Search This Blog

Sunday, February 26, 2012

வாட்டத்தில் மின் வாரியம்


இன்னமும் மூன்று மாதத்தில் நிலைமை சரியாகும்" என்று சென்ற மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது மின்சாரத் தட்டுப்பாடு ஜூன், ஜூலையில் நிலைமை ஓரளவு சீரடையும். 2013ல் தமிழ்நாடு முற்றிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்" என்று சொல்லிவிட்டார். ஆக, தொடருது ஷாக்... என்னதான் கோளாறு? எங்கேதான் கோளாறு? தமிழ்நாட்டின் மின் உற்பத்தியின் நிறுவுதிறன் 10,300 மெகாவாட். ஆனால் உற்பத்தி ஆவதோ சுமார் 8000 மெகாவாட்தான். நமது தமிழகத்தின் தேவை 10,500 மெகா வாட்டிலிருந்து, 11,500 மெகாவாட் வரை போகும். கோடையின்போது, தேவை இன்னமும் ஆயிரம் மெகாவாட் உயர்ந்து 12,500 வரை கூட போகும். எனவே, நமது தினசரி பற்றாக்குறை 3000 முதல் 4000 மெகாவாட் வரை. இதை எப்படி ஈடு செய்கிறார்கள். காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், வெளி மாநில மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரம், இதர மின் கட்டுப்பாட்டு முறைகளாலும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றால் நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் பாக்கி வைத் திருப்பதால் வேண்டிய இடத்தில் மின்சாரம் வாங்க முடிய வில்லை. தவிர, தினசரி தேவை எகிறிக்கொண்டே போக... விளைவு பவர்கட்.
2008ல் தொடங்கப்பட்ட திட்டங்களான வல்லூர் மற்றும் வடசென்னை விஸ்தரிப்பு மின் நிலையங்கள் 2011ல் செயல்பட்டிருக்க வேண்டும். சரியான முனைப்பு காட்டாததால் உற்பத்தி தள்ளிப்போகிறது. வரும் ஜூனில் சுமார் 1000 மெகாவாட் இந்த இரு மின் நிலையங்களிலிருந்து எதிர் பார்க்கலாம்.  ஏப்ரல் 10 முதல் காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட் கிடைக்கக்கூடும். இதற்குள் கூடங்குளம் இயங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக 800 மெகாவாட் கிடைக்கும். தமிழகத்தின் தற்போதைய மோசமான மின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக, கூடங்குளத்தை இயக்க, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஏப்ரல், மே, ஜூனில் மேற்கண்ட வகையில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், நீர் மின்சாரம் மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்பது மற்றொரு கவலை. நான்கு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முழு அளவில் உற்பத்தி ஆகவில்லை. புதிய மின் நிலையங்களில், திட்டமிட்டபடி உற்பத்தியை முழு அளவில் உறுதி செய்ய, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். முதல்வரே நேரிடையாக விஸிட் செய்து வேகப்படுத்தலாம். பவர்கட்டை சீரமைக்கும் விதமாக உயர் அழுத்த மின் சந்தாதாரர்களுக்கு ‘பவர் விடுமுறை’ விடுவதுகூட பிரச்னையைக் குறைக்காது. ஏனென்றால் இரண்டுகோடி சந்தாதாரர்களில் சுமார் 5000 பேர்தான் உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்கள்.
‘கோமா’ நிலையில் இருக்கிறது மின்வாரியம். வரவு 23000 கோடி என்றால், செலவு 33000 கோடி. பற்றாக்குறை 10000 கோடி. செலவில் 20000 கோடி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே போகிறது. இது தவிர இலவச மின்சாரத்தால் வருடத்துக்கு 10000 கோடிக்கு மேல் இழப்பு.அரசாங்கம் சில கசப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக யாரும் எதிர்க்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலமும் இலவச மின்சாரம் கொடுப்பதில்லை. மின் உற்பத்தியை அதிகரித்து, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால், கட்டணம் உயர்ந்தால்கூட எதிர்ப்பு இருக்காது. விவசாயத்துக்கு தனி டிரான்ஸ்பார்மர், லைன் என்று குஜராத் பாணியில் செய்யலாம். மின் இழப்பை (line loss) குறைத்தால் உற்பத்தி கணிசமாகக் கூடும். தவிர மின்வாரியம் பற்றிய முழு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைக்க வசதியாக இருக்கும்.
‘கருத்துக் களம்’ ஆசிரியர்  தங்க துரை.  
தி.மு.க. வின் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர் ரத்தின சபாபதி.

No comments:

Post a Comment