிர்வாகிகள், ஐ.பி.எல். அணிகளுக்குத் தண்டனைகள் அளிக்கப்படுவதில்லை. இதே பிரச்னைகள் அடுத்த வருடம் தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஸ்ரீனிவாசனும் ராஜிவ் சுக்லாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

2வது சர்ச்சை: மும்பையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா வென்றது. ஆட்டம் முடிந்தபின் மைதானத்துக்கு வந்த ஷாருக்கான், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஐந்து ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்டனர். சுமார் 20 முதல் 25 பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் நான் கோபமடைந்தேன்" என்று தம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார் ஷாருக்கான். இவர் செயலில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஷாருக் மைதானத்துக்குள் நுழைந்து தீவிரவாதச் செயலில் எதுவும் ஈடுபடப் போவதில்லை. மும்பை வாரியம், ஷாருக்கானுக்குத் தரவேண்டிய மரியாதையை நிச்சயம் அளித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பிரச்னையை நான்கு சுவருக்குள் முடித்திருக்கலாம். ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியமேயில்லை. அதை விடக் கொடுமை, ஐந்தாண்டு தண்டனை. ஷாருக் செய்ததுதான் தவறு என்றால் அபராதம் விதித்திருக்கலாம். எதற்காக இவ்வளவு தூரம் கொண்டு போய் பகைமையை வளர்த்திருக்கவேண்டும்?

3வது சர்ச்சை: பெங்களூருவிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஐ.பி.எல். வீரர் லூக் போமெர்ஸ்பாச், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றியைக் கொண்டாடியபோது, அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார், பிரச்னைகளை ஏற்படுத்தினாரென்று அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லையென்றாலும் ஐ.பி.எல்.லில் நடக்கும் உயர்ரக விருந்துகளால் ஏற்படும் விளைவுகளை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச கிரிக்கெட் மேட்சுகளின்போதும், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டதுண்டு. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான பணமும் புகழும் அவர்களை இந்நிலைக்குத் தள்ளிவிடுகிறது. கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது புராதன விஷயமாகி விட்டது. சச்சின், திராவிட் போன்று பண்பான கிரிக்கெட் வீரர்களை இக்காலத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.உலகக்கோப்பைக்கு உள்ள ஓர் அந்தஸ்து ஐ.பி. எல்.க்குக் கிடைத்திருக்கிறது. பணமும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகமாகும்போது பி.சி.சி.ஐ. மிகக் கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. ராணுவ ஒழுங்கு இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்னைகளால் ஐ.பி.எல். சின்னாபின்னமாகிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்களுக்கு ஐ.பி.எல். மேட்சுகளே எல்லாவிதமான பரபரப்புகளையும் அளித்துவிடுகின்றன. அதைத் தாண்டிய பரபரப்பும், சர்ச்சையும் ஐ.பி.எல்.க்கு அநாவசியம். வெளிப்படையான, கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தால் மட்டுமே ஐ.பி.எல். நூறாண்டு வாழும். இல்லாவிட்டால் கண்முன்னே சரிந்துபோகக்கூடிய அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

கேர்ள் ஃப்ரெண்டுக்காக அடித்த சிக்ஸர்

செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு ஏராளமான சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டாலும் இந்த வருட ஐ.பி.எல். சூப்பர் டூப்பர் ஹிட். ரசிகர்கள் அள்ளிக்கொண்டார்கள். இந்தமுறை அதிக மேட்சுகள் நடந்தாலும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் சோர்வே ஏற்படவில்லை. காரணம், மிகவும் பரபரப்பாக, கடைசி ஓவர் வரை சென்றன பல மேட்சுகள்.

ஆரம்பத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஃப்ளே ஆஃப்-க்குத் தகுதி பெறாது என்று சி.எஸ்.கே. அணியிலேயே பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. கடைசி மேட்சில், பஞ்சாப்புடன் தோற்றவுடன் தோனியும் ரைனாவும் அவரவர் ஊருக்குச் சென்று விட்டார்கள். சென்னை அணி வீரர்களும் ஹோட்டலில் தங்காமல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். சென்ற ஞாயிறன்று, பெங்களூருவை டெக்கான் தோற்கடித்தவுடன்தான் நிலைமை மாறிப்போனது. 

இந்த ஐ.பி.எல்.லில்தான் அணியின் நலனுக்காக கேப்டன் பதவியை சிலர் விட்டுக்கொடுத்தார்கள். முக்கியமாக பெங்களூரு அணியில், முரளி தரனுக்காக அணியிலிருந்து விலகினார் வெட்டோரி. சங்ககரா, கங்குலி, கில்கிறிஸ்ட் ஆகியோரும் சில மேட்சுகள் ஆடாமல் இருந்தார்கள். ஐ.பி.எல்.-லில் எல்லா மேட்சுகளிலும் ஆடிய பெருமையைத் தொடர்ந்து ரைனா தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஐந்து முறை ஃப்ளே ஆஃப்-க்குச் சென்ற ஒரே அணி, சென்னை மட்டுமே. ஆனாலும், சென்னை அணியில் உள்ள பல பலவீனங்கள் இன்னமும் செப்பனிடப்படாமலேயே இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாகியும் இன்னமும் சென்னை அணியால் உருப்படியான ஓர் இந்திய வேகப்பந்து வீச்சாளரைத் தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பெங்களூரு அணியில் 3 இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் இடம்பெறும்போது சென்னையின் நிலைமை தொடர்ந்து பரிதாப நிலையிலேயே இருக்கிறது. மேலும், மிகவும் சுமாரான ஸ்பின்னரான ஜகாதியை வைத்துக் கொண்டே இத்தனை நாளும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பின்னருக்குமா நாட்டில் தட்டுப்பாடு?

சென்ற வருடம் வார்னே விடைபெற்றார். இந்த வருடம் கில்கிறிஸ்ட் டாட்டா காண்பித்து விட்டார். கிரிக்கெட்டில் ஐ.பி.எல். ஓய்வு என்று புதிதாக ஒன்று உருவாகியிருக்கிறது. 

மலிங்கா பந்தில் பவுண்டரி அடிப்பதே கடினம். இந்த நிலையில் மனோஜ் திவாரி ஒரு சிக்ஸர் அடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். பேட்டி எடுத்தபோதுதான் தெரிந்தது, இந்த சிக்ஸருக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று. என்னால் மலிங்காவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்கவே முடியாது என்று என் கேர்ள் ஃப்ரெண்ட் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்காக அடித்த சிக்ஸர்தான் இது," என்றார் திவாரி.

பஞ்சாப் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா தனி முத்திரையைப் பதித்துள்ளார். தில்லி மாநிலத்தைச் சேர்ந்த அவானா ஏற்கெனவே ரஞ்சி ஆட்டங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்தவர். இப்போது ஐ.பி.எல். லிலும் தம்மை நிரூபித்திருக்கிறார். ஸ்பின்னர்களில் மேற்கு இந்தியத் தீவினைச் சேர்ந்த நரைன் மிகப் பெரிய புரட்சியையே உருவாக்கிவிட்டார். வார்னேவுக்குப் பிறகு அதிரடி மனோபாவம் கொண்ட ஒரு ஸ்பின்னராக இருக்கிறார் நரைன். இவ்வளவு துல்லியமாக ஒரு ஸ்பின்னரால் பந்துவீசமுடியுமா! என்று ஒவ்வொரு மேட்சிலும் ஆச்சர்யப்படுத்தினார். 

No comments:

Post a Comment