Search This Blog

Thursday, May 10, 2012

மண்டபம் பார்க்க போறீங்களா?


இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத்து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இருந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கும் அந்த மண்டபம் புக் ஆகி இருந்ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப்பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது திருமண மண்டபம் கட்டுகிறார்கள்" என்றார் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இன்று சாதாரண வசதிகள் கொண்ட, சிறிய திருமண மண்டபங்களுக்குக் கூட நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாடகை கேட்கிறார்கள். இதைத் தவிர மின் கட்டணம், அலங்காரம், தண்ணீர் அது, இது என்று சொல்லி இன்னும் ஆயிரக்கணக்கில் கறந்துவிடுகிறார்கள். எனவே, திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்வதை கவனமுடன் செய்ய வேண்டியது மிக அவசியம்.

சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் திருமணம் நடத்த வேண்டுமென்றால், நகரத்தின் எந்த ஏரியாவில் மண்டபம் வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனை மாப்பிள்ளை வீட்டாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நலம். பொதுவாக எல்லா திருமண மண்டபங்களிலும், டோக்கன் அட்வான்ஸ் என்பதெல்லாம் கிடையாது. புக் பண்ணும்போதே மொத்த தொகையையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதன் பின்னால், கேன்சல் செய்தால் பணம் வாபஸ் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே, மண்டபத்தை புக் பண்ணுவதற்கு முன்னால், தீர ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.திருமணத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப மண்டபத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண ஹாலில் எத்தனைப் பேர் அமரலாம், சாப்பாட்டுக் கூடத்தின் கொள்ளவு என்ன, தங்கும் அறைகள், குளியலறைகள், கழிப்பறைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனவா, குளியலறைகளில் வெந்நீர் வசதி உண்டா, குடி தண்ணீருக்கு என்ன ஏற்பாடு போன்றவற்றைத் தெரிந்து கொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.குறிப்பிட்ட மண்டபத்தில் தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், மூன்று, நான்கு முகூர்த்த நாட்களை முடிவு செய்துக் கொண்டு, அதில் மண்டபம் கிடைக்கக் கூடிய நாளில் முகூர்த்தத்தை முடிவு செய்யலாம். இல்லையெனில் முகூர்த்த நாளை முடிவு செய்துகொண்டு, அந்த நாளில் கிடைக்கிற மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.

மண்டப நிர்வாகமே மண்டபத்தில் உள்ள அறைகளுக்கான பூட்டு, சாவிகளைக் கொடுப்பார்கள், இல்லை நாமே எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எப்படியென்றாலும், எந்த அறை யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை முன்னதாகவே முடிவு செய்து, சம்மந்தப்பட்டவர்களிடம் பூட்டு, சாவியை ஒப்படைத்துவிட்டு, டூப்ளிகேட் சாவிகளை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொண்டால், எதிர்பாராமல், சாவி தொலைந்து போனாலும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.மண்டபத்தில் இருக்கும் அறைகளுக்கு நிர்வாகத்தினரே பூட்டும், சாவியும் கொடுப்பார்கள் என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கும் அறைகளைப் பூட்டுவதற்கு, நாமே சொந்தமாக பூட்டு, சாவி எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்துவது நல்லதொரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. அடுத்ததாக, கார் பார்க்கிங் வசதி, எமர்ஜென்ஸி வழி, சமையல் கூடத்தில் உள்ள வசதிகள் போன்றவற்றை நேரில் பார்த்து, ஏற்பாடு செய்வது நல்லது.மண்டப அலங்காரம், வாழை மரம், மின் அலங்காரம், குடி தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கான தண்ணீர் போன்றவை மண்டப வாடகையில் அடங்குமா அல்லது உபரியாக நாம் பணம் செலவழித்து செய்ய வேண்டுமா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண் டும். சில மண்டபங்களில், இந்த ஏற்பாடுகளுக்கு வெளியாரை அனுமதிப்பதில்லை. அதற்கேற்ப திருமண காண்டிராக்டரிடம் பேசி முடிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக போக்குவரத்து இடைஞ்சலாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்துவதில்லை. ஆனால், நீங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால், அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திலிருந்து ஊர்வல அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும்.


கௌதம் ராம்

3 comments:

  1. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
    பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக போக்குவரத்து இடைஞ்சலாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்துவதில்லை. ஆனால், நீங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால், அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திலிருந்து ஊர்வல அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும். --- ithukkum lanjam kettanganna???

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete